திருப்புகழ் · 1121பொற்கோ வைக்கே (பொதுப்பாடல்கள்)

poRtkOvaikkE

தத்தா தத்தா தத்தா தத்தா
தத்தா தத்தத் ...... தனதான
பொற்கோ வைக்கே பற்கோ வைக்கே
பொய்ப்போ கத்தைப் ...... பகர்வார்தம்
பொய்க்கே மெய்க்கே பித்தா கிப்போ
கித்தே கைக்குப் ...... பொருள்தேடித்
தெற்கோ டிக்கா சிக்கோ டிக்கீழ்
திக்கோ டிப்பச் ...... சிமமான
திக்கோ டிப்பா ணிக்கோ டித்தீ
வுக்கோ டிக்கெட் ...... டிடலாமோ
தற்கோ லிப்பா விப்பார் நற்சீ
ரைச்சா ரத்தற் ...... பரமானாய்
தப்பா முப்பா லைத்தே டித்தே
சத்தோர் நிற்கத் ...... தகையோடே
முற்கா னப்பே தைக்கா கப்போய்
முற்பால் வெற்பிற் ...... கணியானாய்
முத்தா முத்தீ யத்தா சுத்தா
முத்தா முத்திப் ...... பெருமாளே.

பத உரை · word meanings

  • பொன் கோவைக்கே பல் கோவைக்கே
    பொன் காசு வரிசைகளுக்காகவும், வேறு பல விதமான வரிசைகளுக்காகவும்,
  • பொய்ப் போகத்தைப் பகர்வார் தம்
    நிலையற்ற சிற்றின்ப சுகத்தை விலை பேசுபவர்களுடைய
  • பொய்க்கே மெய்க்கே பித்தாகி
    பொய் மொழிகளுக்கும், உடல் அழகுக்கும் காம வெறிகொண்டு,
  • போகித்து ஏகைக்கு பொருள் தேடி
    காம இன்பத்தை அநுபவித்துச் செல்வதற்கு வேண்டிய பொருளைத் தேடுவதற்காக,
  • தெற்கு ஓடி காசிக்கு ஓடி
    தென் திசையிலுள்ள ஊர்களுக்கு ஓடியும், (வடக்கிலுள்ள) காசி முதலிய ஊர்களுக்கு ஓடியும்,
  • கீழ் திக்கு ஓடி பச்சிமமான திக்கு ஓடி
    கிழக்கு, மேற்கு ஆகிய திசைகளில் உள்ள ஊர்களுக்கு ஓடியும்,
  • பாணிக்கு ஓடி தீவுக்கு ஓடிக் கெட்டிடலாமோ
    (கப்பலேறித்) திரை கடலோடியும், அக்கடலிலுள்ள பல தீவுகளுக்கு ஓடியும் நான் வீணே அழிந்து போகலாமோ?
  • தற்கோலி பாவிப்பார் நல் சீரைச் சார
    உன்னைத் தியானித்து (தமது) சிந்தையில் வைப்பவர்கள் மேலான நற் கதியை அடைவதற்கு,
  • தற்பரம் ஆனாய்
    அவர்கள் வழிபடும் பரம் பொருள் ஆனவனே,
  • தப்பா முப்பாலைத் தேடி
    தவறாமல் நாள்தோறும், அறம், பொருள், இன்பம் என்னும் மூன்று வாழ்க்கைக் குறிக்கோள்களைத் தேடி வருகின்ற
  • தேசத்தோர் நிற்கத் தகையோடே
    மக்கள் ஒருபக்கத்தில் நிற்க*, அருளுடனே
  • முன் கானப் பேதைக்காகப் போய்
    முன்பு காட்டிலிருந்த பெண் வள்ளியின்பொருட்டு நீயே வலியச் சென்று,
  • முன் பால் வெற்பில் கணி ஆனாய்
    அவளின் முன்னே வள்ளி மலையில் வேங்கை மரமாக நின்றவனே,
  • முத்தா முத்தீ அத்தா சுத்தா
    முத்துப்போன்ற அருமையானவனே, மூன்று வகையான** அக்கினி வேள்விக்குத் தலைவனே, பரிசுத்தமானவனே,
  • முத்தா முத்திப் பெருமாளே.
    பற்றற்றவனே, முக்தியைத் தரவல்ல பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

credits