திருப்புகழ் 1194 முனை அழிந்தது (பொதுப்பாடல்கள்)

தனன தந்தன தாத்தன தந்தன
தனன தந்தன தாத்தன தந்தன
தனன தந்தன தாத்தன தந்தன ...... தனதான
முனைய  ழிந்தது  மேட்டிகு  லைந்தது 
வயது  சென்றது  வாய்ப்ப  லுதிர்ந்தது 
முதுகு  வெஞ்சிலை  காட்டிவ  ளைந்தது  ......  ப்ரபையான 
முகமி  ழிந்தது  நோக்குமி  ருண்டது 
இருமல்  வந்தது  தூக்கமொ  ழிந்தது 
மொழித  ளர்ந்தது  நாக்குவி  ழுந்தது  ......  அறிவேபோய் 
நினைவ  யர்ந்தது  நீட்டல்  முடங்கலு 
மவச  மும்பல  ஏக்கமு  முந்தின 
நெறிம  றந்தது  மூப்பு  முதிர்ந்தது  ......  பலநோயும் 
நிலுவை  கொண்டது  பாய்க்கிடை  கண்டது 
சலம  லங்களி  னாற்றமெ  ழுந்தது 
நிமிஷ  மிங்கினி  யாச்சுதென்  முன்பினி  ......  தருள்வாயே 
இனைய  இந்திர  னேற்றமு  மண்டர்கள் 
தலமு  மங்கிட  வோட்டியி  ருஞ்சிறை 
யிடுமி  டும்புள  ராக்கதர்  தங்களில்  ......  வெகுகோடி 
எதிர்பொ  ரும்படி  போர்க்குளெ  திர்ந்தவர் 
தசைசி  ரங்களு  நாற்றிசை  சிந்திட 
இடிமு  ழங்கிய  வேற்படை  யொன்றனை  ......  யெறிவோனே 
தினைவ  னங்கிளி  காத்தச  வுந்தரி 
அருகு  சென்றடி  போற்றிம  ணஞ்செய்து 
செகம  றிந்திட  வாழ்க்கைபு  ரிந்திடு  ......  மிளையோனே 
திரிபு  ரம்பொடி  யாக்கிய  சங்கரர் 
குமர  கந்தப  ராக்ரம  செந்தமிழ் 
தெளிவு  கொண்டடி  யார்க்குவி  ளம்பிய  ......  பெருமாளே. 
  • முனை யழிந்தது மேட்டி குலைந்தது
    தைரியம் அற்றுப் போக, நானெனும் ஆணவம் அகல,
  • வயது சென்றது வாய்ப்ப லுதிர்ந்தது
    வயது மிகவும் ஏற, வாயிலுள்ள பற்கள் உதிர,
  • முதுகு வெஞ்சிலை காட்டி வளைந்தது
    முதுகு வளைந்த வில்லைப் போல் கூன் விழ,
  • ப்ரபையான முகம் இழிந்தது
    ஒளி வீசிய முகம் மங்கிப்போய் தொங்க,
  • நோக்கும் இருண்டது
    பார்வையும் இருளடைய,
  • இருமல் வந்தது தூக்கமொ ழிந்தது
    இருமல் வந்து, தூக்கம் இல்லாமல் போக,
  • மொழித ளர்ந்தது நாக்குவி ழுந்தது
    பேச்சு தளர, நாக்கு செயலற்று விழ,
  • அறிவேபோய் நினைவ யர்ந்தது
    புத்தி கெட்டுப்போய் ஞாபக மறதி ஏற்பட,
  • நீட்டல் முடங்கலும்
    காலை நீட்டுவதும் மடக்குவதுமாக ஆகி,
  • அவசமும்பல ஏக்கமும் உந்தின
    மயக்கமும், பல கவலைகளும் ஏற்பட்டு,
  • நெறிமறந்தது மூப்பு முதிர்ந்தது
    ஒழுக்கவழி மறந்து, கிழத்தன்மை முற்றி,
  • பலநோயும் நிலுவை கொண்டது
    பலவித வியாதிகள் நிலையாகப் பீடிக்க,
  • பாய்க்கிடை கண்டது
    பாயில் நிரந்தரப் படுக்கையாகிவிட,
  • சலமலங்களின் நாற்றமெழுந்தது
    மல மூத்திரங்களின் துர்நாற்றம் எழ,
  • நிமிஷ மிங்கினி யாச்சுது
    இன்னும் ஒரே நிமிஷத்தில் எல்லாம் ஆயிற்று
  • என் முன்பு
    (உயிர் போய் விடும்) என்று உலகத்தார் பேசுவதற்கு முன்பு,
  • இனிது அருள்வாயே
    நல்லவிதமாக அருள்வாயாக.
  • இனைய இந்திர னேற்றமும்
    வருந்துகிற இந்திரனின் மேன்மையும்,
  • அண்டர்கள் தலமு மங்கிட வோட்(டி)
    தேவர்கள் உலகமும் ஒளி மங்கிட அவர்களை ஓட்டி,
  • இருஞ்சிறையிடும் இடும்புள ராக்கதர் தங்களில்
    கடும் சிறையிடும் கொடுமையான அரக்கரில்
  • வெகுகோடி எதிர்பொரும்படி போர்க்குள் எதிர்ந்தவர்
    பலகோடி பேர் எதிரே சண்டையிட, போர்க்களத்தில் எதிர்த்தவர்களின்
  • தசைசிரங்களு நாற்றிசை சிந்திட
    சதைகளும் தலைகளும் நாலா பக்கமும் சிதறிட
  • இடிமுழங்கிய வேற்படையொன்றனை எறிவோனே
    இடி போல் ஒலித்த வேலாயுதத்தை வீசியவனே,
  • தினைவனங்கிளி காத்த சவுந்தரி
    தினைப்புனத்தில் கிளிகள் வாராமல் காத்த அழகி வள்ளியின்
  • அருகு சென்றடி போற்றிமணஞ்செய்து
    பக்கத்தில் சென்று அவளது திருவடியைப் போற்றி மணந்து
  • செகமறிந்திட வாழ்க்கை புரிந்திடும் இளையோனே
    உலகறிய வாழ்க்கை நடத்தும் இளையோனே,
  • திரிபுரம்பொடி யாக்கிய சங்கரர் குமர
    திரிபுரத்தை எரித்துச் சாம்பலாக்கிய சங்கரர் மகனே,
  • கந்தபராக்ரம
    கந்தா, பராக்கிரம மூர்த்தியே,
  • செந்தமிழ் தெளிவு கொண்டு அடியார்க்கு விளம்பிய பெருமாளே.
    செந்தமிழை தெளிவோடு அடியார்க்கு உபதேசித்த பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com