திருப்புகழ் 786 சூலம் என ஓடு (திருக்கடவூர்)

தானதன தான தத்த தானதன தான தத்த
தானதன தான தத்த ...... தனதான
சூலமென  வோடு  சர்ப்ப  வாயுவைவி  டாத  டக்கி 
தூயவொளி  காண  முத்தி  ......  விதமாகச் 
சூழுமிருள்  பாவ  கத்தை  வீழ  அழ  லூடெ  ரித்து 
சோதிமணி  பீட  மிட்ட  ......  மடமேவி 
மேலைவெளி  யாயி  ரத்து  நாலிருப  ராப  ரத்தின் 
மேவியரு  ணாச  லத்தி  ......  னுடன்மூழ்கி 
வேலுமயில்  வாக  னப்ர  காசமதி  லேத  ரித்து 
வீடுமது  வேசி  றக்க  ......  அருள்தாராய் 
ஓலசுர  ராழி  யெட்டு  வாளகிரி  மாய  வெற்பு 
மூடுருவ  வேல்தொ  டுத்த  ......  மயில்வீரா 
ஓதுகுற  மான்வ  னத்தில்  மேவியவள்  கால்பி  டித்து 
ளோமெனுப  தேச  வித்தொ  ......  டணைவோனே 
காலனொடு  மேதி  மட்க  வூழிபுவி  மேல்கி  டத்து 
காலனிட  மேவு  சத்தி  ......  யருள்பாலா 
காலமுதல்  வாழ்பு  விக்க  தாரநகர்  கோபு  ரத்துள் 
கானமயில்  மேல்த  ரித்த  ......  பெருமாளே. 
  • சூலம் என ஓடு சர்ப்ப வாயுவை விடாது அடக்கி
    சூலம் போல மூன்று கிளைகளாக* ஓடுகின்ற பாம்பு போன்ற பிராணவாயுவை வெளியேறாது அடக்கி,
  • தூய ஒளி காண முத்தி விதமாக
    பரிசுத்தமான பர ஒளியைக் காணவும், முத்தி நிலை கை கூடவும்,
  • சூழும் இருள் பாவகத்தை வீழ அழல் ஊடு எரித்து
    சூழ்ந்துள்ள ஆணவ இருளாகிய உருவத்தை அழிபடும்படியாக யோக நெருப்பில் அதை எரித்து,
  • சோதி மணி பீடம் இட்ட மடம் மேவி
    ஜோதி ரத்னபீடம் அமைந்துள்ள நிர்மலமான வீட்டை அடைந்து,
  • மேலை வெளி ஆயிரத்து நால் இரு பராபரத்தின் மேவி அருணாசலத்தினுடன் மூழ்கி
    அந்த மேலைப் பெரு வெளியிலே, ஆயிரத்தெட்டு இதழோடு கூடிய மேலான குரு கமலத்தில் ( ஹஸ்ராரத்தில்)** சேர்ந்து, சிவ ஞான இன்ப ஒளியைப் பிரதிபலிக்கும் புனலில் மூழ்கி,
  • வேலு மயில் வாகன ப்ரகாசம் அதிலே தரித்து
    வேல், மயில் இவைகளின் தரிசன ஒளியை அந்த நிலையில் கிடைக்கப் பெற்று,
  • வீடும் அதுவே சிறக்க அருள் தாராய்
    முக்தி நிலையைச் சிறப்புடன் பெறும் அருளைத் தந்தருளுக.
  • ஓல அசுரர் ஆழி எட்டு வாளகிரி மாய
    ஓலமிட்டு அழும் அசுரர்களும், எட்டுத் திசைகளில் உள்ள கடல்களும், சக்ரவாளகிரியும் அழிபடவும்,
  • வெற்பும் ஊடுருவ வேல் தொடுத்த மயில் வீரா
    கிரெளஞ்ச மலையும் தொளை படும்படியாகவும் வேலைச் செலுத்திய மயில் வீரனே,
  • ஓது குற மான் வனத்தில் மேவி அவள் கால் பிடித்து
    சிறப்பான குற மானாகிய வள்ளியின் தினைப்புனக் காட்டுக்குச் சென்று, அவளுடைய காலை வருடி,
  • உள் ஓம் எனும் உபதேச வித்தொடு அணைவோனே
    அவளுடைய மனத்துள் பதியும்படி ஓம் என்னும் பிரணவ உபதேசமாகிய மூலப் பொருளோடு அவளை அணைந்தவனே,
  • காலனொடு மேதி மட்க ஊழி புவி மேல் கிடத்து காலன்
    யமனுடன் (அவன் வாகனம்) எருமையும் அழிய, விதிப்படியே பூமியின் மேல் விழும்படி உதைத்துக் கிடத்தின காலகாலனாகிய சிவபிரானின்***
  • இடம் மேவு சத்தி அருள் பாலா
    இடப் பாகத்தில் உள்ள பராசக்தி பார்வதி அருளிய பாலனே,
  • காலம் முதல் வாழ் புவிக்கு அதார நகர் கோபுரத்துள்
    ஊழிக் காலம் முதலாக வாழ்ந்து வரும் இந்தப் பூமிக்கு ஆதார நகராயுள்ள திருக்கடவூரில் இருக்கும் கோபுரத்தில்
  • கான மயில் மேல் தரித்த பெருமாளே.
    காட்டு மயில் போன்ற வாகனத்தின் மீது வீற்றிருக்கும் பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com