தனதன தத்தன தனதன தத்தன
தனதன தத்தன ...... தனதானா
கலகலெ னச்சில கலைகள் பிதற்றுவ
தொழிவ துனைச்சிறி ...... துரையாதே
கருவழிதத்திய மடுவ தனிற்புகு
கடுநர குக்கிடை ...... யிடைவீழா
உலகு தனிற்பல பிறவி தரித்தற
வுழல்வது விட்டினி ...... யடிநாயேன்
உனதடி மைத்திரள் அதனினு முட்பட
வுபய மலர்ப்பத ...... மருள்வாயே
குலகிரி பொட்டெழ அலைகடல் வற்றிட
நிசிசர னைப்பொரு ...... மயில்வீரா
குணதர வித்தக குமர புனத்திடை
குறமக ளைப்புணர் ...... மணிமார்பா
அலைபுன லிற்றவழ் வளைநில வைத்தரு
மணிதிரு வக்கரை ...... யுறைவோனே
அடியவ ரிச்சையி லெவையெவை யுற்றன
அவைதரு வித்தருள் ...... பெருமாளே.
- கலகலெனச்சில கலைகள்
கலகல என்ற ஆரவாரச் சத்தத்துடன் சில நூல்களை - பிதற்றுவது ஒழிவ(து)
ஓதிப் பிதற்றுவது ஒழியவேண்டிய ஒன்றாகும். - உனைச்சிறிதுரையாதே
உன்னைக் கொஞ்சமேனும் துதிக்காமல், - கருவழி தத்திய மடுவதனிற் புகு
கருக்குழியில் வேகமாகச் செலுத்தும் பள்ளத்தில் புகுந்து - கடுநரகுக்கிடை யிடைவீழா
பொல்லாத நரகத்தின் மத்தியில் விழுந்து விடாமல், - உலகு தனிற்பல பிறவி தரித்து
இவ்வுலகில் பல பிறப்புக்களை எடுத்து - அறவுழல்வது விட்டினி
மிகவும் திரிதலை விட்டு, இனியாவது - அடிநாயேன் உனதடிமைத்திரள்
கீழான நாய் போன்ற அடியேனும் உன் அடியார் கூட்டத்தின் - அதனினும் உட்பட
உள்வட்டத்தில் ஒருவனாகும்படியாக - உபய மலர்ப்பதமருள்வாயே
உன்னிரு மலர்ப் பாதங்களை அருள்வாயாக. - குலகிரி பொட்டெழ
கிரெளஞ்சமலைக் கூட்டங்கள் பொடியாகும்படி, - அலைகடல் வற்றிட
அலைவீசும் கடல் நீரின்றி வற்றிப் போகும்படி, - நிசிசரனைப்பொரும் அயில்வீரா
அசுரனாம் சூரனோடு போர் செய்த வேல் வீரனே, - குணதர வித்தக குமர
நற்குணத்தவனே, ஞானமூர்த்தியே, குமரனே, - புனத்திடை குறமகளைப்புணர் மணிமார்பா
தினைப்புனத்தின் இடையே குறமகள் வள்ளியை மணந்த அழகிய மார்பனே, - அலைபுனலிற்றவழ்
அலை வீசும் நீரிலே தவழ்கின்ற - வளைநிலவைத்தரு
சங்குகள் பிரகாசிக்கின்ற - மணிதிருவக்கரையுறைவோனே
அழகிய திருவக்கரைத்* தலத்தில் வீற்றிருப்பவனே, - அடியவர் இச்சையில் எவையெவை யுற்றனஅவை
உன் அடியார்களுடைய மனத்தில் என்னென்ன விருப்பங்கள் உள்ளனவோ அன்ன ஆசைகளை - தருவித்தருள் பெருமாளே.
வரவழைத்து நிறைவேற்றி அருளும் பெருமாளே.