திருப்புகழ் · 996ஏகமாய் பலவாய் (பொதுப்பாடல்கள்)

EgamAipalavAi

தான தாத்தன தாத்தன தான தாத்தன தாத்தன
தான தாத்தன தாத்தன ...... தனதானா
ஏக மாய்ப்பல வாய்ச்சிவ போக மாய்த்தெளி வாய்ச்சிவ
மீதெ னாக்குரு வார்த்தையை ...... யுணராதே
ஏழு பார்க்கும்வி யாக்கிரன் யானெ னாப்பரி தேர்க்கரி
யேறு மாப்பிறு மாப்புட ...... னரசாகி
தோகை மார்க்கொரு காற்றொலை யாத வேட்கையி னாற்கெடு
சோர்வி னாற்கொடி தாக்கையை ...... யிழவாமுன்
சோதி காட்டவ ராச்சுத நாத னார்க்கருள் போற்றிய
தூரி தாப்பர மார்த்தம ...... தருள்வாயே
நாக மேற்றுயில் வார்க்கய னான பேர்க்கரி யார்க்கொரு
ஞான வார்த்தையி னாற்குரு ...... பரனாய
நாத நாட்டமு றாப்பல காலும் வேட்கையி னாற்புகல்
நாவ லோர்க்கரு ளாற்பத ...... மருள்வாழ்வே
வேக மேற்கொ ளராப்புடை தோகை மேற்கொடு வேற்கொடு
வீர மாக்குலை யாக்குல ...... வரைசாய
மேலை நாட்டவர் பூக்கொடு வேல போற்றியெ னாத்தொழ
வேலை கூப்பிட வீக்கிய ...... பெருமாளே.

பத உரை · word meanings

  • ஏகமாய் பலவாய்ச் சிவபோகமாய் தெளிவாய்
    ஒன்றாகி, பலவாகி, சிவ அனுபூதியாகி, தெளிவுப் பொருளாகி,
  • சிவம் ஈதெனாக் குரு வார்த்தையை உணராதே
    மங்கலப் பொருளாயுள்ளது இதுவே என்று குரு செய்த உபதேசத்தை நான் உணர்ந்து அதன்படி நடக்காமல்,
  • ஏழு பார்க்கும் வியாக்கிரன் யானெனாப் பரி தேர்க் கரி ஏறும் மாப்பு இறுமாப்புடன் அரசாகி
    ஏழு உலகங்களுக்கும் புலி நானே என்று, குதிரை, தேர், யானை இவற்றின் மீது ஏறும் மிகுந்த செருக்குடனேஅரசாட்சியை வகித்து,
  • தோகைமார்க்கு ஒரு கால் தொலையாத வேட்கையினால்
    மாதர்களிடத்தே ஒரு போதும் நீங்காத காம இச்சையால்
  • கெடு சோர்வினால் கொடிது ஆக்கையை இழவா முன்சோதி காட்ட
    அழிவைத் தரும் தளர்ச்சியால் தீய வழியிலே இந்த உடலை நான் இழப்பதற்கு முன்பாக, ஒளிவளர் உண்மையை அடியேன் கண்டு உணர,
  • வர அச்சுதநாதனார்க்கு அருள் போற்றிய தூரிதா பரமார்த்தம் அது அருள்வாயே
    (நீ ஞானசம்பந்தராய் வந்து), சிவ சாரூபம் வேண்டி வரம் கிடந்த திருமாலுக்கு அருள் பாலித்ததும்* எட்டாததுமான மேலான பொருளை உபதேசித்து அருள்வாயாக.
  • நாகம் மேல் துயில்வார்க்கு அயனான பேர்க்கு அரியார்க்கு
    பாம்புப் படுக்கை (ஆதிசேஷன்) மேல் துயிலும் திருமாலுக்கும், அயன் எனப்படும் பிரமனுக்கும் அரியவரான சிவபெருமானுக்கு
  • ஒரு ஞான வார்த்தையினால் குரு பரன் ஆய நாத
    ஒரு ஞான உபதேசம் செய்த காரணத்தால் குரு மூர்த்தியாய் விளங்கின நாதனே,
  • நாட்டம் உறாப் பல காலும் வேட்கையினால் புகல் நாவலோர்க்கு அருளால் பதம் அருள் வாழ்வே
    தமது கருத்தை வைத்துப் பல பொழுதும் ஆசை கொண்டவராய் உன் திருப்புகழைச் சொல்லிப் போற்றும் புலவர்களுக்கு திருவருள் பாலித்து, திருவடியை அருள்கின்ற செல்வமே,
  • வேகம் மேற்கொள் அராப் புடை தோகை மேல் கொடு வேல் கொடு
    வேகத்தை மேற்கொண்ட பாம்பைத் துவைக்கும் மயிலின் மீது ஏறி வேலாயுதத்தால்
  • வீர மாக் குலையா குலவரை சாய
    வீரம் பொருந்திய மாமரமாக நின்ற சூரனைஅழித்து, சிறப்புற்ற கிரெளஞ்ச மலை சாய்ந்து அழிய,
  • மேலை நாட்டவர் பூக்கொடு வேல போற்றி எனாத் தொழ
    விண்ணுலகத்தோர் பூமாரி பொழிந்து வேலாயுத மூர்த்தியே போற்றி எனக் கூறி வணங்க,
  • வேலை கூப்பிட வீக்கிய பெருமாளே.
    கடல் கலங்கி ஓலமிட, வேலைச் செலுத்திய பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout