தானா தந்தத் தானா தந்தத்
தானா தந்தத் ...... தனதானா
ஓரா தொன்றைப் பாரா தந்தத்
தோடே வந்திட் ...... டுயிர்சோர
ஊடா நன்றற் றார்போல் நின்றெட்
டாமால் தந்திட் ...... டுழல்மாதர்
கூரா வன்பிற் சோரா நின்றக்
கோயா நின்றுட் ...... குலையாதே
கோடார் செம்பொற் றோளா நின்சொற்
கோடா தென்கைக் ...... கருள்தாராய்
தோரா வென்றிப் போரா மன்றற்
றோளா குன்றைத் ...... தொளையாடீ
சூதா யெண்டிக் கேயா வஞ்சச்
சூர்மா அஞ்சப் ...... பொரும்வேலா
சீரார் கொன்றைத் தார்மார் பொன்றச்
சேவே றெந்தைக் ...... கினியோனே
தேனே யன்பர்க் கேயா மின்சொற்
சேயே செந்திற் ...... பெருமாளே.
- ஓராது ஒன்றை
உண்மை என்ற ஒன்றை ஆராய்ந்து அறியாமலும், - பாராது
அந்த உண்மையைப் பார்க்காமலும், - அந்தத்தோடே வந்திட்டு
அலங்காரம் செய்துகொண்டு வந்து, - உயிர்சோர ஊடா
ஆண்களின் உயிர் சோர்ந்து போகும்படி ஊடல் செய்து, - நன்றற் றார்போல் நின்று
தங்களுக்கு நல்லது ஏதும் இல்லாதவர்கள் போல நின்று, - எட்டாமால் தந்திட்டு
அளவற்ற காம மயக்கத்தைத் தந்து, - உழல்மாதர்
திரிகின்ற பெண்களின் - கூரா அன்பிற் சோரா நின்று
விருப்பமற்ற வெளிவேஷ அன்பில் சோர்வடைந்து, - அக்கு ஓயா நின்று உட்குலையாதே
எலும்போடு கூடிய என் சரீரம் ஓய்ந்துபோய் உள்ளம் குலைந்து போகாதபடியாக, - கோடு ஆர் செம்பொற் றோளா
மலைபோன்ற செவ்விய அழகிய தோளை உடையவனே, - நின்சொற் கோடாது
உனது திருப்புகழ் நேராக நின்று உதவும் - என்கைக்கு அருள்தாராய்
என்று உலகத்தார் கூறும்வண்ணம் திருவருள் தந்தருள்க. - தோரா வென்றிப் போரா
தோல்வியே தெரியாத வெற்றிப் போர் வீரா, - மன்றற் றோளா
மணம் வீசும் (மாலைகள் அணிந்த) தோளை உடையவனே, - குன்றைத் தொளையாடீ
கிரெளஞ்ச மலையைத் தொளைத்தவனே, - சூதாய் எண் திக்கு ஏயா
சூழ்ச்சி செய்து எட்டுத் திக்கும் பொருந்தி நின்ற - வஞ்சச் சூர்மா அஞ்சப் பொரும்வேலா
வஞ்சகச் சூரனாம் மாமரம் அஞ்சப் போரிட்ட வேலனே, - சீரார் கொன்றைத்தார் மார்பொன்ற
சிறப்பு மிகுந்த கொன்றைமாலை மார்பில் திகழ - சேவேறு எந்தைக்கு இனியோனே
ரிஷபத்தில் ஏறும் எம் தந்தை சிவனாருக்கு இனியவனே, - தேனே
தேன் போல் இனிப்பவனே, - அன்பர்க்கேயாம் இன்சொற் சேயே
அன்பர்க்கென்றே இனிய சொற்கள் கொண்ட சேயே, - செந்தில் பெருமாளே.
திருச்செந்தூரில் மேவிய பெருமாளே.