தனன தனதன தனன தனதன
தான தானன ...... தனதான
குவளை பொருதிரு குழையை முடுகிய
கோல வேல்விழி ...... மடவார்தங்
கொடிய ம்ருகமத புளக தனகிரி
கூடி நாடொறு ...... மயலாகித்
துவள வுருகிய சரச விதமது
சோர வாரிதி ...... யலையூடே
சுழலு மெனதுயிர் மவுன பரமசு
கோம கோததி ...... படியாதோ
கவள கரதல கரட விகடக
போல பூதர ...... முகமான
கடவுள் கணபதி பிறகு வருமொரு
கார ணாகதிர் ...... வடிவேலா
பவள மரகத கநக வயிரக
பாட கோபுர ...... அரிதேரின்
பரியு மிடறிய புரிசை தழுவிய
பாகை மேவிய ...... பெருமாளே.
- குவளை பொருது இரு குழையை முடுகிய
குவளை மலரை விட அழகானது என்று அதனுடன் போர் செய்வதாகி, இரு காதுகளிலும் உள்ள குண்டலங்களை விரட்டக் கூடியதாகி, - கோல வேல் விழி மடவார் தம்
அழகிய வேல் போன்றதாகிய கூரிய கண்களை உடைய விலைமாதர்களின் - கொடிய ம்ருகமத புளக தன கிரி கூடி நாடொறு(ம்) மயல்
ஆகி
பொல்லாதனவும், கஸ்தூரி அணிந்தனவும், புளகம் கொண்டனவுமான மலை போன்ற மார்பகங்களை அணைந்து ஒவ்வொரு நாளும் மோகம் கொண்டவனாய், - துவள உருகிய சரச விதம் அது சோர வாரிதி அலையூடே
துவளும்படி உருகிய சரச லீலை விதங்களில் தளர்ச்சியுற, காமக் கடல்களின் அலைகளுக்கு உள்ளே - சுழலும் எனது உயிர் மவுன பரம சுகம் மகா உததி படியாதோ
சுழல்கின்ற என்னுடைய உயிர் மவுன நிலை என்கின்ற பரம சுகம் ஆகிய பெரிய கடலில் மூழ்கித் திளைக்காதோ? - கவள கர தல கரட விகட கபோல பூதர முகமான
வாயளவு கொண்ட உணவை உட்கொள்ளும் துதிக்கையையும், மதம் பாயும் சுவடு கொண்ட அழகிய கன்னத்தையும், யானையின் முகத்தையும் கொண்ட - கடவுள் கணபதி பிறகு வரும் ஒரு காரணா கதிர் வடிவேலா
கடவுளாகிய கணபதிக்குப் பின்னால் தோன்றிய ஒப்பற்ற மூலப் பொருளே, ஒளி வீசும் வடி வேலனே, - பவள மரகத கநக வயிர கபாட கோபுர அரி தேரின் பரியும்
இடறிய புரிசை தழுவிய பாகை மேவிய பெருமாளே.
பவளத்தின் செந்நிறத்தையும், மரகதத்தின் பச்சை நிறத்தையும், பொன்னின் மஞ்சள் நிறத்தையும், வைரத்தின் வெண்மை நிறத்தையும் கொண்ட கதவுகளையும், கோபுரத்தையும் கொண்டு, சூரியனது தேரின் குதிரைகளும் இடறும்படி உயர்ந்துள்ள மதில்கள் சூழ்ந்துள்ள பாகை* என்னும் தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே.