திருப்புகழ் 865 கெண்டை நேரொத்தவிழி (கும்பகோணம்)

தந்தனா தத்ததன தந்தனா தத்ததன
தந்தனா தத்ததன ...... தனதான
கெண்டைநே  ரொத்தவிழி  மங்கைமோ  கக்கலவை 
கெந்தவா  சப்புழுகு  ......  மணநாறுங் 
கிம்புரீ  சக்களப  கொங்கையா  னைச்சிறிது 
கிஞ்சுகா  ணப்பெருகி  ......  யடியேனும் 
மண்டிமோ  சக்கலவி  கொண்டுகா  மித்துருகி 
வண்டனா  கப்புவியி  ......  லுழலாமல் 
வந்துஞா  னப்பொருளி  லொன்றுபோ  தித்துனது 
மஞ்சுதா  ளைத்தினமு  ......  மருள்வாயே 
அண்டர்வா  ழப்பிரபை  சண்டமே  ருக்கிரியி 
ளைந்துவீ  ழப்பொருத  ......  கதிர்வேலா 
அஞ்சுவா  யிற்பரனை  நெஞ்சிலூ  றித்தவசி 
னன்புளா  ரைச்சிறையி  ......  டசுரோரைக் 
கொண்டுபோய்  வைத்தகழு  நெஞ்சிலே  றக்கழுகு 
கொந்தியா  டத்தலையை  ......  யரிவோனே 
கொண்டல்சூ  ழக்கழனி  சங்குலா  விப்பரவு 
கும்பகோ  ணத்திலுறை  ......  பெருமாளே. 
  • கெண்டை நேர் ஒத்த விழி மங்கை மோகக் கலவை கெந்த வாசப் புழுகு மண(ம்) நாறும்
    கெண்டை மீனுக்கு ஒப்பான கண்களை உடைய (விலை)மாதர்கள் மீதுள்ள ஆசைக் கலப்பு மிக்க நறுமணம் உள்ள புனுகின் நறுமணம் வீசும் (மார்பகம்),
  • கிம்புரி ஈசக் களப(ம்) கொங்கை யானைச் சிறிது கிஞ்சு காணப் பெருகி அடியேனும் மண்டி மோசக் கலவி கொண்டு காமித்து உருகி
    தந்தத்தில் பூண் அணிந்தது போல விளங்குவதும், பச்சைக் கற்பூரக் கலவை அணிந்ததுமான மார்பாகிய யானையை சிறிதளவு கண்டதும் ஆசை பெரியதாகி, அதனால் அடியேனும் விரைந்து சென்று வஞ்சகத்துக்கு இடமான புணர்ச்சி இன்பம் கொண்டு காம உணர்ச்சியில் மனம் உருகி,
  • வண்டன் ஆகப் புவியில் உழலாமல் வந்து ஞானப் பொருளில் ஒன்று போதித்து உனது மஞ்சு தாளைத் தினமும் அருள்வாயே
    தீயோனாக பூமியில் நான் அலைச்சல் அடையாமல், (நீ) வந்து ஞானப் பொருளில் ஒன்றை உபதேசித்து, உனது அழகிய திருவடியை நாள் தோறும் எனக்குத் தந்தருளுக.
  • அண்டர் வாழப் பிரபை சண்ட மேருக் கிரி இளைந்து வீழப் பொருத கதிர்வேலா
    தேவர்கள் வாழும்படி ஒளி வீசும் வலியதான மேரு மலை கலக்குண்டு விழும்படிப் போர் செய்த ஒளி வேலனே,
  • அஞ்சு வாயில் பரனை நெஞ்சில் ஊறித் தவசில் அன்பு உளாரைச் சிறையி(ட்)ட அசுரோரைக் கொண்டு போய் வைத்த கழு நெஞ்சில் ஏறக் கழுகு கொந்தி ஆடத் தலையை அரிவோனே
    ஐந்து பொறிகளாலும் சிவபெருமானை மனதில் ஊற வைத்து தவ நெறியில் அன்புள்ள தேவர்களைச் சிறையில் வைத்த அசுரர்களைக் கொண்டு போய், கூரிய சூலம் நெஞ்சில் ஏறப் பாயவும், கழுகுகள் கொத்தி விளையாடவும், தலையை அரிந்தவனே,
  • கொண்டல் சூழ் அக்கழனி சங்கு உலாவிப் பரவு கும்பகோணத்தில் உறை பெருமாளே.
    மேகங்கள் சூழ்ந்த வயல்களில் சங்குகள் உலாவிப் பரந்திருக்கும் கும்பகோணத்தில் வீற்றிருக்கும் பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com