திருப்புகழ் 846 மலைக் கனத்தென (திருத்துருத்தி)

தனத் தனத்தன தானன தானன
தனத் தனத்தன தானன தானன
தனத் தனத்தன தானன தானன ...... தனதான
மலைக்  கனத்தென  மார்பினி  லேயிரு 
முலைக்  கனத்துற  வேயிடை  நூலென 
வளைத்  துகுப்பமை  யார்குழல்  தோளொடும்  ......  அலைமோத 
மயிற்  குலத்தவ  ராமென  நீள்கலை 
நெகிழ்த்  துவித்திரு  வார்விழி  வேல்கொடு 
மயக்  கிநத்தினர்  மேல்மறு  பாடும  ......  விழியேவி 
விலைக்  கெனத்தன  மாயிர  மாயிர 
முலைக்  களப்பினு  மாசைபொ  தாதென 
வெறுப்  பர்குத்திர  காரியர்  வேசையர்  ......  மயல்மேலாய் 
வெடுக்  கெடுத்தும  காபிணி  மேலிட 
முடக்  கிவெட்கும  தாமத  வீணனை 
மினற்  பொலிப்பத  மோடுற  வேயருள்  ......  புரிவாயே 
அலைக்  கடுத்தசு  ரார்பதி  கோவென 
விடப்  பணச்சிர  மாயிர  சேடனும் 
அதிர்த்  திடக்கதிர்  வேல்விடு  சேவக  ......  மயில்வீரா 
அடைக்  கலப்பொரு  ளாமென  நாயெனை 
அழைத்  துமுத்திய  தாமநு  பூதியெ 
னருட்  டிருப்புக  ழோதுக  வேல்மயி  ......  லருள்வோனே 
சிலைக்  கைமுப்புர  நீறெழ  வேதிரு 
வுளத்  திலற்பமெ  னாநினை  தேசிகர் 
சிறக்  கமுத்தமி  ழாலொரு  பாவக  ......  மருள்பாலா 
திருக்  கடப்பலர்  சூடிய  வார்குழல் 
குறத்  திகற்புட  னேவிளை  யாடியொர் 
திருத்  துருத்தியில்  வாழ்முரு  காசுரர்  ......  பெருமாளே. 
  • மலைக் கனத்து என மார்பினிலே இரு முலைக் கனத்து உறவே இடை நூல் என வளைத்து உகுப்ப
    மலைப்பாரம் போல நெஞ்சில் இரண்டு மார்பகங்களும் சுமையைத் தருவதால் இடுப்பு நூல் போல் வளைவு பெற,
  • மை ஆர் குழல் தோளொடும் அலை மோத மயில் குலத்தவர் ஆம் என நீள் கலை நெகிழ்த்துவித்து
    கரிய நிறம் உள்ள கூந்தல் தோள்கள் மேல் அலை வீசுவது போல் புரள, மயில்களின் கூட்டத்தவர்கள் போல் நீண்ட ஆடைகளை வேண்டுமென்றே தளர்த்தி வைத்து,
  • இரு வார் விழி வேல் கொடு மயக்கி நத்தினர் மேல் மறு பாடும் அவ் விழி ஏவி விலைக்கு எனத் தனம் ஆயிரம் ஆயிரம் முலைக்கு அளப்பினும் ஆசை பொதாது என வெறுப்பர்
    இரண்டு நீண்ட கண்ணாகிய வேல் கொண்டு மயக்குவித்து தம்மை விரும்பி வந்தவர் மேல் உள்ள குற்றங்களைக் கூறுவது போன்று அந்தக் விழிகளைச் செலுத்தி, கொடுக்க வேண்டிய பொருளுக்காக பொன் பல ஆயிரங்கள் அந்த மார்பகங்களுக்காக அளந்து கொடுத்தாலும் பேராசை காரணமாக போதாது என்று வெறுப்பைக் காட்டுபவர்களும்,
  • குத்திர காரியர் வேசையர் மயல் மேலாய் வெடுக்கு எடுத்து மகா பிணி மேலிட முடக்கி வெட்கும் அ(த்)தாமத வீணனை மி(ன்)னல் பொல் இப் பதமோடு உறவே அருள் புரிவாயே
    வஞ்சகச் செயலினரும் ஆகிய விலைமாதர்கள் மீது காம மயக்கம் மேலோங்கிப் பின் திடீரென்று கொடிய நோய்கள் பீடிக்க ஒடுங்கி வெட்கப்படுகின்ற, பெருத்த மதம் பிடித்த வீணனாகிய நான் மின்னல் போன்று ஒளி வீசுகின்ற உனது திருவடிகளில் பொருந்திச் சேர அருள் புரிவாயாக.
  • அலைக்கு அடுத்த அசுரார் பதி கோ என விடப் பணச் சிரம் ஆயிரம் சேடனும் அதிர்த்திடக் கதிர் வேல் விடு சேவக மயில் வீரா
    கடலில் போய்ப் புகுந்த அசுரர் தலைவனாகிய சூரன் கோ என்று அஞ்சி அலற, விஷம் கொண்ட படம் உடைய தலைகள் ஆயிரங்கள் உடைய ஆதிசேஷனும் அதிர்ச்சி அடைய, ஒளிவீசும் வேலைச் செலுத்திய வலிமையாளனே, மயில் வீரனே,
  • அடைக்கலப் பொருள் ஆம் என நாயெனை அழைத்து முத்தி அது ஆம் அநுபூதியெ அருள் திருப்புகழ் ஓதுக வேல் மயில் அருள்வோனே
    அடைக்கலம் வைக்கப்பட்ட பொருளை ரட்சிப்பது போல அடியேனை பொருட்படுத்தி அழைத்து, முக்தியைத் தரவல்ல திருவருள் பிரசாதமாகிய திருப்புகழை நீ ஓதுவாயாக என்று திருவாய் மலர்ந்து வேலையும் மயிலையும் பாதுகாப்பாக (என் உடலில் இலச்சினையாகப் பொறித்து) அருளியவனே,
  • சிலைக் கை முப்புரம் நீறு எழவே திரு உ(ள்)ளத்தில் அற்பம் எனா நினை தேசிகர் சிறக்க முத்தமிழால் ஒரு பாவகம் அருள் பாலா
    மேரு மலையாகிய வில்லைக் கையில் பிடித்தபடி இருக்க முப்புரங்களை தீயினால் பொடியாகும்படி அழிய திருவுள்ளத்தில் சிறிதளவே நினைத்த தேசிகராகிய சிவபெருமான் பெருமை அடைய முத்தமிழைக் கொண்டு, ஒப்பற்ற கருத்துக்கு உரியதான (தேவாரப்) பாக்களை (திருஞான சம்பந்தராக அவதரித்து) அருளிய குழந்தையே,
  • திரு கடப்பு அலர் சூடிய வார் குழல் குறத்தி கற்புடனே விளையாடி ஒர் திருத்துருத்தியில் வாழ் முருகா சுரர் பெருமாளே.
    அழகிய கடப்ப மலர் சூடிய நீண்ட கூந்தலை உடைய குறத்தியான வள்ளியின் கற்புக் குணங்களில் திளைத்து விளையாடி, ஒப்பற்ற திருத்துருத்தியில்* வாழும் முருகப் பெருமானே, தேவர்களின் பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com