திருப்புகழ் 852 எகினி னம்பழி (திருப்பந்தணை நல்லூர்)

தனன தந்தன தானன தானன
தனன தந்தன தானன தானன
தனன தந்தன தானன தானன ...... தனதான
எகினி  னம்பழி  நாடக  மாடிகள் 
மயிலெ  னுஞ்செய  லாரகி  நேரல்குல் 
இசையி  டுங்குர  லார்கட  னாளிகள்  ......  வெகுமோகம் 
எனவி  ழுந்திடு  வார்முலை  மேல்துகில் 
அலைய  வுந்திரி  வாரெவ  ராயினும் 
இளகு  கண்சுழல்  வார்விலை  வேசியர்  ......  வலைவீசும் 
அகித  வஞ்சக  பாவனை  யால்மயல் 
கொடுவி  ழுந்திட  ராகமு  நோய்பிணி 
யதிக  முங்கொடு  நாயடி  யேனினி  ......  யுழலாமல் 
அமுத  மந்திர  ஞானொப  தேசமும் 
அருளி  யன்புற  வேமுரு  காவென 
அருள்பு  குந்திட  வேகழ  லார்கழல்  ......  அருள்வாயே 
ககன  விஞ்சையர்  கோவென  வேகுவ 
டவுணர்  சிந்திட  வேகடல்  தீவுகள் 
கமற  வெந்தழல்  வேல்விடு  சேவக  ......  முருகோனே 
கரிநெ  டும்புலி  தோலுடை  யாரெனை 
யடிமை  கொண்டசு  வாமிச  தாசிவ 
கடவு  ளெந்தையர்  பாகம்வி  டாவுமை  ......  யருள்பாலா 
செகமு  மண்டமு  மோருரு  வாய்நிறை 
நெடிய  அம்புயல்  மேனிய  னாரரி 
திருவு  றைந்துள  மார்பக  னார்திரு  ......  மருகோனே 
தினைவ  னந்தனில்  வாழ்வளி  நாயகி 
வளர்த  னம்புதை  மார்பழ  காமிகு 
திலக  பந்தணை  மாநகர்  மேவிய  ......  பெருமாளே. 
  • எகின் இனம் பழி நாடகம் ஆடிகள் மயில் எனும் செயலார் அகி நேர் அல்குல் இசை இடும் குரலார் கடனாளிகள் வெகுமோகம் என விழுந்திடும்
    அன்னப் பறவைகள் கூட்டத்தை பழிக்கவல்ல நாடகம் நடிப்பவர்கள். மயில் என்று சொல்லத்தக்க செயலினை உடையவர்கள். பாம்புக்கு ஒப்பான பெண்குறியை உடையவர்கள். பண்களைக் காட்டும் குரலை உடையவர். (திரும்பிவாரா) கடன் கொள்ளுபவர்கள். மிக்க மோகம் கொண்டுள்ளோம் என்பவர் போல் மேலே விழுபவர்கள்.
  • வார் முலை மேல் துகில் அலையவும் திரிவார் எவராயினும் இளகு கண் சுழல் வார் விலை வேசியர்
    கச்சு அணிந்த மார்பகத்தின் மீதுள்ள மேல் ஆடை அசையும்படி திரிபவர்கள். யாராக இருந்தாலும் இரங்குபவர் போல நெகிழ்ச்சியைக் காட்டும் கண்களைச் சுற்றுபவர்கள். விலைக்கு உடலை விற்கும் வேசியர்.
  • வலைவீசும் அகித வஞ்சக பாவனையால் மயல் கொடு விழுந்திட ராகமு(ம்) நோய் பிணி அதிகமும் கொடு நாய் அடியேன் இனி உழலாமல்
    காம வலை வீசும் தீமையைத் தருவதான வஞ்சக நினைப்புள்ள நடத்தையால் மயங்கி, நான் மோகம் கொண்டு அவர்கள் வலையில் விழுந்திட, ஆசையும், நோய், பிணி இவைகளை நிரம்பக் கொண்டு நாய் போன்ற அடியேன் இனிமேல் அலைச்சல் உறாமல்,
  • அமுத மந்திர ஞான உபதேசமும் அருளி அன்புறவே முருகா என அருள் புகுந்திடவே கழல் ஆர் கழல் அருள்வாயே
    அமுதம் போன்ற (சரவணபவ என்னும்) ஆறு எழுத்து மந்திரத்தையும் ஞான உபதேசத்தையும் எனக்கு அருளி, நான் அன்பு கூடிய மனத்துடன் முருகா என்று சொல்லும்படியான கழல் அணிந்த உனது திருவடியை அருள்வாயாக.
  • ககன விஞ்சையர் கோ எனவே குவடு அவுணர் சிந்திடவே கடல் தீவுகள் கமற வெம் தழல் வேல் விடு சேவக முருகோனே
    விண்ணிலுள்ள கல்வி மிக்கோர் கோ என்று அலறி இரங்க, கிரெளஞ்சமும், ஏழு மலைகளும், அசுரர்களும் அழியுமாறு, கடலும், தீவுகளும் மிக வேகுதல் உற, கொடிய நெருப்பை வீசும் வேலாயுதத்தைச் செலுத்திய வலிமை வாய்ந்தவனே, முருகனே,
  • கரி நெடும் புலி தோல் உடையார் எனை அடிமை கொண்ட சுவாமி சதாசிவ கடவுள் எந்தையர் பாகம் விடா உமை அருள் பாலா
    யானை, பெரிய புலி ஆகியவற்றின் தோலைப் புனைந்தவர், என்னை அடிமையாகக் கொண்ட சுவாமி சதாசிவ மூர்த்திக் கடவுள், எனது தந்தை ஆகிய சிவபெருமானது (இடது) பாகத்தை விட்டுப் பிரியாத உமா தேவி அருளிய பாலகனே,
  • செகமும் அண்டமும் ஓர் உருவாய் நிறை நெடிய அம்புயல் மேனியனார் அரி திரு உறைந்துள மார்பகனார் திரு மருகோனே
    உலகங்கள், அண்டங்கள் இவை முழுதிலும் ஓர் உருவாய் நிறைந்து விளங்கும் பெரிய அழகிய மேக நிறத்து மேனியராகிய திருமால், லக்ஷ்மி வாசம் செய்யும் மார்பை உடையவர் ஆகியவரின் அழகிய மருகனே,
  • தினை வனம் தனில் வாழ் வ(ள்)ளி நாயகி வளர் தனம் புதை மார்பு அழகா மிகு திலக பந்தணை மாநகர் மேவிய பெருமாளே.
    தினைப் புனத்தில் வாழ்ந்த வள்ளி நாயகியின் வளர்ச்சி மிகும் தனத்தில் படிந்த மார்பனே, அழகனே, மிகுந்த சிறப்பு வாய்ந்த திருப்பந்தணை நல்லூரில்* வீற்றிருக்கும் பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com