திருப்புகழ் 429 திருட்டு வாணிப (திருவருணை)

தனத்த தானன தத்தன தத்தன
தனத்த தானன தத்தன தத்தன
தனத்த தானன தத்தன தத்தன ...... தனதான
திருட்டு  வாணிப  விக்ரம  துட்டிகள் 
மதத்த  ரூபிகள்  துர்ச்சன  பொட்டிகள் 
செகத்து  நீலிகள்  கெட்டப  ரத்தைகள்  ......  மிகநாணார் 
சிலைக்கு  நேர்புரு  வப்பெரு  நெற்றிக 
ளெடுப்பு  மார்பிக  ளெச்சிலு  தட்டிகள் 
சிரித்து  மாநுடர்  சித்தமு  ருக்கிகள்  ......  விழியாலே 
வெருட்டி  மேல்விழு  பப்பர  மட்டைகள் 
மிகுத்த  பாவிகள்  வட்டமு  கத்தினை 
மினுக்கி  யோலைகள்  பித்தளை  யிற்பணி  ......  மிகநீறால் 
விளக்கி  யேகுழை  யிட்டபு  ரட்டிகள் 
தமக்கு  மால்கொடு  நிற்கும  ருட்டனை 
விடுத்து  நானொரு  மித்திரு  பொற்கழல்  ......  பணிவேனோ 
தரித்த  தோகண  தக்கண  செக்கண 
குகுக்கு  கூகுகு  குக்குகு  குக்குகு 
தகுத்த  தீதிகு  தக்குகு  திக்குகு  ......  எனதாளந் 
தடக்கை  தாளமு  மிட்டியல்  மத்தள 
மிடக்கை  தாளமு  மொக்கந  டித்தொளி 
தரித்த  கூளிகள்  தத்திமி  தித்தென  ......  கணபூதம் 
அருக்க  னாரொளி  யிற்ப்ரபை  யுற்றிடு 
மிரத்ந  மாமுடி  யைக்கொடு  கக்கழ 
லடக்கை  யாடிநி  ணத்தையெ  டுத்துண  ......  அறவேதான் 
அரக்கர்  சேனைகள்  பட்டுவி  ழச்செறி 
திருக்கை  வேல்தனை  விட்டரு  ளிப்பொரும் 
அருட்கு  காவரு  ணைப்பதி  யுற்றருள்  ......  பெருமாளே. 
  • திருட்டு வாணிப விக்ரம துட்டிகள் மதத்த ரூபிகள் துர்ச்சன பொட்டிகள் செகத்து நீலிகள் கெட்ட பரத்தைகள் மிக நாணார்
    வியாபாரம் செய்வதில் சாமர்த்தியம் கொண்ட துஷ்டைகள். ஆணவ சொரூபம் உடையவர்கள். தீய தன்மை கொண்ட பொது மகளிர். இவ்வுலகில் மிக்க தந்திரவாதிகள். கெட்டுப் போன வேசியர்கள். மிகவும் நாணம் அற்றவர்கள்.
  • சிலைக்கு நேர் புருவப் பெரு நெற்றிகள் எடுப்பு மார்பிகள் எச்சில் உதட்டிகள் சிரித்து மாநுடர் சித்தம் உருக்கிகள் விழியாலே வெருட்டி மேல் விழு பப்பர மட்டைகள்
    வில்லைப் போன்ற புருவத்தையும் சிறந்த நெற்றியையும் முன்னுக்கு விளங்கும் மார்பையும் உடையவர்கள். எச்சில் நிறைந்த உதட்டை உடையவர்கள். சிரிப்பினாலேயே மனிதர்களுடைய மனதை உருக்குபவர்கள். கண்களாலே விரட்டி, மேலே விழுகின்ற கூத்தாடும் பயனிலிகள்.
  • மிகுத்த பாவிகள் வட்ட முகத்தினை மினுக்கி ஓலைகள் பித்தளையில் பணி மிக நீறால் விளக்கியே குழை இட்ட புரட்டிகள்
    மிக்க பாபம் செய்தவர்கள். வட்டமான முகத்தை மினுக்கி காதோலைகளாயுள்ள பித்தளையில் செய்யப்பட்ட ஆபரணங்களை அதிகமான சாம்பலிட்டு விளக்கம் பெறச் செய்து குண்டலங்களை அணிந்தவர்கள். மாறுபட்ட பேச்சை உடையவர்கள்.
  • தமக்கு மால் கொடு நிற்கும் மருள் தனை விடுத்து தான் ஒருமித்து இரு பொன் கழல் பணிவேனோ
    இத்தகையோர்கள் மீது காதல் கொண்டு நிற்கும் மயக்கத்தை விட்டு, நான் மனம் ஒருமைப்பட்டு உனது அழகிய திருவடிகளைப் பணிவேனோ?
  • தரித்த தோகண தக்கண செக்கண குகுக்கு கூகுகு குக்குகு குக்குகு தகுத்த தீதிகு தக்குகு திக்குகு என தாளம் தடக் கை தாளமும் இட்டு இயல் மத்தளம் இடக்கை தாளமும் ஒக்க
    தரித்த தோகண தக்கண செக்கண குகுக்கு கூகுகு குக்குகு குக்குகு தகுத்த தீதிகு தக்குகு திக்குகு இந்த வகையான இசைத் தாளங்களில் பெரிய கைகளால் தாளமும் இட்டு, பொருந்திய மத்தளம், இடக்கை, தாளம் இவை எல்லாம் ஒருங்கே ஒலிக்க,
  • நடித்து ஒளி தரித்த கூளிகள் தத்திமி தித்தென கண பூதம் அருக்கனார் ஒளியில் ப்ரபை உற்றிடும் இரத்ந மா முடியைக் கொ(ண்)டு உகக் கழல் அடக் கையாடி நிணத்தை எடுத்து உ(ண்)ண
    அதற்குத் தகுந்தவாறு நடனம் செய்து ஒளி கொண்ட பேய்கள், தத்திமி தித்தெனக் கூட்டமான பூதங்கள் சூரியனுடைய ஒளி போல பிரகாசிக்கும் ரத்தினத்தால் ஆன கிரீடங்களைக் கொண்டு (அவை சிந்தும்படியாக) கழற்சிக் காய்களாகக் கொண்டு விளையாடி மாமிசங்களை எடுத்து உண்ணும்படி,
  • அறவே தான் அரக்கர் சேனைகள் பட்டு விழச் செறி திருக்கை வேல் தனை விட்டு அருளிப் பொரும் அருள் குகா அருணைப் பதி உற்று அருள் பெருமாளே.
    அடியோடு அற்றுப் போய் அரக்கருடைய சேனைகள் அழிந்து விழ திருக்கையில் கொண்டுள்ள வோலாயுதத்தைச் செலுத்தி அருளி, சண்டை செய்தருளிய குகனே, திருவண்ணாமலை நகரில் வீற்றிருக்கும் பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com