திருப்புகழ் 405 உலையிலனல் (திருவருணை)

தனதனன தத்த தனதனன தத்த
தனதனன தத்த ...... தனதான
உலையிலன  லொத்த  வுடலினனல்  பற்றி 
யுடுபதியை  முட்டி  ......  யமுதூற 
லுருகிவர  விட்ட  பரமசுக  முற்று 
வுனதடியை  நத்தி  ......  நினையாமற் 
சிலைநுதலி  லிட்ட  திலதமவிர்  பொட்டு 
திகழ்முகவர்  முத்து  ......  நகையாலே 
சிலுகுவலை  யிட்ட  மயல்கவலை  பட்டுத் 
திருடனென  வெட்கி  ......  யலைவேனோ 
கலைகனக  வட்ட  திமிலைபறை  கொட்ட 
கனகமயில்  விட்ட  ......  கதிர்வேலா 
கருதலரின்  முட்டிக்  கருகிவரு  துட்ட 
கதவமண  ருற்ற  ......  குலகாலா 
அலைகடலு  டுத்த  தலமதனில்  வெற்றி 
அருணைவளர்  வெற்பி  ......  லுறைவோனே 
அசுரர்களை  வெட்டி  யமரர்சிறை  விட்டு 
அரசுநிலை  யிட்ட  ......  பெருமாளே. 
  • உலையில் அனல் ஒத்த உடலின் அனல் பற்றி
    கொல்லனது உலைக்களத்தில் உள்ள நெருப்புப் போல் உடலில் சிவாக்கினி பற்றி மேல் எழுந்து,
  • உடு பதியை முட்டி அமுது ஊறல் உருகி வர விட்ட பரம சுகம் உற்று
    சந்திர மண்டலத்தை முட்டி அங்கு அமுத ஊறல் ஊறி உருகி வர விடுகின்ற பரம சுகத்தை அடைந்து,
  • உனது அடியை நத்தி நினையாமல்
    உனது திருவடியை விரும்பி நினைக்காமல்,
  • சிலை நுதலில் இட்ட திலதம் அவிர் பொட்டு திகழ்
    வில்லைப் போன்ற நெற்றியில் இட்ட சிறந்த பொட்டு விளங்கும் முகத்தை உடைய மாதர்களின் முத்துப் போன்ற பல் அழகாலே
  • சிலுகு வலை இட்ட மயல் கவலை பட்டுத் திருடன் என வெட்கி அலைவேனோ
    துன்ப வலையில் அகப்பட்டு காமப் பித்தால் கவலை அடைந்து, திருடனைப் போல் வெட்கப்பட்டு அலைவேனோ?
  • கலை கனக வட்ட திமிலை பறை கொட்ட கனக மயில் விட்ட கதிர் வேலா
    முறைப்படி வாசிக்கப்படுவதும், பொன் போல விளங்குவதும் ஆகிய திமிலை என்ற ஒருவகைத் தோல் கருவி பறை போல முழங்க, பொன்மயிலைச் செலுத்திய, ஒளி வீசும் வேலனே,
  • கருதலரின் முட்டிக் கருகி வரு துட்ட கத(ம்) அமணர் உற்ற குலகாலா
    பகைவர்கள் போல எதிர்த்துத் தாக்கி, நிறம் கறுத்து வந்த, கோபம் மிக்க சமணருடைய குலத்தை (திருஞானசம்பந்தராக வந்து) அழித்தவனே,
  • அலை கடல் உடுத்த தலம் அதனில் வெற்றி அருணை வளர் வெற்பில் உறைவோனே
    அலை வீசும் கடலை ஆடையாகத் தரித்த பூமியில், (அரி, அயன் இருவருக்கும் அரியவராய் ஒளிப் பிழம்பாக சிவபெருமான் நின்று) வெற்றி கண்ட தலமாகிய திருவண்ணாமலையில் வீற்றிருப்பவனே,
  • அசுரர்களை வெட்டி அமரர் சிறை விட்டு அரசு நிலை இட்ட பெருமாளே.
    அசுரர்களை வெட்டி அழித்து தேவர்களைச் சிறையினின்று விடுவித்து, பொன்னுலக ஆட்சியை நிலை பெறச் செய்த பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com