தனன தனதன தனதன தனதன
தனன தனதன தனதன தனதன
தனன தனதன தனதன தனதன ...... தனதான
கொடிய மறலியு மவனது கடகமு
மடிய வொருதின மிருபதம் வழிபடு
குதலை யடியவ னினதருள் கொடுபொரு ...... மமர்காண
குறவர் மகள்புணர் புயகிரி சமுகமு
மறுமு கமும்வெகு நயனமும் ரவியுமிழ்
கொடியு மகிலமும் வெளிபட இருதிசை ...... யிருநாலும்
படியு நெடியன எழுபுண ரியுமுது
திகிரி திகிரியும் வருகென வருதகு
பவுரி வருமொரு மரகத துரகத ...... மிசையேறிப்
பழய அடியவ ருடனிமை யவர்கண
மிருபு டையுமிகு தமிழ்கொடு மறைகொடு
பரவ வருமதி லருணையி லொருவிசை ...... வரவேணும்
சடில தரவிட தரபணி தரதர
பரசு தரசசி தரசுசி தரவித
தமரு கமிருக தரவனி தரசிர ...... தரபாரத்
தரணி தரதநு தரவெகு முககுல
தடினி தரசிவ சுதகுண தரபணி
சயில விதரண தருபுர சசிதரு ...... மயில்வாழ்வே
நெடிய வுடலுரு இருளெழ நிலவெழ
எயிறு சுழல்விழி தழலெழ எழுகிரி
நெரிய அதிர்குரல் புகையெழ இடியெழ ...... நெடுவானும்
நிலனும் வெருவர வருநிசி சரர்தள
நிகில சகலமு மடியவொர் படைதொடு
நிருப குருபர சுரபதி பரவிய ...... பெருமாளே.
- கொடிய மறலியும் அவனது கடகமு மடிய
கொடியவனான யமனும், அவனது யமப்படையும் இறக்க, - ஒருதினம் இருபதம் வழிபடு
ஒருநாள் உன் இரண்டு திருவடிகளையும் வழிபட்டு நிற்கும் - குதலை அடியவன
மழலைச் சிறுவனாகிய நான் - நினதருள் கொடு
உன் திருவருளையே துணையாகக்கொண்டு - பொரும் அமர்காண
யமனோடு சண்டை செய்யும் போரினைக் காண்பதற்கு, - குறவர் மகள்புணர் புயகிரி சமுகமும்
குறமகள் வள்ளி கட்டித் தழுவும் பன்னிரு புயமலைகளும், - அறுமுகமும் வெகு நயனமும்
ஆறு திருமுகங்களும், பலவான (பதினெட்டு)* கண்களும், - ரவியுமிழ் கொடியும்
சூரியனைக் கூவி வெளிப்படுத்தும் சேவல் இருக்கும் கொடியும், - அகிலமும் வெளிபட
இவையாவும் பிரத்யக்ஷமாக, - இருதிசை யிருநாலும்
மேல் கீழ் என்ற இரு திசைகளோடு எட்டுத் திசைகளையும், - படியு நெடியன எழுபுண ரியும்
பூமியையும், நீண்ட ஏழு கடல்களையும், - முது திகிரி
பழமையான சக்ரவாளகிரியையும், - திகிரியும் வருகென வருதகு
வலம் செய்து வருக என்று ஆணையிட்டதும் உடனேயே ஆடிவந்து - பவுரி வருமொரு மரகத துரகத மிசையேறி
கூத்தாடுகின்ற ஒரு பச்சைமயில் வாகனத்தின் மீது ஏறி, - பழய அடியவருடன்
பழமையான அடியார்களுடன், - இமையவர்கணம் இருபுடையும்
தேவர் கூட்டம் இருபுறமும் - மிகு தமிழ்கொடு மறைகொடு பரவ
மிகுந்த தமிழ்ப் பாடல்களையும் வேதகீதங்களையும் பாடி வணங்க, - வரும் அதில் அருணையில்
முன்னொருமுறை திருவண்ணாமலையில் என்முன் வந்ததுபோல - ஒருவிசை வரவேணும்
இன்னொரு முறை வந்தருளல் வேண்டும். - சடிலதர விடதர
ஜடாமுடியைத் தாங்குபவரும், ஆலகால விஷத்தைக் கண்டத்தில் தரித்தவரும், - பணிதர தரபரசுதர
பாம்புகளை ஆபரணங்களாகப் பூண்டவரும், மேன்மையான மழுவைத் தாங்கியவரும், - சசிதர சுசிதர
சந்திரனை முடியில் தரித்தவரும், தூய்மையே உருவாக நிற்பவரும், - இத தமருக மிருக தர
இதமாய் ஒலிக்கும் உடுக்கையையும், மானையும் திருக்கரங்களில் ஏந்தியவரும், - வனிதர சிரதர
பார்வதிதேவியை இடப்பாகத்தில் தாங்கியவரும், பிரம்மனின் சிரத்தைத் தாங்கியவரும், - பாரத் தரணிதர
சுமையான இந்த பூமியைத் தாங்கியவரும், - தநுதர
மேருமலையையே வில்லாகத் தரித்தவரும், - வெகு முககுல தடினி தர
ஆயிரம் முகங்களை உடைய சிறந்த கங்காதேவியைச் சிரத்தில் தாங்கியவரும் - சிவ சுத
ஆகிய சிவ பெருமானுடைய திருப்புதல்வனே, - குண தர
அரும் குணங்களை உடையவனே, - பணி சயில
நாகமலை** என்ற திருச்செங்கோட்டில் எழுந்தருளி இருப்பவனே, - விதரண
தயாள மூர்த்தியே, - தருபுர சசிதரு
கற்பகத் தருவுள்ள தேவநாட்டின் இந்திராணி மகள் - மயில்வாழ்வே
மயிலை ஒத்த அழகி தேவயானையின் வாழ்வாக இருப்பவனே, - நெடிய வுடலுரு இருளெழ
அசுரர்களின் நீண்ட உடம்பின் கரிய வடிவத்திலிருந்து இருள் வீசவும், - எயிறு நிலவெழ
அவர்களின் பற்களிலிருந்து ஒளி வீசவும், - சுழல்விழி தழலெழ
சுழல்கின்ற கண்களிலிருந்து நெருப்புப் பொறி பறக்கவும், - எழுகிரி நெரிய
ஏழு குலகிரிகள் நெரிந்து பொடிபடவும், - அதிர்குரல் புகையெழ இடியெழ
அதிர்கின்ற குரலிலிருந்து புகை எழவும், இடி போன்ற பேரொலி எழவும், - நெடுவானும் நிலனும் வெருவர
விசாலமான ஆகாயமும், பூமியும் அச்சப்படவும் - வருநிசிசரர்தள
வருகின்ற அசுரர்களின் சேனைகள் - நிகில சகலமு மடிய
சிறிதும் மீதமில்லாமல் முழுவதும் அழிந்தொழிய - ஓர் படைதொடு நிருப
ஒப்பற்ற சர்வ சம்கார வேற்படையை ஏவிய தலைவனே, - குருபர
மேலான குருநாதனே, - சுரபதி பரவிய பெருமாளே.
தேவர் கோமான் இந்திரனால் துதிக்கப் பெற்ற பெருமாளே.