திருப்புகழ் 589 இடம் பார்த்து (திருச்செங்கோடு)

தனந்தாத் தனந்தாத் தனந்தாத் தனந்தாத்
தனந்தாத் தனத்தம் ...... தனதான
இடம்பார்த்  திடம்பார்த்  திதங்கேட்  டிரந்தேற் 
றிணங்காப்  பசிப்பொங்  ......  கனல்மூழ்கி 
இறுங்காற்  கிறுங்கார்க்  கிரும்பார்க்  குநெஞ்சார்க் 
கிரங்கார்க்  கியற்றண்  ......  டமிழ்நூலின் 
உடம்பாட்  டுடன்பாட்  டியம்பாத்  தயங்காத் 
துளங்காத்  திடப்புன்  ......  கவிபாடி 
ஒதுங்காப்  பொதுங்காப்  பதுங்காப்  புகன்றேத் 
துறும்பாற்  குணக்கன்  ......  புறலாமோ 
கடந்தோற்  கடந்தோற்  றறிந்தாட்  கருந்தாட் 
கணைந்தாட்  கணித்திண்  ......  புயமீவாய் 
கரும்போற்  கரும்போர்க்  குளங்காட்  டிகண்டேத் 
துசெங்கோட்  டில்நிற்குங்  ......  கதிர்வேலா 
அடைந்தோர்க்  குணந்தோர்க்  களிந்தோர்க்  கமைந்தோர்க் 
கவிழ்ந்தோர்க்  குணற்கொன்  ......  றிலதாகி 
அலைந்தோர்க்  குலைந்தோர்க்  கினைந்தோர்க்  கலந்தோர்க் 
கறிந்தோர்க்  களிக்கும்  ......  பெருமாளே. 
  • இடம் பார்த்து இடம் பார்த்து இதம் கேட்டு இரந்து ஏற்று
    எவரிடம் போனால் பணம் கிடைக்கும் என்று தக்க இடம் பார்த்து, இடம் பார்த்து, இதமான மொழிகளை அவர்கள் கேட்கும்படிச் சொல்லி, இரத்தல் தொழிலை மேற்கொண்டு,
  • இணங்காப் பசிப் பொங்கி அனல் மூழ்கி
    அத்தொழிலில் இணங்கி (மனம் பொருந்தி), பசியாகிய பொங்கி எழுகின்ற நெருப்பில் மூழ்கி,
  • இறும் காற்கு இறுங்கார்க்கு இரும்பு ஆர்க்கு நெஞ்சார்க்கு இரங்கார்க்கு
    அழிந்து போகும் காலத்தில் கூட உள்ளம் நல்ல நிலை பெறாதவரிடம், இரும்பு போன்ற கடின மனத்தவரிடம், இரக்கம் இல்லாதவரிடம்,
  • இயல் தண் தமிழ் நூலின் உடம் பாட்டுடன் பாட்டு இயம்பா
    தகுதி பெற்றுள்ள குளிர்ந்த தமிழ் நூல்களில் ஒருமைப்பட்ட மனத்துடன் பாட்டுக்களை அமைத்து,
  • தயங்காத் துளங்காத் திடப் புன் கவி பாடி
    வாட்டமுற்று மனம் கலங்கி, ஆனாலும் திடத்துடன் புனையப்பட்ட புன்மையான பாடல்களைப் பாடி,
  • ஒதுங்காப் பொதுங்காப் பதுங்காப் புகன்று ஏத்து உறும் பால் குணக்கு அன்புறலாமோ
    அச்சமுற்று ஒதுங்கி, மனம் வருந்தி, பதுங்கியும் போய் தான் பாடிய பாடல்களைச் சொல்லிப் புகழும் இயல்பினைக் கொண்ட குணத்துக்கு நான் ஆசை வைக்கலாமோ?
  • கடம் தோல் கடம் தோற்ற அறிந்தாட்கு அரும் தாட்கள் அணைந்தாட்கு அணித் திண் புயம் ஈவாய்
    மத யானை காட்டில் எதிர்ப்பட ஆபத்தை உணர்ந்து கொண்டவளாய் உன்னுடைய மேன்மை பொருந்திய திருவடிகளை அணைந்த வள்ளிக்கு அழகிய வலிமையான திருப்புயங்களைத் தந்தவனே,
  • கரும்போர்க்கு அரும்போரக் குளம் காட்டி கண்டு ஏத்து செங்கோட்டில் நிற்கும் கதிர் வேலா
    கரும்பு வில்லை உடைய மன்மதனுக்கு அரிய போராக நெற்றிக் கண்ணைக் காட்டிய சிவபெருமான் கண்டு போற்றும் திருச்செங்கோட்டில்* விளங்கி நிற்கும் ஒளி வீசும் வேலனே,
  • அடைந்தோர்க்கு உணந்தோர்க்கு அளிந்தோர்க்கு அமைந்தோர்க்கு அவிழ்ந்தோர்க்கு
    உன்னை அடைக்கலமாக அடைந்தவர்க்கும், உனக்காக உருகி மெலிந்தவர்களுக்கும், உன்னிடம் கருணை உள்ளம் கொண்டவர்களுக்கும், மன அமைதி கொண்டவர்களுக்கும், பக்தியால் உள்ளம் நெகிழ்ந்தவர்களுக்கும்,
  • உணற்கு ஒன்று இலதாகி அலைந்தோர்க்கு குலைந்தோர்க்கு இனைந்தோர்க்கு அலந்தோர்க்கு
    உண்பதற்கு ஒன்றும் இல்லாதவராகி அலைகின்றவர்களுக்கும், நிலை குலைந்து நிற்பவர்களுக்கும், கவலை உற்று வருந்துபவர்களுக்கும், துன்பம் உற்றவர்களுக்கும்,
  • அறிந்தோர்க்கு அளிக்கும் பெருமாளே.
    ஞானிகளுக்கும் திருவருள் பாலிக்கும் பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com