திருப்புகழ் 912 திரு உரூப நேராக (வயலூர்)

தனன தான தானான தனன தான தானான
தனன தான தானான ...... தனதான
திருவு  ரூப  நேராக  அழக  தான  மாமாய 
திமிர  மோக  மானார்கள்  ......  கலைமூடுஞ் 
சிகரி  யூடு  தேமாலை  யடவி  யூடு  போயாவி 
செருகு  மால  னாசார  ......  வினையேனைக் 
கருவி  ழாது  சீரோதி  யடிமை  பூண  லாமாறு 
கனவி  லாள்சு  வாமீநின்  ......  மயில்வாழ்வுங் 
கருணை  வாரி  கூரேக  முகமும்  வீர  மாறாத 
கழலு  நீப  வேல்வாகு  ......  மறவேனே 
சருவ  தேவ  தேவாதி  நமசி  வாய  நாமாதி 
சயில  நாரி  பாகாதி  ......  புதல்வோனே 
சதம  கீவல்  போர்மேவு  குலிச  பாணி  மால்யானை 
சகச  மான  சாரீசெ  ......  யிளையோனே 
மருவு  லோக  மீரேழு  மளவி  டாவொ  ணாவான 
வரையில்  வீசு  தாள்மாயன்  ......  மருகோனே 
மநுநி  யாய  சோணாடு  தலைமை  யாக  வேமேலை 
வயலி  மீது  வாழ்தேவர்  ......  பெருமாளே. 
  • திரு உரூப நேராக அழகதான மா மாய திமிர மோக மானார்கள்
    லக்ஷ்மியினுடைய உருவத்துக்கு நிகரான அழகைக் கொண்டவர்களும், மகா மாய, இருளான காம இச்சையை ஊட்டும் மான் போன்ற விலைமாதர்களின்
  • கலை மூடும் சிகரி ஊடு தே மாலை அடவி ஊடு போய் ஆவி செருகும் மால் அனாசார வினையேனை
    ஆடை மறைக்கும் மார்பகங்களிலும், இனிய பூ மாலை அணிந்துள்ள காடு போன்ற கூந்தலிலும் உயிரே போய்ச் சிக்கிக் கொள்ளும் காம மயக்கம் உள்ள, ஒழுக்கம் இல்லாத தொழிலனாகிய என்னை,
  • கரு விழாது சீர் ஓதி அடிமை பூணலாமாறு கனவில் ஆள் சுவாமீ
    பிறப்பில் மீண்டும் விழாத வண்ணம், உனது திருப்புகழை நான் ஓதி, உனக்கு அடிமை பூணும் வகை வரும்படி, எனது கனவில் வந்து ஆண்டருளிய சுவாமியே,
  • நின் மயில் வாழ்வும் கருணை வாரி கூர் ஏக முகமும் வீர(ம்) மாறாத கழலு(ம்) நீப வேல் வாகு(ம்) மறவேனே
    மயில் மேல் வீற்றிருக்கும் உனது வாழ்வையும், கருணைக் கடல் போல மிக்க ஒளி வீசும் உனது திருமுகத்தையும்*, வீரம் என்றும் மாறுதல் இல்லாத திருவடியையும், கடம்பையும், வேல் ஏந்திய திருப்புயத்தையும் நான் என்றும் மறவேன்.
  • சருவ தேவ தேவாதி நமசிவாய நாமாதி சயில நாரி பாக ஆதி புதல்வோனே
    எல்லாத் தேவர்களுக்கும் தேவனாக விளங்குபவனும், ஆதிப்பிரானும், நமசிவாய என்னும் திருநாமத்தை உடையவனும், (இமய) மலைப் பெண்ணாகிய பார்வதியின் பாகனும், முதல்வனுமாகிய சிவபெருமானின் மகனே,
  • சத மகீ வல் போர் மேவு குலிச பாணி மால் யானை சகசமான சாரீ செய் இளையோனே
    நூறு யாகங்களை முடித்தவனும், வலிய போரில் ஈடுபட்டவனும், வஜ்ராயுதத்தைக் கையில் ஏந்தியவனுமாகிய இந்திரனுடைய பெரிய ஐராவதம் என்னும் யானை மீது வழக்கமான உலாவுதலைச் செய்யும் இளைஞனே,
  • மருவு லோகம் ஈரேழும் அளவிட ஒ(ண்)ணாவான வரையில் வீசு தாள் மாயன் மருகோனே
    பொருந்திய பதினான்கு உலகங்களிலும் உள்ளவர்கள் அளவிட முடியாத எல்லை அளவுக்கு, தனது திருவடியை நீட்டிய திருமாலின் மருகனே,
  • மநு நியாய சோ (ழ) நாடு தலைமை யாகவே மேலை வயலி மீது வாழ் தேவர் பெருமாளே.
    மனு நீதிச் சோழன் நீதியோடு ஆண்ட சோழ நாடு சிறந்த நிலையை அடையும் பொருட்டு, மேலை வயலூர்** என்னும் தலத்தில் வந்து வாழ்பவனும், தேவர்களின் தலைவன் ஆனவனுமான, பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com