திருப்புகழ் 1122 பொற் பூவை (பொதுப்பாடல்கள்)

தத்தா தத்தா தத்தா தத்தா
தத்தா தத்தத் ...... தனதான
பொற்பூ  வைச்சீ  ரைப்போ  லப்போ 
தப்பே  சிப்பொற்  ......  கனிவாயின் 
பொய்க்கா  மத்தே  மெய்க்கா  மப்பூ 
ணைப்பூண்  வெற்பிற்  ......  றுகில்சாயக் 
கற்பா  லெக்கா  வுட்கோ  லிக்கா 
சுக்கே  கைக்குத்  ......  திடுமாதர் 
கட்கே  பட்டே  நெட்டா  சைப்பா 
டுற்றே  கட்டப்  ......  படுவேனோ 
சொற்கோ  லத்தே  நற்கா  லைச்சே 
விப்பார்  சித்தத்  ......  துறைவோனே 
தொக்கே  கொக்கா  கிச்சூ  ழச்சூர் 
விக்கா  முக்கத்  ......  தொடும்வேலா 
முற்கா  லத்தே  வெற்பேய்  வுற்றார் 
முத்தாள்  முத்தச்  ......  சிறியோனே 
முத்தா  முத்தீ  யத்தா  சுத்தா 
முத்தா  முத்திப்  ......  பெருமாளே. 
  • பொன் பூவைச் சீரைப் போலப் போதப் பேசிப் பொன் கனி வாயின்
    அழகிய நாகண வாய்ப்புள்ளின் சீரான குரலைப் போன்ற குரலுடன், பொருந்தும்படி அழகிய கொவ்வைக் கனி போன்ற வாயினால் செவ்வையாகப் பேசி,
  • பொய்க் காமத்தே மெய்க்கு ஆம் அப் பூணைப் பூண் வெற்பில் துகில் சாய
    நிலையில்லாத சிற்றின்பத்தின் பொருட்டு, (தங்கள்) உடலுக்குத் தக்கதான அந்த ஆபரணங்களை அணிந்துள்ள, மலை போன்ற மார்பகங்ககள் மீது ஆடை சாய்ந்து நெகிழ,
  • கற்பால் எக்கா உட்கோலிக் காசுக்கே கை குத்து இடு(ம்) மாதர்
    ஆணையிட்டுத் தாக்கி, மனத்தில் உள்ள எண்ணங்களை வைத்து கொண்டு, பொருள் வேண்டியே கை கலந்து குத்துச் சண்டை செய்யும் விலைமாதர்களின்
  • கட்கே பட்டே நெட்டு ஆசைப் பாடு உற்றே கட்டப் படுவேனோ
    கண்களுக்கே வசப்பட்டு, பெரும் ஆசை வினைகளில் ஈடுபட்டு நான் துன்பப்படுவேனோ?
  • சொல் கோலத்தே நல் காலைச் சேவிப்பார் சித்தத்து உறைவோனே
    சொல் அலங்காரத்துடன், உனது சிறப்புற்ற திருவடிகளைத் தொழுபவர்களுடைய உள்ளத்தில் வீற்றிருப்பவனே,
  • தொக்கே கொக்காகிச் சூழ அச் சூர் விக்கா முக்கத் தொடும் வேலா
    தனது உடலை மாமரமாக்கிச் சூழ்ச்சி செய்த அந்தச் சூரன் திண்டாட்டத்தால் வேதனைப்படும்படியாக வேலயுதத்தைச் செலுத்தியவனே,
  • முற்காலத்தே வெற்பு ஏய்வுற்றார் முத்தாள் முத்தச் சிறியோனே
    ஆதி காலம் முதல் கயிலைமலையில் அமர்பவரான சிவபெருமானும், முத்தாம்பிகை எனப்படும் தேவியும் முத்தமிட்டு மகிழும் குழந்தையே,
  • முத்தா முத்தீ அத்தா சுத்தா முத்தா முத்திப் பெருமாளே.
    முத்துப் போல அருமை வாய்ந்தவனே, மூன்று வகையான* அக்கினி வேள்விக்குத் தலைவனே, தூய்மையானவனே, பற்றற்றவனே, முக்தியைத் தரும் பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com