திருப்புகழ் · 1290தீது உற்றே எழு (பொதுப்பாடல்கள்)theedhuutREezhu
தானத் தானன ...... தந்ததான
தினம் ஒரு திருப்புகழ் Dinam oru Thiruppugazh
தீதுற் றேயெழு ...... திங்களாலே
தீயைத் தூவிய ...... தென்றலாலே
போதுற் றாடும ...... நங்கனாலே
போதப் பேதைந ...... லங்கலாமோ
வேதத் தோனைமு ...... னிந்தகோவே
வேடப் பாவைவி ...... ரும்புமார்பா
ஓதச் சூதமெ ...... றிந்தவேலா
ஊமைத் தேவர்கள் ...... தம்பிரானே.
பத உரைword meanings
- தீது உற்றே எழு(ம்) திங்களாலே
இடையூறு செய்யவே எழுகின்ற சந்திரனாலும், - தீயைத் தூவிய தென்றலாலே
நெருப்பை அள்ளி வீசுகின்ற தென்றல் காற்றாலும், - போது உற்று ஆடும் அனங்கனாலே
தனது மலர்ப் பாணங்களைச் செலுத்தி விளையாடும் மன்மதனாலும், - போதப் பேதை நலங்கலாமோ
அறிவுள்ள என் பெண் துயர் உறலாமோ? - வேதத்தோனை முனிந்த கோவே
வேத நாயகனாகிய பிரமனை கோபித்த தலைவனே, - வேடப் பாவை விரும்பும் மார்பா
வேடுவர் மகளான வள்ளி விரும்புகின்ற திரு மார்பனே, - ஓதச் சூதம் எறிந்த வேலா
கடலிடையே இருந்த மாமரத்தை (சூரபத்மனை) பிளந்தெறிந்த வேலாயுதனே, - ஊமைத் தேவர்கள் தம்பிரானே.
(வல்லவனாகிய உன் முன்னே) வாயில்லாத ஊமைகளாய் உள்ள தேவர்களின் பெருமாளே.
குறிப்புகள் · notes
- இப்பாடல் அகத்துறையில், 'நாயக நாயகி' பாவத்தில் நாயகியின் நற்றாய் கூறுவதுபோல அமைந்தது. நிலவு, தென்றல், மன்மதன், மலர்ப் பாணங்கள் முதலியவை தலைவனின் பிரிவை மிகவும் அதிகமாக்கும் பொருட்கள்.
- This song is based on the Nayaka-Nayaki Bhavam, where the poet, assuming the heroine's mother's role, expresses the pang of separation from the hero, Murugan. The moonlight, the southerly breeze, the God of Love Manmathan and His flowery arrows are a few of the things that aggravate the agony of separation.




