திருப்புகழ் · 362குருதி புலால் என்பு (திருவானைக்கா)

kurudhipulAlenbu

தனதன தானந்த தான தந்தன
தனதன தானந்த தான தந்தன
தனதன தானந்த தான தந்தன ...... தனதான
குருதிபு லாலென்பு தோன ரம்புகள்
கிருமிகள் மாலம்பி சீத மண்டிய
குடர்நிணம் ரோமங்கள் மூளை யென்பன ...... பொதிகாயக்
குடிலிடை யோரைந்து வேட ரைம்புல
அடவியி லோடுந்து ராசை வஞ்சகர்
கொடியவர் மாபஞ்ச பாத கஞ்செய ...... அதனாலே
சுருதிபு ராணங்க ளாக மம்பகர்
சரியைக்ரி யாவண்டர் பூசை வந்தனை
துதியொடு நாடுந்தி யான மொன்றையு ...... முயலாதே
சுமடம தாய்வம்பு மால்கொ ளுந்திய
திமிரரொ டேபந்த மாய்வ ருந்திய
துரிசற ஆநந்த வீடு கண்டிட ...... அருள்வாயே
ஒருதனி வேல்கொண்டு நீள்க்ர வுஞ்சமும்
நிருதரு மாவுங்க லோல சிந்துவும்
உடைபட மோதுங்கு மார பங்கய ...... கரவீரா
உயர்தவர் மாவும்ப ரான அண்டர்கள்
அடிதொழு தேமன்ப ராவு தொண்டர்கள்
உளமதில் நாளுங்க லாவி யின்புற ...... வுறைவோனே
கருதிய ஆறங்க வேள்வி யந்தணர்
அரிகரி கோவிந்த கேச வென்றிரு
கழல்தொழு சீரங்க ராச னண்புறு ...... மருகோனே
கமலனு மாகண்ட லாதி யண்டரு
மெமது பிரானென்று தாள்வ ணங்கிய
கரிவனம் வாழ்சம்பு நாதர் தந்தருள் ...... பெருமாளே.

பத உரை · word meanings

  • குருதி புலால் என்பு தோல் னரம்புகள்
    இரத்தம், ஊன், எலும்புகள், தோல், நரம்புகள்,
  • கிருமிகள் மால் அம் பிசீத மண்டிய குடர்
    கிருமிகள், காற்று, நீர், மாமிசம், நெருங்கிய குடல்கள்,
  • நிணம் ரோமங்கள் மூளை யென்பன பொதி
    கொழுப்பு, மயிர்கள், மூளை முதலியன நிறைந்த
  • காயக்குடிலிடை யோரைந்து வேடர்
    உடல் என்னும் குடிசையுள் மெய், வாய், கண், மூக்கு, செவி என்ற ஐம்பொறிகளாகிய வேடர்கள்,
  • ஐம்புல அடவியி லோடுந்துராசை வஞ்சகர்
    சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்ற ஐம்புலக் காட்டிலே ஓடுகின்ற, கெட்ட ஆசை கொண்ட வஞ்சகர்கள்,
  • கொடியவர் மாபஞ்ச பாதகஞ்செய
    மகா பொல்லாதவர்கள், பஞ்சமா* பாதகச் செயல்களை செய்ய,
  • அதனாலே சுருதி புராணங்கள் ஆகமம் பகர்
    அதன் காரணமாக, வேதங்கள், புராணங்கள், ஆகம நூல்களில் சொல்லப்படுகின்ற
  • சரியைக்ரியா அண்டர் பூசை வந்தனை
    சரியை, கிரியை, தேவ பூஜை, வழிபாடு
  • துதியொடு நாடுந்தி யான மொன்றையு முயலாதே
    தோத்திரம், நாடிச் செய்யும் தியானம் முதலியவற்றில்** ஒன்றையேனும் முயற்சித்து அநுஷ்டிக்காமல்
  • சுமடமதாய் வம்பு மால்கொளுந்திய
    அறிவிலியாய், பயனில்லாது, ஆசைகளை எழுப்புவதுமாய் உள்ள
  • திமிரரொடே பந்தமாய்வருந்திய
    ஆணவக்காரர்களுடன் கூட்டுறவில் ஆழ்ந்து வருந்திய
  • துரிசற ஆநந்த வீடு கண்டிட அருள்வாயே
    குற்றம் அற்றுப் போவதற்கும், ஆனந்தமான பேரின்ப வீட்டை யான் கண்டுகொள்வதற்கும் நீ அருள்வாயாக.
  • ஒருதனி வேல்கொண்டு நீள்க்ர வுஞ்சமும்
    ஓர் ஒப்பற்ற வேலைக் கொண்டு, நெடிய கிரெளஞ்சமலையையும்,
  • நிருதரு மாவுங்க லோல சிந்துவும்
    அசுரர்களையும், மாமரமாய் நின்ற சூரனையும், ஆரவாரிக்கும் கடலையும்
  • உடைபட மோதுங்கு மார பங்கய கரவீரா
    உடைபட்டுப் போகுமாறு போர் புரிந்த குமாரனே, தாமரையொத்த கரங்களை உடைய வீரனே,
  • உயர்தவர் மா உம்ப ரான அண்டர்கள்
    சிறந்த தவ முநிவர்கள், மேலுலகவாசிகளான தேவர்கள்,
  • அடிதொழுதே மன்பராவு தொண்டர்கள்
    உனது திருவடிகளைத் தொழுது நன்கு துதிக்கும் அடியார்கள்,
  • உளமதில் நாளுங்குலாவி யின்புற வுறைவோனே
    இவர்களது உள்ளத்தில் தினமும் விளையாடி இன்பமுற வீற்றிருப்போனே,
  • கருதிய ஆறங்க வேள்வி யந்தணர்
    ஆய்ந்து அறிந்த வேதத்தின் ஆறு அங்கங்களிலும்*** வல்ல, வேள்வி செய்யும் வேதியர்கள்
  • அரிகரி கோவிந்த கேச வென்று
    ஹரி ஹரி, கோவிந்தா, கேசவா என்று துதிசெய்து,
  • இருகழல்தொழு சீரங்க ராசன் நண்புறு மருகோனே
    இரு திருவடிகளையும் வணங்கப்பெற்ற ஸ்ரீரங்கநாதரின் அன்புமிக்க மருமகனே,
  • கமலனும் ஆகண்டல ஆதி யண்டரும்
    பிரம தேவனும், இந்திரன் முதலான மற்ற தேவர்களும்
  • எமது பிரானென்று தாள்வணங்கிய
    எங்கள் தலைவன் எனக் கூறி அடிபணிந்திடப் பெற்ற
  • கரிவனம் வாழ்சம்பு நாதர் தந்தருள் பெருமாளே.
    திருவானைக்காவில் வாழ்கின்ற ஜம்புநாதர் தந்தருளிய பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

credits