திருப்புகழ் 739 சீத மதியம் (திருவாமூர்)

தான தனன தனத்தந் ...... தனதான
சீத  மதிய  மெறிக்குந்  ......  தழலாலே 
சீறி  மதனன்  வளைக்குஞ்  ......  சிலையாலே 
ஓத  மருவி  யலைக்குங்  ......  கடலாலே 
ஊழி  யிரவு  தொலைக்கும்  ......  படியோதான் 
மாது  புகழை  வளர்க்குந்  ......  திருவாமூர் 
வாழு  மயிலி  லிருக்குங்  ......  குமரேசா 
காத  லடியர்  கருத்தின்  ......  பெருவாழ்வே 
காலன்  முதுகை  விரிக்கும்  ......  பெருமாளே. 
  • சீத மதிய மெறிக்குந் தழலாலே
    குளிர்ந்த நிலவு வீசுகின்ற நெருப்பாலும்,
  • சீறி மதனன் வளைக்குஞ் சிலையாலே
    கோபத்துடன் மன்மதன் வளைக்கின்ற வில்லினாலும்,
  • ஓத மருவி யலைக்குங் கடலாலே
    அலைகளை வீசி அலைக்கின்ற கடலினாலும்,
  • ஊழி யிரவு தொலைக்கும் படியோதான்
    ஊழிக்காலம் போல நீடித்துள்ள இந்த இரவை எப்படி நான் கழிப்பேன்?
  • மாது புகழை வளர்க்குந் திருவாமூர்
    மாதரசி திலகவதியாரின்* புகழை வளர்க்கும் தலமாம் திருவாமூரில்**
  • வாழு மயிலி லிருக்குங் குமரேசா
    வாழுகின்ற குமரேசனே, மயில் மீது வீற்றிருக்கும் குமரேசனே,
  • காத லடியர் கருத்தின் பெருவாழ்வே
    அன்புள்ள அடியார்களின் கருத்தில் உறையும் பெருஞ் செல்வமே,
  • காலன் முதுகை விரிக்கும் பெருமாளே.
    யமனுடைய முதுகைப் பிளக்கும்படி அடித்து விரட்டும் பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com