தத்த தானா தனாதன தத்த தானா தனாதன
தத்த தானா தனாதன ...... தந்ததான
சத்தி பாணீ நமோநம முத்தி ஞானீ நமோநம
தத்வ வாதீ நமோநம ...... விந்துநாத
சத்து ரூபா நமோநம ரத்ந தீபா நமோநம
தற்ப்ர தாபா நமோநம ...... என்றுபாடும்
பத்தி பூணா மலேயுல கத்தின் மானார் சவாதகில்
பச்சை பாடீர பூஷித ...... கொங்கைமேல்வீழ்
பட்டி மாடான நானுனை விட்டிரா மேயு லோகித
பத்ம சீர்பாத நீயினி ...... வந்துதாராய்
அத்ர தேவா யுதாசுர ருக்ர சேனா பதீசுசி
யர்க்ய சோமாசி யாகுரு ...... சம்ப்ரதாயா
அர்ச்ச னாவாக னாவய லிக்குள் வாழ்நாய காபுய
அக்ஷ மாலா தராகுற ...... மங்கைகோவே
சித்ர கோலா கலாவிர லக்ஷ்மி சாதா ரதாபல
திக்கு பாலா சிவாகம ...... தந்த்ரபோதா
சிட்ட நாதா சிராமலை யப்பர் ஸ்வாமீ மகாவ்ருத
தெர்ப்பை யாசார வேதியர் ...... தம்பிரானே.
- சத்தி பாணீ நமோநம
ஞான சக்தி வேலைக் கரத்தில் ஏந்தியவனே, போற்றி போற்றி, - முத்தி ஞானீ நமோநம
முக்தியைத் தரவல்ல ஞான பண்டிதா, போற்றி போற்றி, - தத்வ ஆதீ நமோநம
தத்துவங்களுக்கு முதல்வனாய் நிற்பவனே, போற்றி போற்றி, - விந்துநாத சத்து ரூபா நமோநம
சிவதத்துவமாகிய விந்து, சக்தி தத்துவமாகிய நாதம் இரண்டிற்கும் சத்தான உண்மை உருவம் வாய்த்தவனே, போற்றி போற்றி, - ரத்ந தீபா நமோநம
மணிவிளக்கைப் போல் ஒளிர்பவனே, போற்றி போற்றி, - தற்ப்ரதாபா நமோநம
தனக்குத் தானே நிகரான கீர்த்தியை உடையவனே, போற்றி போற்றி, - என்றுபாடும் பத்தி பூணாமலே
என்று பாடித் துதிக்கும் பக்தியை மேற்கொள்ளாமல், - உலகத்தின் மானார்
இவ்வுலகிலே மான் போன்ற பெண்களது - சவாது அகில் பச்சை பாடீர பூஷித
ஜவ்வாது, அகிற்சாந்து, பச்சைக்கற்பூரம், சந்தனம் ஆகிய நறுமணக் கலவையைப் பூசிய - கொங்கைமேல்வீழ்
மார்பிலே வீழ்ந்து கிடக்கின்ற - பட்டி மாடான நான்
திருட்டு மாடாகிய நான் - உனை விட்டிராமே
உந்தனை விட்டுப் பிரியாமல் இருக்க, - உலோக இத பத்ம சீர்பாத
உலகிற்கெல்லாம் நலம்தரும் தாமரை போன்ற உன்சிறந்த பாதங்களை - நீயினி வந்துதாராய்
இனியாகிலும் நீ என்முன் எழுந்தருளி வந்து தந்தருள்வாயாக. - அத்ர தேவ ஆயுதா
அஸ்திர (ஆயுத) தேவதையாகிய வேலாயுதத்தை ஏந்தியவனே, - சுரர் உக்ர சேனாபதீ
தேவர்களுக்கு மிக உக்கிரமான சேனாதிபதியே, - சுசி அர்க்ய சோமாசியா
தூய்மையாக மந்திர நீரோடு சோமரசத்தைப் பிழிந்து செய்யப்படும் யாகத்தில் - குரு சம்ப்ரதாயா
குரு மூர்த்தியாக தொன்றுதொட்டு நின்று வருபவனே, - அர்ச்சன ஆவாகனா
அர்ச்சனைகளிலும், மந்திரத்தால் வரவழைக்கப்படுவதிலும் வந்தருள்வோனே, - வயலிக்குள் வாழ்நாயகா
வயலூரில் வாழ்கின்ற எங்கள் நாயகனே, - புய அக்ஷ மாலா தரா
திருப்புயங்களில் ருத்திராட்ச மாலைகளை அணிந்துள்ளவனே, - குற மங்கை கோவே
குறப் பெண் வள்ளியின் கணவனே, - சித்ர கோலாகலா
அழகும் ஆடம்பரமும் உடையவனே, - விர லக்ஷ்மி சாதா
வீர லக்ஷ்மியாகிய பார்வதிக்குப் பிறந்தவனே (ஜாதா), - ரதா
இனிமை வாய்ந்தவனே (ர ா), - பல திக்கு பாலா
திசைகள் பலவற்றையும் காப்பவனே, - சிவாகம தந்த்ரபோதா
சிவ தத்துவத்தை விளக்கும் ஆகம நூல்களை உபதேசிக்கும் குருவே, - சிட்ட நாதா
ஞானிகளுக்கெல்லாம் தலைவனே, - சிராமலை யப்பர் ஸ்வாமீ
திரிசிராமலையின் அப்பனாகிய தாயுமானவருக்கும் குரு ஸ்வாமியே, - மகாவ்ருத தெர்ப்பை யாசார வேதியர் தம்பிரானே.
சிறந்த விரதங்களோடும், தர்ப்பைப் புல்லுடனும், ஆசாரத்துடனும் உள்ள அந்தணர் அனைவருக்கும் தலைவனே.



