திருப்புகழ் 805 சோதி மந்திரம் (திருவம்பர்)

தான தந்தனந் தான தந்ததன
தான தந்தனந் தான தந்ததன
தான தந்தனந் தான தந்ததன ...... தந்ததான
சோதி  மந்திரம்  போத  கம்பரவு 
ஞான  கம்பரந்  தேயி  ருந்தவெளி 
தோட  லர்ந்தபொன்  பூவி  ருந்தஇட  ......  முங்கொளாமல் 
சூது  பந்தயம்  பேசி  யஞ்சுவகை 
சாதி  விண்பறிந்  தோடு  கண்டர்மிகு 
தோத  கம்பரிந்  தாடு  சிந்துபரி  ......  கந்துபாயும் 
வீதி  மண்டலம்  பூண  மர்ந்துகழி 
கோல  மண்டிநின்  றாடி  யின்பவகை 
வேணு  மென்றுகண்  சோர  ஐம்புலனொ  ......  டுங்குபோதில் 
வேதி  யன்புரிந்  தேடு  கண்டளவி 
லோடி  வெஞ்சுடுங்  காட  ணைந்துசுட 
வீழ்கி  வெந்துகுந்  தீடு  மிந்தஇட  ......  ரென்றுபோமோ 
ஆதி  மண்டலஞ்  சேர  வும்பரம 
சோம  மண்டலங்  கூட  வும்பதும 
வாளன்  மண்டலஞ்  சார  வுஞ்சுழிப  ......  டர்ந்ததோகை 
ஆழி  மண்டலந்  தாவி  யண்டமுத 
லான  மண்டலந்  தேடி  யொன்றதொமு 
கான  மண்டலஞ்  சேட  னங்கணயில்  ......  கொண்டுலாவிச் 
சூதர்  மண்டலந்  தூளெ  ழுந்துபொடி 
யாகி  விண்பறந்  தோட  மண்டியொரு 
சூரி  யன்திரண்  டோட  கண்டுநகை  ......  கொண்டவேலா 
சோடை  கொண்டுளங்  கான  மங்கைமய 
லாடி  இந்திரன்  தேவர்  வந்துதொழ 
சோழ  மண்டலஞ்  சாரு  மம்பர்வளர்  ......  தம்பிரானே. 
  • சோதி மந்திரம் போதகம் பரவு ஞான அகம் பரந்தே இருந்த வெளி தோடு அலர்ந்த பொன் பூ இருந்த இடமும் கொ(ள்)ளாமல்
    (யோகத்தால் அடையப்படும்) ஜோதி ஒளி மண்டபம், ஞான உபதேசத்தால் அடையக்கூடிய ஞானாகாசமாகிய பரந்த பெரு வெளி, இதழ் அவிழ்ந்த (கற்பகப்) பொன் மலர் மணக்கும் தேவலோகம் (இத்தகைய மேலான பதங்களை அடையும் முயற்சியைக்) கொள்ளாமல்,
  • சூது பந்தயம் பேசி அஞ்சு வகை சாதி விண் பறிந்து ஓடு கண்டர் மிகு தோதகம் பரிந்து ஆடு சிந்து பரி கந்து பாயும் வீதி மண்டலம் பூண் அமர்ந்து
    சூதாட்டப் பந்தயங்கள் பேசி, ஐந்து வகைப்பட்ட இனத்தினரான ஐம்புலன்கள், விண்ணையும் நிலை பெயர்த்து ஓட வல்ல வீரர்கள், மிக்க வஞ்சகச் செயல்களை அன்பு காட்டுவது போல காட்டி, கடல் குதிரை முழுப் பாய்ச்சல் பாய்வது போலப் பாய்ந்து செல்லும் வீதிவட்டத்தில் சிக்கிக் கொண்டு,
  • கழி கோல(ம்) மண்டி நின்று ஆடி இன்ப வகை வேணும் என்று கண் சோர ஐம்புலன் ஒடுங்கு போதில்
    மிக்க அலங்காரங்கள் நிறையும்படி நின்று அனுபவித்து, இன்ப வகையே வேண்டும் என்று இருந்தும், கண் பார்வை தளர்ந்து, ஐம்புலன்களும் ஒடுங்குகின்ற சமயத்தில்,
  • வேதியன் புரிந்து ஏடு கண்ட அளவில் ஓடி வெம் சுடும் காடு அணைந்து சுட வீழ்கி வெந்து உகுந்தீடும் இந்த இடர் என்று போமோ
    பிரமன் தெரிந்து அனுப்பிய சீட்டைப் பார்த்த அளவில், உயிர் பிரிந்து ஓட, கொடிய சுடுகாட்டைச் சேர்ந்து (என் உற்றார்) உடலைச் சுட்டு எரிக்க, கழிந்து போய் சாம்பலாகிச் சிதறிப் போகின்ற இந்த துன்பம் என்று ஒழியுமோ?
  • ஆதி(த்த) மண்டலம் சேரவும் பரம சோம மண்டலம் கூடவும் பதும வாளன் மண்டலம் சாரவும்
    சூரிய மண்டலங்கள் யாவும் ஒன்று சேரவும், சிறந்த சந்திர மண்டலங்கள் அதனுடன் சேரவும், தாமரையில் வீற்றிருக்கும் பிரமனது உலகம் அங்கு கூடவும்,
  • சுழி படர்ந்த தோகை ஆழி மண்டலம் தாவி அண்ட முதலான மண்டலம் தேடி ஒன்ற அதொ முக(மா)ன மண்டலம் சேடன் அங்கு அ(ண்)ண அயில் கொண்டு உலாவி
    (கண் போன்ற) பீலிகள் படர்ந்துள்ள தோகையைக் கொண்ட உனது மயில் கடல் வட்டத்தைக் கடந்து, ஆங்காங்கே உள்ள பற்பல அண்டங்களைத் தேடிப் பொருந்தியும், கீழே உள்ள பாதாள லோகத்தில் உள்ள ஆதிசேஷனை அங்கு கொத்தவும், கையில் நீ வேல் கொண்டு உலாவி,
  • சூதர் மண்டலம் தூள் எழுந்து பொடியாகி விண் பறந்து ஓட மண்டி ஒரு சூரியன் திரண்டு ஓட கண்டு நகை கொண்ட வேலா
    சூரியர்களின் மண்டலங்கள் தூளாகி எழுந்து பொடியாகி வானில் பறந்தோடவும், அங்ஙனம் தூசுப்புயல் நெருங்கி வருவதைக் கண்டு ஒவ்வொரு சூரியனும் (உருண்டு புரண்டு) ஓடுவதைக் கண்டு சிரித்து விளையாடிய வேலனே,
  • சோடை கொண்டு உளம் கான மங்கை மயல் ஆடி இந்திரன் தேவர் வந்து தொழ
    உள்ளத்தில் விருப்பம் கொண்டு காட்டில் வாழும் மங்கையாகிய வள்ளியின் மீது எழுந்த மோகத்தில் அவளுடன் விளையாடி, இந்திரனும் மற்ற தேவர்களும் வந்து வணங்க,
  • சோழ மண்டலம் சாரும் அம்பர் வளர் தம்பிரானே.
    சோழ மண்டலத்தைச் சார்ந்த திருவம்பர்* என்னும் தலத்தில் வாழ்ந்து வீற்றிருக்கும் தம்பிரானே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com