தனதானத் தனதான தனதானத் ...... தனதான
இறவாமற் பிறவாமல் எனையாள்சற் ...... குருவாகிப்
பிறவாகித் திரமான பெருவாழ்வைத் ...... தருவாயே
குறமாதைப் புணர்வோனே குகனேசொற் ...... குமரேசா
அறநாலைப் புகல்வோனே அவிநாசிப் ...... பெருமாளே.
- இறவாமற் பிறவாமல்
இறவாத வரம் தந்தும், மீண்டும் பிறவாத வரம் தந்தும், - எனையாள்சற்குருவாகி
என்னை ஆண்டருளும் நல்ல குருவாகியும், - பிறவாகி
மற்ற எல்லாத் துணைகள் ஆகியும், - திரமான பெருவாழ்வைத் தருவாயே
நிலையான (ஸ்திரமான) முக்தியாம் மோக்ஷவீட்டை அருள்வாயாக. - குறமாதைப் புணர்வோனே
குறப்பெண் வள்ளியை மணந்தவனே, - குகனேசொற் குமரேசா
குகனே, புகழ் வாய்ந்த குமரேசனே, - அறநாலைப் புகல்வோனே
அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கு புருஷார்த்தங்களையும் உபதேசிப்பவனே, - அவிநாசிப் பெருமாளே.
அவிநாசியில்* வீற்றிருக்கும் பெருமாளே.