திருப்புகழ் 1002 கடலை பயறொடு (பொதுப்பாடல்கள்)

தனன தனதன தனதன தனதன
தனன தனதன தனதன தனதன
தனன தனதன தனதன தனதன ...... தனதான
கடலை  பயறொடு  துவரையெ  ளவல்பொரி 
சுகியன்  வடைகனல்  கதலியி  னமுதொடு 
கனியு  முதுபல  கனிவகை  நலமிவை  ......  யினிதாகக் 
கடல்கொள்  புவிமுதல்  துளிர்வொடு  வளமுற 
அமுது  துதிகையில்  மனமது  களிபெற 
கருணை  யுடனளி  திருவருள்  மகிழ்வுற  ......  நெடிதான 
குடகு  வயிறினி  லடைவிடு  மதகரி 
பிறகு  வருமொரு  முருகசண்  முகவென 
குவிய  இருகர  மலர்விழி  புனலொடு  ......  பணியாமற் 
கொடிய  நெடியன  அதிவினை  துயர்கொடு 
வறுமை  சிறுமையி  னலைவுட  னரிவையர் 
குழியில்  முழுகியு  மழுகியு  முழல்வகை  ......  யொழியாதோ 
நெடிய  கடலினில்  முடுகியெ  வரமுறு 
மறலி  வெருவுற  ரவிமதி  பயமுற 
நிலமு  நெறுநெறு  நெறுவென  வருமொரு  ......  கொடிதான 
நிசிசர்  கொடுமுடி  சடசட  சடவென 
பகர  கிரிமுடி  கிடுகிடு  கிடுவென 
நிகரி  லயில்வெயி  லெழுபசு  மையநிற  ......  முளதான 
நடன  மிடுபரி  துரகத  மயிலது 
முடுகி  கடுமையி  லுலகதை  வலம்வரு 
நளின  பதவர  நதிகுமு  குமுவென  ......  முநிவோரும் 
நறிய  மலர்கொடு  ஹரஹர  ஹரவென 
அமரர்  சிறைகெட  நறைகமழ்  மலர்மிசை 
நணியெ  சரவண  மதில்வள  ரழகிய  ......  பெருமாளே. 
  • கடலை பயறொடு துவரை எள் அவல் பொரி சுகியன் வடை க(ன்)னல் கதலி இ(ன்)னமுதொடு
    கடலை, பயறு இவைகளுடன், துவரை, எள், பொரி, சுகியன், வடை, கரும்பு, வாழை இனிய அமுது போன்ற சுவையுடன்
  • கனியும் முது பல கனி வகை நலம் இவை இனிதாகக் கடல் கொள் புவி முதல் துளிர்வொடு வளம் உற
    பழுத்துள்ள முதிர்ந்த பலவிதமான பழ வகைகள் நல்லபடியாக இவைகளை இன்பத்துடன், கடலால் சூழப்பட்ட பூமியில் உள்ளவர்கள் முதல் யாவரும் தழைத்து வளப்பம் பெறுவதற்காக,
  • அமுது துதி கையில் மனம் அது களி பெற கருணையுடன் அ(ள்)ளி திருவருள் மகிழ்வுற
    அமுதாக தனது துதிக்கையில் மனம் மகிழ்ச்சி பெற கருணை மிகுந்து அள்ளி எடுத்து திருவருள் பாலிக்க,
  • நெடிதான குடகு வயிறினில் அடைவிடு மத கரி பிறகு வரும் ஒரு முருக சண்முக என
    பெரிய குடம் போன்ற வயிற்றினில் அடைக்கின்ற மத யானை போன்ற கணபதியின் பின் தோன்றிய ஒப்பற்ற முருகனே, ஷண்முகனே என்று
  • குவிய இரு கரம் மலர் விழி புனலொடு பணியாமல்
    இரண்டு கைகளும் குவிய, மலர்ந்த கண்களிலிருந்து நீர் பெருக, உன்னைப் பணியாமல்,
  • கொடிய நெடியன அதி வினை துயர் கொடு வறுமை சிறுமையின் அலைவுடன்
    கொடியதும் பெரிதானதுமான மிக்க வினையால் ஏற்படும் துயரத்துடன், வறுமையால் வரும் தாழ்வினால் மனம் அலைச்சல் அடைந்து,
  • அரிவையர் குழியில் முழுகியும் அழுகியும் உழல் வகை ஒழியாதோ
    விலைமாதர்களின் வஞ்சகப் படுகுழியில் முழுகியும், பாழடைந்தும் திரிகின்ற தன்மை என்னைவிட்டு நீங்காதோ?
  • நெடிய கடலினில் முடுகியெ வரம் உறு மறலி வெரு உற ரவி மதி பயம் உற
    பெரிய கடல் போல விரைந்து எழுந்து (உயிர்களைக் கவரும்) வரம் பெற்ற யமன் பயப்படவும், சூரியனும் சந்திரனும் பயப்படவும்,
  • நிலமும் நெறு நெறு நெறு என வரும் ஒரு கொடிதான நிசிரர் கொடுமுடி சட சட சட என
    பூமியும் நெறு நெறு என அதிரவும் போர்க்களத்துக்கு வந்த கொடியர்களான அசுரர்களின் கொடிய தலைகள் சட சட சட என்று அதிர்ந்து வீழவும்,
  • பகர கிரி முடி கிடு கிடு கிடு என
    சொல்லப்படும் எட்டு மலைகளின் சிகரங்கள் கிடு கிடு என்று அதிர்ச்சி உறவும்,
  • நிகர் இல் அயில் வெயில் எழு பசுமைய நிறம் உளதான நடனம் இடு(ம்) பரி துரகதம் மயில் அது
    உவமை இல்லாத வேலாயுதத்துடன், ஒளி வீசும் பச்சை நிறமுள்ளதும் நடனம் செய்யும் வாகனமான குதிரை போன்ற மயில் மீது ஏறி
  • முடுகி கடுமையில் உலகதை வலம் வரும் நளின பத
    வேகமாக உக்கிரத்துடன் புவியை வலம் வந்த தாமரை போன்ற திருவடிகளை உடையவனே,
  • வர நதி குமு குமு என முநிவோரும் நறிய மலர் கொடு ஹர ஹர ஹர என
    ஜீவநதியாகிய கங்கை குமு குமு என்று கொந்தளிக்க, முனிவர்களும் வாசனை மிகுந்த மலர்களோடு ஹர ஹர என்று போற்ற,
  • அமரர் சிறை கெட நறை கமழ் மலர் மிசை ந(ண்)ணியே
    தேவர்கள் சிறை நீங்க, நறு மணம் வீசும் தாமரை மலர் மீது தங்கியிருந்து
  • சரவணம் அதில் வளர் அழகிய பெருமாளே.
    சரவணப் பொய்கையில் வளர்ந்த அழகிய பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com