திருப்புகழ் 755 நாட்டம் தங்கி (வேப்பஞ்சந்தி)

தாத்தந் தந்தத் தந்தத் தனனத் ...... தனதான
நாட்டந்  தங்கிக்  கொங்கைக்  குவடிற்  ......  படியாதே 
நாட்டுந்  தொண்டர்க்  கண்டக்  கமலப்  ......  பதமீவாய் 
வாட்டங்  கண்டுற்  றண்டத்  தமரப்  ......  படைமீதே 
மாற்றந்  தந்துப்  பந்திச்  சமருக்  ......  கெதிரானோர் 
கூட்டங்  கந்திச்  சிந்திச்  சிதறப்  ......  பொருவோனே 
கூற்றன்  பந்திச்  சிந்தைக்  குணமொத்  ......  தொளிர்வேலா 
வேட்டந்  தொந்தித்  தந்திப்  பரனுக்  ......  கிளையோனே 
வேப்பஞ்  சந்திக்  கந்தக்  குமரப்  ......  பெருமாளே. 
  • நாட்டம் தங்கிக் கொங்கைக் குவடில் படியாதே
    விருப்பத்தை (உன் மீது) தங்க வைத்து, பெண்களின் மார்புக்குவட்டில் கவனம் படியாமல்,
  • நாட்டும் தொண்டர்க்கு அண்டக் கமலப் பதம் ஈவாய்
    தங்கள் கருத்தை உன் திருவடியில் நாட்ட வல்ல தொண்டர்களுக்கு தாமரைத் திருவடிகளைத் தந்து அருள் புரிவாய்.
  • வாட்டம் கண்டு உற்று அண்டத்து அமரப் படை மீதே
    சோர்வு காணும்படி விண்ணில் உள்ள தேவர்களின் சேனைகள் மீது
  • மாற்றம் தந்து பந்திச் சமருக்கு எதிரானோர்
    பகைமை மொழிகளைக் கூறி கூட்டமாக போருக்கு எதிர்த்து வந்த அசுரர்களின்
  • கூட்டம் கந்திச் சிந்திச் சிதறப் பொருவோனே
    கூட்டமெல்லாம் கெட்டுப் பிரிந்துச் சிதறும்படி சண்டை செய்பவனே,
  • கூற்றன் பந்திச் சிந்தைக் குணம் ஒத்த ஒளிர் வேலா
    யமனுடைய ஒழுங்கான (நீதி வழுவாத) மனத்தின் பண்பை நிகர்த்து ஒளி வீசும் வேலை உடையவனே,
  • வேட்டம் தொந்தித் தந்திப் பரனுக்கு இளையோனே
    அடியார்களின் விருப்பத்தை (நிறைவேற்றும் பெருமானும்), தொப்பையை உடையவனும் (ஆகிய) யானைமுகப் பெருமானுக்குத் தம்பியே,
  • வேப்பம் சந்திக் கந்தக் குமரப் பெருமாளே.
    வேப்பஞ்சந்தி* என்னும் ஊரில் உறையும் கந்தனே, குமரப் பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com