திருப்புகழ் 736 காணொணாதது (தேவனூர்)

தான தானன தனனா தனதன
தான தானன தனனா தனதன
தான தானன தனனா தனதன ...... தந்ததான
காணொ  ணாதது  உருவோ  டருவது 
பேசொ  ணாதது  உரையே  தருவது 
காணு  நான்மறை  முடிவாய்  நிறைவது  ......  பஞ்சபூதக் 
காய  பாசம  தனிலே  யுறைவது 
மாய  மாயுட  லறியா  வகையது 
காய  மானவ  ரெதிரே  யவரென  ......  வந்துபேசிப் 
பேணொ  ணாதது  வெளியே  யொளியது 
மாய  னாரய  னறியா  வகையது 
பேத  பேதமொ  டுலகாய்  வளர்வது  ......  விந்துநாதப் 
பேரு  மாய்கலை  யறிவாய்  துரியவ 
தீத  மானது  வினையேன்  முடிதவ 
பேறு  மாயருள்  நிறைவாய்  விளைவது  ......  ஒன்றுநீயே 
வீணொ  ணாதென  அமையா  தசுரரை 
நூறி  யேயுயிர்  நமனீ  கொளுவென 
வேல்க  டாவிய  கரனே  யுமைமுலை  ......  யுண்டகோவே 
வேத  நான்முக  மறையோ  னொடும்விளை 
யாடி  யேகுடு  மியிலே  கரமொடு 
வீற  மோதின  மறவா  குறவர்கு  ......  றிஞ்சியூடே 
சேணொ  ணாயிடு  மிதண்மே  லரிவையை 
மேவி  யேமயல்  கொளலீ  லைகள்செய்து 
சேர  நாடிய  திருடா  வருடரு  ......  கந்தவேளே 
சேரொ  ணாவகை  வெளியே  திரியுமெய்ஞ் 
ஞான  யோகிக  ளுளமே  யுறைதரு 
தேவ  னூர்வரு  குமரா  வமரர்கள்  ......  தம்பிரானே. 
  • காணொணாதது
    கண்களால் காண்பதற்கு முடியாததும்,
  • உருவோ டருவது
    உருவமும் அருவமுமாக இருப்பதும்,
  • பேசொ ணாதது
    பேசுதற்கு முடியாததும்,
  • உரையே தருவது
    பலவித விளக்கங்களுக்கும் இடம் தருவதும்,
  • காணு நான்மறை முடிவாய் நிறைவது
    காணப்படும் நான்கு வேதங்களுக்கும் முடிவான பொருளாய் நிறைந்து நிற்பதும்,
  • பஞ்சபூதக் காய பாசம தனிலே
    ஐம்பூதங்களினால் ஆன இந்த உடம்பின் மேல் உள்ள பாசத்தில்
  • உறைவது
    நிலைத்து நிற்பதும்,
  • மாய மாயுட லறியா
    மாயப் பொருளாக இப்பெரும் உடலால் அறியமுடியாத
  • வகையது
    வகையில் இருப்பதும்,
  • காய மானவ ரெதிரே யவரென
    சரீரத்தை உடைய மனிதர்கள் எதிரே அவர்களைப் போலவே மனித உருக்கொண்டு
  • வந்துபேசிப் பேணொணாதது
    வந்து பேசினாலும், இன்னாரென அறிந்து போற்ற முடியாததும்,
  • வெளியே யொளியது
    ஆகாய வெளியிலே ஒளிப்பிழம்பாகத் திகழ்வதும்,
  • மாயனார் அயன் அறியா வகையது
    திருமால், பிரம்மா இவர்களால் அறியமுடியாத வகையில் இருப்பதும்,
  • பேத அபேதமொடு உலகாய் வளர்வது
    வேற்றுமை, ஒற்றுமை என்ற தன்மைகளோடு உலக ரீதியாக வளர்வதும்,
  • விந்துநாதப் பேருமாய்
    பீடம், லிங்கம் (சக்தி - சிவம்) என்ற பேருடையதாயும்,
  • கலை யறிவாய்
    நூல்களின் சாரமாகவும்,
  • துரிய அதீதமானது
    யோகியரின் உயர் நிலைக்கும் அப்பாற்பட்டதும்,
  • வினையேன் முடிதவ பேறு மாய்
    நல்வினையால் என் முடிந்த தவத்தின் பெரும்பயனானதும்,
  • அருள் நிறைவாய் விளைவது
    திருவருள் நிறைவாக விளங்குகின்றதும்,
  • ஒன்றுநீயே
    இந்த அத்தனையும் பொருந்தி விளங்குபவன் நீ ஒருவன்தான்.
  • வீணொணாதென அமையாத அசுரரை
    வீணான காரியம் கூடாதென விலக்கி அடங்காத அசுரரை
  • நூறியே உயிர் நமனீ கொளுவென
    பொடியாக்கி, அவர்கள் உயிரை யமனிடம் நீ கொள்வாயாக என்று
  • வேல்க டாவிய கரனே
    வேலினைப் பாய்ச்சிய திருக்கரத்தனே,
  • உமைமுலையுண்ட கோவே
    பார்வதியின் ஞானப்பால் அருந்திய அரசனே,
  • வேத நான்முக மறையோனொடும்
    வேதம் கற்ற நான்முக அந்தணன் பிரமனுடன்
  • விளையாடியே குடு மியிலே கரமொடு
    விளையாடி அவன் குடுமியிலே கையால்
  • வீற மோதின மறவா
    பலமாகக் குட்டிய வீரனே,
  • குறவர் குறிஞ்சியூடே
    குறவர் வாழும் வள்ளிமலையில்,
  • சேணொ ணாயிடு மிதண்மேல்
    மிக்க உயரத்தில் கட்டப்பட்ட பரண் மீது
  • அரிவையை மேவியே மயல்கொள லீலைகள்செய்து
    இருந்த பெண் வள்ளியிடம் காதல் மயக்கம் தரும் திருவிளையாடல்கள் செய்து,
  • சேர நாடிய திருடா
    அவளை அணைக்க விரும்பிய திருடனே,
  • அருள் தரு கந்தவேளே
    திருவருள் பாலிக்கும் கந்தக் கடவுளே,
  • சேரொணாவகை வெளியே திரியும்
    எவரும் தம்மிடம் நெருங்க முடியாதபடி வெளியிலே திரிந்து கொண்டிருக்கும்
  • மெய்ஞ்ஞான யோகிகளுளமே
    மெய்ஞ்ஞான யோகிகளின் உள்ளத்தில்
  • உறைதரு
    விளங்கி வீற்றிருப்பவனே,
  • தேவ னூர்வரு குமரா
    தேவனூரில் எழுந்தருளியுள்ள குமரனே,
  • அமரர்கள் தம்பிரானே.
    தேவர்களின் தம்பிரானே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com