திருப்புகழ் 958 பரவு நெடுங்கதிர் (மதுரை)

தனன தனந்தன தனன தனந்தன
தனன தனந்தன ...... தனதான
பரவு  நெடுங்கதி  ருலகில்  விரும்பிய 
பவனி  வரும்படி  ......  யதனாலே 
பகர  வளங்களு  நிகர  விளங்கிய 
இருளை  விடிந்தது  ......  நிலவாலே 
வரையினி  லெங்கணு  முலவி  நிறைந்தது 
வரிசை  தரும்பத  ......  மதுபாடி 
வளமொடு  செந்தமி  ழுரைசெய  அன்பரு 
மகிழ  வரங்களு  ......  மருள்வாயே 
அரஹர  சுந்தர  அறுமுக  என்றுனி 
அடியர்  பணிந்திட  ......  மகிழ்வோனே 
அசலநெ  டுங்கொடி  அமையுமை  தன்சுத 
குறமக  ளிங்கித  ......  மணவாளா 
கருதரு  திண்புய  சரவண  குங்கும 
களபம  ணிந்திடு  ......  மணிமார்பா 
கனக  மிகும்பதி  மதுரை  வளம்பதி 
யதனில்  வளர்ந்தருள்  ......  பெருமாளே. 
  • பரவு நெடுங்கதி ருலகில் விரும்பிய
    யாவரும் துதிக்கும் நீண்ட கதிர்களை உடைய சூரியன் உலகுளோர் விரும்பும்படி
  • பவனி வரும்படி யதனாலே
    உலா வரும் காட்சிதானோ (இந்தத் திருவடி) என்றும்,
  • பகர வளங்களு நிகர விளங்கிய
    சொல்லத்தக்க வளப்பங்களுக்கு ஒப்பாக விளங்குவதும்,
  • இருளை விடிந்தது நிலவாலே
    இருளைப் போக்கி உதிக்கும் நிலவொளிதானோ (இந்தத் திருவடி) என்றும்,
  • வரையினி லெங்கணும் உலவி நிறைந்தது
    மலைகள் தோறும் எங்கும் உலாவி நிறைந்து
  • வரிசை தரும்பதம் அதுபாடி
    வரிசையான காட்சியைத் தரும் உன் திருவடியை நான் பாடி,
  • வளமொடு செந்தமிழுரைசெய
    சொல் வளம், பொருள் வளத்துடன் செந்தமிழ்ப் பாக்களால் உன்னைப் புகழ,
  • அன்பரு மகிழ வரங்களும் அருள்வாயே
    அப்பாடல்களைக் கேட்டு அன்பர்கள் அகம் மகிழ, வரங்களைத் தந்து அருள் புரிவாயாக.
  • அரஹர சுந்தர அறுமுக என்றுனி
    ஹர ஹர, அழகா, ஆறுமுகனே, என்று உன்னைத் தியானித்து,
  • அடியர் பணிந்திட மகிழ்வோனே
    அடியார்கள் வணங்க மகிழ்ச்சி கொள்பவனே,
  • அசலநெடுங்கொடி அமையுமை தன்சுத
    ஹிமவானின் மகளான பெருமைவாய்ந்த கொடியைப் போன்ற அம்மை உமாதேவி பெற்ற பிள்ளையே,
  • குறமகள் இங்கித மணவாளா
    குறமகள் வள்ளிக்கு இனிமையான மணவாளனே,
  • கருதரு திண்புய சரவண
    நினைப்பதற்கு அருமையான திண்ணிய புயங்களை உடைய சரவணபவனே,
  • குங்கும களபம் அணிந்திடு மணிமார்பா
    குங்குமமும் சந்தனமும் சேர்த்து அணியும் அழகிய மார்பனே,
  • கனக மிகும்பதி மதுரை வளம்பதி
    பொன் மாடங்கள் நிறைந்த நகராகிய மதுரை என்ற செழிப்பான
  • யதனில் வளர்ந்தருள் பெருமாளே.
    தலத்தில் விளங்கி வீற்றிருந்து அருளும் பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com