திருப்புகழ் 1288 சருவிய சாத்திர (பொதுப்பாடல்கள்)

தனதன தாத்தனத் ...... தனதான
சருவிய  சாத்திரத்  ......  திரளான 
சடுதிக  ழாஸ்பதத்  ......  தமையாத 
அருமறை  யாற்பெறற்  ......  கரிதாய 
அனிதய  வார்த்தையைப்  ......  பெறுவேனோ 
நிருதரை  மூக்கறுத்  ......  தெழுபார 
நெடுதிரை  யார்ப்பெழப்  ......  பொருதோனே 
பொருளடி  யாற்பெறக்  ......  கவிபாடும் 
புலவரு  சாத்துணைப்  ......  பெருமாளே. 
  • சருவிய சாத்திரத் திரளான
    அது நன்கு பழக்கமான எல்லாச் சாத்திரங்களின் திரண்ட சாராம்சப் பொருளானது.
  • சடுதிகழ் ஆஸ்பதத்து அமையாத
    ஆறு என்று விளங்குகின்ற ஆதாரங்களில்* பொருந்தி அடங்காதது அது.
  • அருமறையாற் பெறற்கு அரிதாய
    அரிய வேதங்களால் பெறுவதற்கு அரிதானது அது.
  • அனிதய வார்த்தையைப் பெறுவேனோ
    இதயத்துக்கு எட்டாத அந்த உபதேச மொழியைப் பெறுகின்ற பாக்கியம் எனக்குக் கிட்டுமா?
  • நிருதரை மூக்கறுத்து
    அரக்கர்களை அவமானம் செய்து,
  • எழுபார நெடுதிரை யார்ப்பெழப் பொருதோனே
    ஏழு பெரிய கடல்களிலும் பேரொலி உண்டாகுமாறு போர் செய்தவனே,
  • பொருள் அடியாற் பெறக் கவிபாடும்
    உண்மைப் பொருளை உன் திருவடித் துணையால் பெறுவதற்காக பாடல்களைப் பாடும்
  • புலவர் உசாத்துணைப் பெருமாளே.
    புலவர்களுக்கு உற்ற துணைவனான பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com