தனதனன தனந்த தானன ...... தந்ததான
தனதனன தனந்த தானன ...... தந்ததான
கடல்பரவு தரங்க மீதெழு ...... திங்களாலே
கருதிமிக மடந்தை மார்சொல்வ ...... தந்தியாலே
வடவனலை முனிந்து வீசிய ...... தென்றலாலே
வயலருணையில் வஞ்சி போதந ...... லங்கலாமோ
இடமுமையை மணந்த நாதரி ...... றைஞ்சும்வீரா
எழுகிரிகள் பிளந்து வீழஎ ...... றிந்தவேலா
அடலசுரர் கலங்கி யோடமு ...... னிந்தகோவே
அரிபிரம புரந்த ராதியர் ...... தம்பிரானே.
- கடல்பரவு தரங்க மீதெழு திங்களாலே
கடலில் பரவிவரும் அலைகளின் மீது தோன்றி எழும் நிலாவாலும், - கருதிமிக மடந்தை மார்சொல் வதந்தியாலே
நினைத்து நினைத்துப் பெண்கள் தமக்குள் பேசும் வதந்தியாலும், - வடவனலை முனிந்து வீசிய தென்றலாலே
வடவாக்கினியைக் கோபித்து சூடாக வீசும் தென்றல் காற்றாலும், - வயலருணையில் வஞ்சி
வயல் சூழ்ந்த இந்தத் திருவண்ணாமலையில் உள்ள வஞ்சிக் கொடி போன்ற பெண் - போதநலங்கலாமோ
(உன்னைப் பிரிந்ததால்) அறிவு மயங்கி, கலங்கி வருந்தலாமோ? - இடமுமையை மணந்த நாதர் இறைஞ்சும்வீரா
இடது பாகத்தில் உமாதேவியைச் சேர்த்துள்ள சிவபிரான் வணங்கும் வீரனே, - எழுகிரிகள் பிளந்து வீழ எறிந்தவேலா
ஏழு மலைகளும் பிளந்து விழும்படியாக செலுத்திய வேலாயுதனே, - அடலசுரர் கலங்கி யோடமுனிந்தகோவே
வலிமை வாய்ந்த அசுரர்கள் கலங்கி ஓடக் கோபித்த தலைவனே, - அரிபிரம புரந்த ராதியர் தம்பிரானே.
திருமால், பிரம்மா, இந்திராதி தேவர்கள் தம்பிரானே.



