திருப்புகழ் 1029 கூறும் மார வேள் (பொதுப்பாடல்கள்)

தான தான தானான தானத் ...... தனதான
கூறு  மார  வேளார  வாரக்  ......  கடலாலே 
கோப  மீது  மாறாத  கானக்  ......  குயிலாலே 
மாறு  போலு  மாதாவின்  வார்மைப்  ......  பகையாலே 
மாது  போத  மாலாகி  வாடத்  ......  தகுமோதான் 
ஏறு  தோகை  மீதேறி  யாலித்  ......  திடும்வீரா 
ஏழு  லோகம்  வாழ்வான  சேவற்  ......  கொடியோனே 
சீறு  சூரர்  நீறாக  மோதிப்  ......  பொரும்வேலா 
தேவ  தேவ  தேவாதி  தேவப்  ......  பெருமாளே. 
  • கூறும் மார வேள் ஆரவாரக் கடலாலே
    புகழ் பெற்ற மார வேளாகிய மன்மதனாலும், பேரொலி செய்யும் கடலாலும்,
  • கோப மீது மாறாத கானக் குயிலாலே
    என் மீது கோபம் நீங்காத, இசை பாடும், குயிலாலும்,
  • மாறு போலும் மாதாவின் வார்மைப் பகையாலே
    என் மீது விரோதம் பூண்டவள் போலுள்ள தாயின் நியாயமான பகையாலும்,
  • மாது போத மால் ஆகி வாடத் தகுமோதான்
    பெண்ணாகிய நான் அறிவு மயக்கம் கொண்டு வாடுதல் நியாயமாகுமோ?
  • ஏறு தோகை மீது ஏறி ஆலித்திடும் வீரா
    அழகிய தோகை மயிலின் மேல் ஏறி வீராவேசம் செய்யும் வீரனே,
  • ஏழு லோகம் வாழ்வான சேவல் கொடியோனே
    ஏழு உலகங்களும் வாழ்வதற்கு உதவும் சேவற் கொடியோனே,
  • சீறு சூரர் நீறு ஆக மோதிப் பொரும் வேலா
    கோபித்து எழுந்த சூரர்கள் பொடியாகும்படி தாக்கி சண்டை செய்த வேலனே,
  • தேவ தேவ தேவாதி தேவப் பெருமாளே.
    தேவ தேவனே, தேவாதி தேவர்களுக்கும் பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com