திருப்புகழ் 937 சஞ்சரி உகந்து (சிங்கை-காங்கேயம்)

தந்ததன தந்த தந்ததன தந்த
தந்ததன தந்த ...... தனதான
சஞ்சரியு  கந்து  நின்றுமுரல்  கின்ற 
தண்குவளை  யுந்து  ......  குழலாலுந் 
தண்டரள  தங்க  மங்கமணி  கின்ற 
சண்டவித  கும்ப  ......  கிரியாலும் 
நஞ்சவினை  யொன்றி  தஞ்சமென  வந்து 
நம்பிவிட  நங்கை  ......  யுடனாசை 
நண்புறெனை  யின்று  நன்றில்வினை  கொன்று 
நன்றுமயில்  துன்றி  ......  வரவேணும் 
கஞ்சமலர்  கொன்றை  தும்பைமகிழ்  விஞ்சி 
கந்திகமழ்  கின்ற  ......  கழலோனே 
கன்றிடுபி  ணங்கள்  தின்றிடுக  ணங்கள் 
கண்டுபொரு  கின்ற  ......  கதிர்வேலா 
செஞ்சொல்புனை  கின்ற  எங்கள்குற  மங்கை 
திண்குயம  ணைந்த  ......  திருமார்பா 
செண்பகமி  லங்கு  மின்பொழில்சி  றந்த 
சிங்கையில  மர்ந்த  ......  பெருமாளே. 
  • சஞ்சரி உகந்து நின்று முரல்கின்ற தண் குவளை உந்து குழலாலும்
    வண்டுகள் மகிழ்ந்து, நின்று ரீங்காரம் செய்யும் குளிர்ச்சி பொருந்திய குவளை மலர் விளங்கும் கூந்தல் மூலமாகவும்,
  • தண் தரள தங்கம் அங்கம் அணிகின்ற சண்ட வித கும்ப கிரியாலும்
    குளிர்ந்த முத்து மாலை, பொன் மாலை ஆகியவற்றை தம்மீது அணிந்துள்ள, வலிமை கொண்ட குடம் போன்ற மார்பகங்கள் மூலமாகவும்,
  • நஞ்ச வினை ஒன்றி தஞ்சம் என வந்து நம்பி விட
    விஷம் கொண்ட செயலைப் பொருந்தி, (நீயே) அடைக்கலம் என்று சொல்லி வந்து நான் நம்பும்படி நடிக்கும்
  • நங்கையுடன் ஆசை நண்பு உறு எனை இன்று நன்று இல் வினை கொன்று நன்று மயில் துன்றி வரவேணும்
    அத்தகைய மங்கையுடன் ஆசை கொண்டு, நட்பு வைக்கின்ற என்னைக் காத்தருள, நீ இந்த நாளே, தீய வினைகளை அழித்து, நன்மை தரும் மயிலில் பொருந்தி வந்தருள வேண்டும்.
  • கஞ்ச மலர் கொன்றை தும்பை மகிழ் விஞ்சி கந்தி கமழ்கின்ற கழலோனே
    தாமரை மலர், கொன்றை மலர், தும்பை மலர், மகிழம்பூ இவைகள் நிறைந்து நறுமணம் கமழும் திருவடியை உடையவனே,
  • கன்றிடு பிணங்கள் தின்றிடு கணங்கள் கண்டு பொருகின்ற கதிர் வேலா
    வாடி அழுகிய பிணங்களைத் தின்னும் (பேய், நாய், நரி, பருந்து முதலியவற்றின்) கூட்டங்கள் காணும்படி சண்டை செய்யும் ஒளி வீசும் வேலை உடையவனே.
  • செம் சொல் புனைகின்ற எங்கள் குற மங்கை திண் குயம் அணைந்த திரு மார்பா
    பண் நிறைந்த சொல்லை அமைந்துள்ள எங்கள் குறப்பெண்ணாகிய வள்ளியின் வலிய மார்பை அணைந்த அழகிய மார்பனே,
  • செண்பகம் இலங்கு மின் பொழில் சிறந்த சிங்கையில் அமர்ந்த பெருமாளே.
    செண்பக மலர்கள் விளங்கும் இனிய சோலைகள் சிறப்புடன் மிளிரும் சிங்கை எனப்படும் காங்கேயம்* என்ற தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com