தானானத் தனதான தானானத் ...... தனதான
நீதானெத் தனையாலும் நீடூழிக் ...... க்ருபையாகி
மாதானத் தனமாக மாஞானக் ...... கழல்தாராய்
வேதாமைத் துனவேளே வீராசற் ...... குணசீலா
ஆதாரத் தொளியானே ஆரூரிற் ...... பெருமாளே.
- நீதானெத் தனையாலும்
நீ ஒருவன்தான் எல்லா வகையாலும் - நீடூழிக் க்ருபையாகி
ஊழிக்காலம் வரைக்கும் எப்போதும் அருள் நிறைந்தவனாகி - மாதானத் தனமாக
சிறந்த தானப் பொருளாக - மாஞானக் கழல்தாராய்
மேலான ஞான பீடமாகிய உன் திருவடிகளைத் தந்தருள்வாய். - வேதாமைத்துனவேளே
பிரம்மனுக்கு மைத்துனனாகிய முருக வேளே, - வீரா சற்குணசீலா
வீரனே, நற்குணங்கள் யாவும் நிரம்பப் பெற்றவனே, - ஆதாரத்து ஒளியானே
ஆறு* ஆதாரங்களிலும் ஒளிவிட்டுப் பிரகாசிப்பவனே, - ஆரூரிற் பெருமாளே.
திருவாரூரில்** இருக்கும் பெருமாளே.



