தனதத்தன தானதன தனதத்தன தானதன
தனதத்தன தானதன ...... தனதானா
சொருபப்பிர காசவிசு வருபப்பிர மாகநிச
சுகவிப்பிர தேசரச ...... சுபமாயா
துலியப்பிர காசமத சொலியற்றர சாசவித
தொகைவிக்ரம மாதர்வயி ...... றிடையூறு
கருவிற்பிற வாதபடி யுருவிற்பிர மோதஅடி
களையெத்திடி ராகவகை ...... யதின்மீறிக்
கருணைப்பிர காசவுன தருளுற்றிட ஆசில்சிவ
கதிபெற்றிட ரானவையை ...... யொழிவேனோ
குருகுக்குட வாரகொடி செருவுக்கிர ஆதபயில்
பிடிகைத்தல ஆதியரி ...... மருகோனே
குமரப்பிர தாபகுக சிவசுப்பிர மாமணிய
குணமுட்டர வாவசுரர் ...... குலகாலா
திருவொற்றியு றாமருவு நகரொற்றியுர் வாரிதிரை
யருகுற்றிடு மாதிசிவ ...... னருள்பாலா
திகழுற்றிடு யோகதவ மிகுமுக்கிய மாதவர்க
ளிதயத்திட மேமருவு ...... பெருமாளே.
- சொருபப் பிரகாச விசுவருப
பிரகாசமான உருவத்தை உடையவனே, சராசரம் யாவையும் கொண்ட பேருருவனே, - பிரமாக நிச சுக
பிரம்மப் பொருளாக நின்று, உண்மையான சுகத்தைத் தருபவனே, - விப்பிர தேச ரச சுப
அந்தணரின் தேஜை உடையவனே, இன்ப சுபப் பொருளே, - மாயா துலியப் பிரகாச
அழியாத சுத்தப் பிரகாசனே, - மத சொலியற்ற ரசா
மதங்களின் தொந்தரவைக் கடந்த இன்பம் கூடியவனே, - சவித தொகை விக்ரம
பலவகையான பராக்கிரமத்தை உடையவனே, - மாதர் வயிறிடையூறு கருவிற்பிறவாதபடி
மாதரின் வயிற்றிடையே ஊறும் கருவில் பிறவாதபடி, - உருவிற்பிரமோத அடிகளை யெத்திடு
உன் திருவுருவில் விரும்பத்தக்க திருவடிகளைப் போற்றும் - இராகவகை யதின்மீறி
கீத வகைகளில் மேம்பட்டவனாய் யான் ஆகி, - கருணைப்பிரகாச உன தருளுற்றிட
கருணை ஒளிப்பிழம்பே, உன் திருவருள் கூடுவதால் - ஆசில்சிவ கதிபெற்று இடரானவையை யொழிவேனோ
குற்றமற்ற சிவகதியை யான் பெற்று, துன்பங்கள் யாவையும் கடக்க மாட்டேனோ? - குரு குக்குட வார கொடி
நிறமுள்ள சேவல் நிறைந்து விளங்கும் கொடியை உடையவனே, - செரு வுக்கிர ஆதப அயில்
போரில் உக்கிரமாக, வெயில் ஒளி வீசும் வேலினை - பிடிகைத்தல ஆதி அரி மருகோனே
பிடித்துள்ள திருக்கரங்களை உடைய ஆதியே, திருமாலின் மருகனே, - குமரப்பிரதாப குக
குமரனே, கீர்த்தி உள்ளவனே, குகனே, - சிவசுப்பிர மாமணிய
மிகத் தூய்மையான பேரொளியோனே, - குணமுட்டர் அவாவசுரர் குலகாலா
குணக் குறைவுள்ளவரும் ஆசை மிகுந்தவருமான அசுரர்களின் குலத்துக்கே யமனாக நின்றவனே, - திருவொற்றி யுறாமருவு நகரொற்றியுர்
லக்ஷ்மி சேர்ந்து பொருந்தி இருக்கும் நகரமான திருவொற்றியூரில்* - வாரிதிரை யருகுற்றிடும் ஆதிசிவனருள்பாலா
கடல் அலைக்குச் சமீபத்தில் இருக்கும் ஆதிசிவன் அருளிய குழந்தையே, - திகழுற்றிடு யோகதவ மிகுமுக்கிய மாதவர்கள்
விளக்கம் கொண்ட யோகத்திலும், தவத்திலும் மிக்க சிறப்பு அடைந்த மகா தவசிகளின் - இதயத்திட மேமருவு பெருமாளே.
நெஞ்சம் என்னும் இடத்திலே வீற்றிருக்கும் பெருமாளே.