தனாதன தனாதன தனாதன தனாதன
தனாதன தனாதனத் ...... தனதான
நிராமய புராதன பராபர வராம்ருத
நிராகுல சிராதிகப் ...... ப்ரபையாகி
நிராசசி வராஜத வராஜர்கள் பராவிய
நிராயுத புராரியச் ...... சுதன்வேதா
சுராலய தராதல சராசர பிராணிகள்
சொரூபமி வராதியைக் ...... குறியாமே
துரால்புகழ் பராதின கராவுள பராமுக
துரோகரை தராசையுற் ...... றடைவேனோ
இராகவ இராமன்முன் இராவண இராவண
இராவண இராஜனுட் ...... குடன்மாய்வென்
றிராகன்ம லராணிஜ புராணர்கு மராகலை
யிராஜசொ லவாரணர்க் ...... கிளையோனே
விராகவ சுராதிப பொராதுத விராதடு
விராயண பராயணச் ...... செருவூரா
விராவிய குராவகில் பராரைமு திராவளர்
விராலிம லைராஜதப் ...... பெருமாளே.
- நிராமய புராதன
நோய் இல்லாததும், பழமையானதும், - பராபர
எல்லாவற்றிற்கும் மேலானதும், - வராம்ருத
வரத்தைத் தருவதும், அழிவற்றதும், - நிராகுல
கவலை அற்றதும், - சிராதிகப் ப்ரபையாகி
முதன்மையான பேரொளியாக விளங்கி, - நிராச
ஆசையற்றதும், - சிவராஜ தவராஜர்கள் பராவிய
சிவத்தில் மகிழும் தவசிரேஷ்டர்கள் புகழ்வதுமாகி, - நிராயுத புர அரி
ஆயுதமே இல்லாமல் (புன்னகையால்) திரிபுரத்தை எரித்த சிவன், - அச்சுதன்வேதா
திருமால், பிரமன், - சுராலய தராதல
தேவலோகம், மண்ணுலகம், - சர அசர பிராணிகள்
இயங்கியும் நிலைத்தும் இருக்கும் உயிர்கள், - சொரூபமிவர்
இந்த எல்லா உருவங்களிலும் கலந்த - ஆதியைக் குறியாமே
முழு முதற் பொருளாகிய முருகனைக் குறித்து தியானிக்காமல், - துரால்புகழ்
பயனற்ற புகழைக் கொண்ட - பர ஆதின
மற்றவருக்கு அடிமைப்பட்டு, - கராவுள
முதலை போன்ற உள்ளத்தை உடையவரும் - பராமுக துரோகரை
அலட்சிய சுபாவம் கொண்டவருமான பாவிகளை - தராசையுற்று அடைவேனோ
மண்ணாசை கொண்டு நான் சேரலாமோ? - இராகவ இராமன் முன்
ரகுவின் மரபிலே வந்த இராம பிரான் முன்னொருநாளில் - இராவண இராவண இராவண இராஜன்
அழுகுரலுற்றவனும், இரவின் வண்ணமாகிய கரிய நிறம் படைத்தவனும் ஆகிய இராவணன் என்ற அரசன் - உட்குடன்மாய் வென்ற
அச்சப்பட்டு மாயும்படியாக வெற்றி கொண்ட - இராகன்மலர் ஆள்
அன்பு நிறைந்தவனாகிய திருமாலின் கண்ணையே மலராகக் கொண்டருளிய - நிஜ புராணர் குமரா
உண்மை வரலாற்றை* உடைய சிவபெருமானின் திருக்குமரா, - கலை இராஜ
கலைகளுக்கு எல்லாம் தலைவனே, - சொலவாரணர்க்கு இளையோனே
புகழப்படும் அந்த யானைமுகத்தோனுக்குத் தம்பியே, - விராகவ சுராதிப
ஆசையே இல்லாதவனே, தேவர்களுக்கு அதிபதியே, - பொராது தவிராது அடு
போர் செய்யாமலேயே, தவறாமல், வெல்லவல்ல - விராயண பராயண
வீர வழியிலே மிக விருப்பம் உடையவனே, - செருவூரா
திருப்போரூரில் உறைபவனே, - விராவிய குராவகில்
கலந்து விளங்கும் குராமரமும், அகில் மரமும் - பராரை முதிராவளர்
பருத்த அடிமரத்துடன் நன்கு முதிர்ந்து வளர்கின்ற - விராலிமலை ராஜதப் பெருமாளே.
விராலிமலையில்** வாழ்கின்ற, அரசகுணம் படைத்த பெருமாளே.



