திருப்புகழ் 843 இரத்த முஞ்சி (திருப்பெருந்துறை)

தனத்த தந்தன தானன தந்தத்
தனத்த தந்தன தானன தந்தத்
தனத்த தந்தன தானன தந்தத் ...... தனதான
இரத்த  முஞ்சியு  மூளையெ  லும்புட் 
டசைப்ப  சுங்குடல்  நாடிபு  னைந்திட் 
டிருக்கு  மண்சல  வீடுபு  குந்திட்  ......  டதில்மேவி 
இதத்து  டன்புகல்  சூதுமி  குந்திட் 
டகைத்தி  டும்பொரு  ளாசையெ  னும்புட் 
டெருட்ட  வுந்தெளி  யாதுப  றந்திட்  ......  டிடமாயா 
பிரத்தம்  வந்தடு  வாதசு  ரம்பித் 
துளைப்பு  டன்பல  வாயுவு  மிஞ்சிப் 
பெலத்தை  யுஞ்சில  நாளுளொ  டுங்கித்  ......  தடிமேலாய்ப் 
பிடித்தி  டும்பல  நாள்கொடு  மந்திக் 
குலுத்தெ  னும்படி  கூனிய  டங்கிப் 
பிசக்கு  வந்திடு  போதுபி  னஞ்சிச்  ......  சடமாமோ 
தரித்த  னந்தன  தானன  தந்தத் 
திமித்தி  மிந்திமி  தீதக  திந்தத் 
தடுட்டு  டுண்டுடு  டூடுடி  மிண்டிட்  ......  டியல்தாளம் 
தனத்த  குந்தகு  தானன  தந்தக் 
கொதித்து  வந்திடு  சூருடல்  சிந்தச் 
சலத்து  டன்கிரி  தூள்படெ  றிந்திட்  ......  டிடும்வேலா 
சிரத்து  டன்கர  மேடுபொ  ழிந்திட் 
டிரைத்து  வந்தம  ரோர்கள்  படிந்துச் 
சிரத்தி  னுங்கமழ்  மாலைம  ணம்பொற்  ......  சரணோனே 
செகத்தி  னின்குரு  வாகிய  தந்தைக் 
களித்தி  டுங்குரு  ஞானப்ர  சங்கத் 
திருப்பெ  ருந்துறை  மேவிய  கந்தப்  ......  பெருமாளே. 
  • இரத்தமும் சீயும் மூளை எலும்பு உள் தசைப் பசும் குடல் நாடி புனைந்திட்டு
    ரத்தமும் சீழும், மூளை, எலும்பு, உள்ளே இருக்கும் மாமிசம், பசிய குடல், நரம்புகள், இவைகளைக் கொண்டு ஆக்கப்பட்டு
  • இறுக்கு மண் சல வீடு புகுந்திட்டு அதில் மேவி இதத்துடன் புகல் சூது மிகுந்திட்டு
    அழுத்தமாகக் கட்டப்பட்டு மண்ணாலும், நீராலும் ஆன வீடாகிய உடலில் நுழைவு பெற்று, அதில் இருந்துகொண்டு இன்பகரமாகப் பேசும் சூதான மொழிகள் அதிகமாகி,
  • அகைத்திடும் பொருள் ஆசை எனும் புள் தெருட்டவும் தெளியாது பறந்திட்டிட
    கிளைத்து எழுகின்ற பொருளாசை என்கின்ற பறவை பிறர் தெளிவாக எடுத்துச் சொன்னாலும் தெளியாமல் மேலும் மேலும் பறப்பதாயிருக்க,
  • மாயா பிரத்தம் வந்து அடு வாத சுரம் பித்தம் உளைப்புடன் பல வாயுவும் மிஞ்சி
    உலக மாயை மிகுந்து, உண்டாகின்ற வாதம், சுரம், பித்தம் இவைகளின் வேதனைகளோடு பல வகையான வாயுக்களும் அதிகரித்து,
  • பெலத்தையும் சில நாளுள் ஒடுங்கி தடி மேலாய்ப் பிடித்திடும் பல நாள் கொடு
    இருக்கின்ற உடல்வலிமையும் சில தினங்களுக்குள் ஒடுங்கி, தடி மேல் கை ஊன்றுவதாகி, பல நாட்கள் செல்ல,
  • மந்திக் குலுத்து எனும்படி கூனி அடங்கிப் பிசக்கு வந்திடு(ம்) போது பின் அஞ்சிச் சடம் ஆமோ
    குரங்குக் கூட்டத்தவன் என்று சொல்லும் படியாக உடல் கூனி, சத்துக்கள் அடங்கி, மரணம் வந்திடும் சமயத்தில் பின்பு பயப்படுவதான இந்த உடலால் ஏதேனும் பயன் உண்டோ?
  • தரித்த னந்தன தானன தந்தத் திமித்தி மிந்திமி தீதக திந்தத் தடுட்டு டுண்டுடு டூடுடி மிண்டிட்டு இயல்தாளம்
    (இந்த அடிகளுக்கு ஏற்ப) ஒலிக்கின்ற தாளத்துடன்,
  • தனத்த குந்தகு தானன தந்தக் கொதித்து வந்திடு சூர் உடல் சிந்தச் சலத்துடன் கிரி தூள் பட எறிந்திட்டிடும் வேலா
    தனத்த குந்தகு தானன தந்த என்ற ஓசையுடன் கோபித்து எழுந்து (போருக்கு) வந்த சூரனுடைய உடல் அழியவும், கடல் வற்றிப் போவதுடன் கிரெளஞ்ச மலை பொடிபடவும் வேலாயுதத்தை எறிந்தவனே,
  • சிரத்துடன் கரம் ஏடு பொழிந்திட்டு இரைத்து வந்து அமரோர்கள் படிந்துச் சிரத்தினும் கமழ் மாலை மணம் பொன் சரணோனே
    தலை வணக்கத்துடன் கையிலுள்ள மலர்களைப் பொழிந்து போற்றி செய்யும் தேவர்கள் அவர்களது சிரத்தில் தலையில் மணக்கின்ற மாலைகளின் நறு மணத்தைப் பெற்ற அழகிய திருவடிகளை உடையவனே,
  • செகத்தினில் குருவாகிய தந்தைக்கு அளித்திடும் குரு
    உலகில் குருவாய் விளங்கும் உனது தந்தையாகிய சிவபெருமானுக்கு வேத உபதேசம் அளித்த பரமகுருவே,
  • ஞான ப்ரசங்க* திருப் பெருந்துறை மேவிய கந்தப் பெருமாளே.
    (உன் தந்தை) ஞானச் சொற்பொழிவு செய்த தலமாகிய திருப்பெருந்துறையில்** விரும்பி வீற்றிருக்கும் கந்தப் பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com