திருப்புகழ் 808 பச்சை யொண்கிரி (திருநள்ளாறு)

தத்த தந்தன தானன தானன
தத்த தந்தன தானன தானன
தத்த தந்தன தானன தானன ...... தனதான
பச்சை  யொண்கிரி  போலிரு  மாதன 
முற்றி  தம்பொறி  சேர்குழல்  வாளயில் 
பற்று  புண்டரி  காமென  ஏய்கயல்  ......  விழிஞான 
பத்தி  வெண்டர  ளாமெனும்  வாணகை 
வித்ரு  மஞ்சிலை  போல்நுத  லாரிதழ் 
பத்ம  செண்பக  மாமநு  பூதியி  ......  னழகாளென் 
றிச்சை  யந்தரி  பார்வதி  மோகினி 
தத்தை  பொன்கவி  னாலிலை  போல்வயி 
றிற்ப  சுங்கிளி  யானமி  னூலிடை  ......  யபிராமி 
எக்கு  லங்குடி  லோடுல  கியாவையு 
மிற்ப  திந்திரு  நாழிநெ  லாலற 
மெப்பொ  தும்பகிர்  வாள்கும  ராஎன  ......  வுருகேனோ 
கச்சை  யுந்திரு  வாளுமி  ராறுடை 
பொற்பு  யங்களும்  வேலுமி  ராறுள 
கட்சி  வங்கம  லாமுக  மாறுள  ......  முருகோனே 
கற்ப  கந்திரு  நாடுயர்  வாழ்வுற 
சித்தர்  விஞ்சையர்  மாகர்ச  பாசென 
கட்ட  வெங்கொடு  சூர்கிளை  வேரற  ......  விடும்வேலா 
நச்சு  வெண்பட  மீதணை  வார்முகில் 
பச்சை  வண்புய  னார்கரு  டாசனர் 
நற்க  ரந்தநு  கோல்வளை  நேமியர்  ......  மருகோனே 
நற்பு  னந்தனில்  வாழ்வளி  நாயகி 
யிச்சை  கொண்டொரு  வாரண  மாதொடு 
நத்தி  வந்துந  ளாறுறை  தேவர்கள்  ......  பெருமாளே. 
  • பச்சை யொண்கிரி போலிரு மாதனம்
    பச்சையானதும், ஒளி பொருந்தியதுமான இரு பெரிய மார்பகங்கள்,
  • உற்று இதம்பொறி சேர்குழல்
    மொய்த்து இன்பம் துய்க்கும் வண்டுகள் முரலும் கூந்தல்,
  • வாளயில் பற்று புண்டரி காமென ஏய்கயல்விழி
    ஒளிகொண்ட வேலையும், தாமரையையும் போன்ற மீனை ஒத்த கண் விழிகள்,
  • ஞான பத்தி வெண்டர ளாமெனும் வாணகை
    ஞான ஒளி வரிசையில் உள்ள வெண்முத்துக்களைப் போன்று ஒளிவீசும் பற்கள்,
  • வித்ருமஞ்சிலை போல்நுதலாரிதழ் பத்ம செண்பகமாம்
    வில்லைப் போன்ற நெற்றி, பவளத்தையும், தாமரையையும் செண்பகப்பூவையும் போன்ற இதழ்கள்,
  • அநு பூதியின் அழகாளென்று
    இவையெல்லாம் கொண்ட, ஞான அநுபவத்தின் அழகியானவள்,
  • இச்சை யந்தரி பார்வதி மோகினி
    இச்சையெல்லாம் பூர்த்தி செய்யும் பராகாச வடிவினாள், பேரழகியான பார்வதி,
  • தத்தை பொன்கவி னாலிலை போல்வயிறி
    கிளி, பொன்னின் அழகுடைய ஆலிலை போன்ற வயிற்றினள்,
  • இற்பசுங்கிளியான மினூலிடை யபிராமி
    இல்லறம் நடத்தும் பசுங்கிளி போன்றவள், மின்னலும் நூலும் போன்ற இடையை உடையவள்,
  • எக்குலங் குடிலோடு உலகியாவையும்
    எல்லாக் குலத்தாருக்கும், எல்லா உடலுக்கும், எல்லா உலகங்களுக்கும்,
  • இற்பதிந்து இரு நாழிநெலால் அறம்
    இருந்த இடத்தில் இருந்தே இரண்டு படி நெல் கொண்டு முப்பத்திரண்டு அறங்களையும்*
  • எப்பொ தும்பகிர்வாள்குமரா என வுருகேனோ
    எப்பொழுதும் பங்கிட்டு அளிப்பவளாகிய பார்வதியின் குமரனே என்று கூறி உள்ளம் உருக மாட்டேனோ?
  • கச்சை யுந்திரு வாளுமி ராறுடை பொற்புயங்களும்
    அரையில் கச்சை, அழகிய வாள், பன்னிரண்டு அழகிய தோள்கள்,
  • வேலுமிராறுள கண் சிவங் கமலாமுகமாறுள முருகோனே
    வேல், பன்னிரண்டு கண்கள், மங்களமான தாமரை போன்ற ஆறு திருமுகங்கள் - இவை கொண்ட முருகனே,
  • கற்ப கந்திரு நாடுயர் வாழ்வுற
    கற்பகமரம் உள்ள செல்வம் நிறைந்த தேவர்களின் நாடு உயர்ந்த வாழ்வைப் பெறவும்,
  • சித்தர் விஞ்சையர் மாகர் சபாசென
    சித்தர்களும், விஞ்சையர்களும், தேவர்களும் சபாஷ்** என்று மெச்சவும்,
  • கட்ட வெங்கொடு சூர்கிளை வேரற விடும்வேலா
    துன்பம் தந்துவந்த கொடும் சூரர்களின் சுற்றத்தார் யாவரும் வேரறச் செலுத்திய வேலனே,
  • நச்சு வெண்பட மீதணைவார்
    விஷமுள்ள வெண்ணிறப் படம் உடைய ஆதிசேஷன்மீது படுக்கை கொண்டவர்,
  • முகில் பச்சை வண்புய னார்கருடாசனர்
    கருமுகிலின், மரகதப்பச்சையின் நிறம் கொண்டு வளமார்ந்த புயத்தை உடைய கருட வாகனர்,
  • நற்க ரந்தநு கோல்வளை நேமியர் மருகோனே
    நல்ல கரத்தில் வில் (சாரங்கம்), அம்பு, சங்கு (பாஞ்சஜன்யம்), சக்கரம் (சுதர் னம்) இவற்றைக் கொண்ட திருமாலின் மருகனே,
  • நற்புனந்தனில் வாழ்வளி நாயகி
    நல்ல தினைப்புனத்தில் வாழ்ந்திருந்த வள்ளிநாயகியின்
  • இச்சை கொண்டொரு வாரண மாதொடு
    காதலைப் பெற்று, ஒப்பற்ற யானை ஐராவதம் வளர்த்த தேவயானையுடன்
  • நத்தி வந்துந ளாறுறை தேவர்கள் பெருமாளே.
    விரும்பி வந்து திருநள்ளாறு*** என்ற தலத்தில் உறைகின்றவனே, தேவர்களின் பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com