தாந்த தத்தன தானா தானன
தாந்த தத்தன தானா தானன
தாந்த தத்தன தானா தானன ...... தந்ததான
வீங்கு பச்சிள நீர்போல் மாமுலை
சேர்ந்த ணைத்தெதிர் மார்பூ டேபொர
வேண்டு சர்க்கரை பால்தே னேரிதழ் ...... உண்டுதோயா
வேண்டு ரைத்துகில் வேறாய் மோகன
வாஞ்சை யிற்களை கூரா வாள்விழி
மேம்ப டக்குழை மீதே மோதிட ...... வண்டிராசி
ஓங்கு மைக்குழல் சாதா வீறென
வீந்து புட்குரல் கூவா வேள்கலை
யோர்ந்தி டப்பல க்ரீடா பேதமு ...... யங்குமாகா
ஊண்பு ணர்ச்சியு மாயா வாதனை
தீர்ந்து னக்கெளி தாயே மாதவ
மூன்று தற்குமெய்ஞ் ஞானா சாரம்வ ...... ழங்குவாயே
தாங்கு நிற்சரர் சேனா நீதரு
னாங்கு ருத்ரகு மாரா கோஷண
தாண்ட வற்கருள் கேகீ வாகன ...... துங்கவீரா
சாங்கி பற்சுகர் சீநா தீசுர
ரேந்த்ரன் மெச்சிய வேலா போதக
சாந்த வித்தக ஸ்வாமீ நீபவ ...... லங்கன்மார்பா
பூங்கு ளத்திடை தாரா வோடன
மேய்ந்த செய்ப்பதி நாதா மாமலை
போன்ற விக்ரக சூரா ரீபகி ...... ரண்டரூபா
போந்த பத்தர்பொ லாநோய் போயிட
வேண்ட நுக்ரக போதா மேவிய
பூந்து ருத்தியில் வாழ்வே தேவர்கள் ...... தம்பிரானே.
- வீங்கு பச்சிள நீர் போல் மா முலை சேர்ந்து அணைத்து எதிர்
மார்பு ஊடே பொர வேண்டு சர்க்கரை பால் தேன் நேர் இதழ்
உண்டு தோயா
பருமனான பச்சை இளநீர் போல உள்ள பெரிய மார்பகங்களை சேர்ந்து அணைத்து எதிரில் உள்ள மார்பில் அழுந்தும்படி பொருந்த வைத்து, விரும்பத் தக்க சர்க்கரை, பால், தேன் இவைகளுக்கு ஒப்பான வாயிதழை உண்டு தோய்ந்து, - வேண்டு(ம்) உரைத் துகில் வேறாய் மோகன வாஞ்சையில்
களை கூரா வாள் விழி மேம்படக் குழை மீதே மோதிட
விரும்பத் தக்க மோகப் பேச்சுக்களைப் பேசி, ஆடையும் வேறாக, காம மயக்க ஆசையில் மகிழ்ச்சி அடைந்து, ஒளி பொருந்திய கண்கள் மேலிட்டு காதில் உள்ள குண்டலங்கள் மீது மோதிட, - வண்டு இராசி ஓங்கு மைக் குழல் ச(சா)தா ஈறு என வீ(ழ்)ந்து
புள் குரல் கூவா வேள் கலை ஓர்ந்திடப் பல க்ரீடா பேத
முயங்கும் ஆகா
வண்டின் கூட்டங்கள் மிக்குள்ள கரிய கூந்தல் எப்போதும் சதமென (அதன்மேல்) விழுந்து, புட்குரல் ஒலியைக் கூவச் செய்து, மன்மதனின் காம சாத்திர நூல்களை அறியும்படி பலவகையான லீலைகளின் பேதங்களை முயற்சி செய்தல் ஆகுமோ? (கூடாது என்றபடி), - ஊண் புணர்ச்சியும் மாயா வாதனை தீர்ந்து உனக்கு எளிதாயே
மாதவம் ஊன்றுதற்கு மெய்ஞ் ஞான ஆசாரம் வழங்குவாயே
ஆன்மா அனுபவிக்க வேண்டிய சுக துக்க நுகர்ச்சியும், மாயை சம்பந்தமாக ஏற்படும் துன்பங்களும் ஒழிந்து உன் திருவடிக்கே எளிதான வகையில் சிறந்த தவ நிலை ஊன்றிப் பொருந்துவதற்கு மெய்ஞ்ஞான ஆசார ஒழுக்கத்தைத் தந்து அருள்வாயாக. - தாங்கு நிற்சரர் சேனா நீதர் உ(ன்)ன ஆங்கு ருத்ர குமாரா
கோஷண தாண்டவற்கு அருள் கேகீ வாகன துங்க வீரா
(ஜைன மதக் கொள்கைகளை அனுஷ்டித்துத்) தாங்கி நின்ற குருமார்களின் கூட்டமாகிய நீசர்கள் ஆழ்ந்து நினைக்கக் காரணமாக இருந்து, அங்கு (மதுரையில் திருஞானசம்பந்தராக) வந்த சிவ குமாரனே, பேரொலியுடன் நடனம் செய்த சிவபெருமானுக்கு உபதேசித்து அருளிய மயில் வாகனனே, உயர்ந்த வீரனே, - சாங்கிபற் சுகர் சீ நாத(ர்) ஈசுரர் இந்திரன் மெச்சிய வேலா
போதக சாந்த வித்தக ஸ்வாமி நீப அலங்கன் மார்பா
ஆத்ம தத்துவத்தை விவரிக்கும் சாங்கிய யோகம் பயின்றவர்கள், சுகப் பிரம ரிஷி, லக்ஷ்மியின் நாதராகிய திருமால், சிவபெருமான், தேவேந்திரன் ஆகியோர் மெச்சிப் போற்றிய வேலனே, உபதேச குருவே, சாந்தமூர்த்தியே, அறிஞனே, சுவாமியே, கடப்ப மாலை அணிந்த மார்பனே, - பூங்குளத்திடை தாராவோடு அ(ன்)னம் மேய்ந்த செய்ப்பதி
நாதா மா மலைபோன்ற விக்ரக சூரா அரி பகிரண்ட ரூபா
தாமரைப் பூ உள்ள குளத்தில் குள்ள வாத்துக்களுடன் அன்னப் பறவைகளும் மேய்ந்த வயலூர்ப் பெருமானே, பெரிய மலை போன்ற உருவத்தைக் கொண்டிருந்த சூரனுக்குப் பகைவனே, வெளி அண்டங்களாய் நிற்கும் உருவத்தனே, - போந்த பத்தர் பொ(ல்)லா நோய் போயிட வேண்ட அநுக்ரக
போதா மேவிய பூந்துருத்தியில் வாழ்வே தேவர்கள்
தம்பிரானே.
(உன் அடியை வேண்டி) வந்த அடியார்களின் பொல்லாத பிறவியாகிய நோய் ஓடிப் போக வேண்டிய அருள் செய்த அறிஞனே, பொருந்திய திருப்பூந்துருத்தி என்னும் தலத்துச் செல்வமே, தேவர்கள் தம்பிரானே.



