திருப்புகழ் 335 பொக்குப்பை (காஞ்சீபுரம்)

தத்தத்தத் தத்தத் தத்தத்தத் தத்தத்
தத்தத்தத் தத்தத் ...... தனதான
பொக்குப்பைக்  கத்தத்  தொக்குப்பைக்  குத்துப் 
பொய்த்தெத்துத்  தத்துக்  ......  குடில்பேணிப் 
பொச்சைப்பிச்  சற்பக்  கொச்சைச்சொற்  கற்றுப் 
பொற்சித்ரக்  கச்சுக்  ......  கிரியார்தோய் 
துக்கத்துக்  கத்திற்  சிக்குப்பட்  டிட்டுத் 
துக்கித்துக்  கெய்த்துச்  ......  சுழலாதே 
சுத்தச்சித்  தத்துப்  பத்திப்பத்  தர்க்கொத் 
துச்சற்றர்ச்  சிக்கப்  ......  பெறுவேனோ 
திக்குத்திக்  கற்றுப்  பைத்தத்தத்  திக்குச் 
செற்பத்ரக்  கொக்கைப்  ......  பொரும்வேலா 
செப்பச்சொர்க்  கத்துச்  செப்பொற்றத்  தைக்குச் 
செச்சைக்கொத்  தொப்பித்  ......  தணிவோனே 
கக்கக்கைத்  தக்கக்  கக்கட்கக்  கக்கிக் 
கட்கத்தத்  தர்க்குப்  ......  பெரியோனே 
கற்றைப்பொற்  றெத்தப்  பெற்றப்பொற்  சிற்பக் 
கச்சிக்குட்  சொக்கப்  ......  பெருமாளே. 
  • பொக்குப்பைக் கத்தத் தொக்குப்பை
    குற்றங்கள் நிறைந்த பை, மலம் மிகுந்த பை,
  • குத்துப் பொய்த்து எத்துத் தத்துக் குடில்பேணி
    சுடுசொல், பொய், வஞ்சகம், ஆபத்து இவைகள் எல்லாம் கலந்த குடிசையான இந்த உடலை விரும்பி,
  • பொச்சைப் பிச்சு அற்பக் கொச்சைச்சொற் கற்று
    குற்றமானதும், பைத்தியம் கொண்டதும், அற்பமானதும், இழிவானதுமான சொற்களைக் கற்று,
  • பொற்சித்ரக் கச்சுக் கிரியார்தோய்
    அழகிய விசித்திரமான கச்சணிந்த பெருமார்புப் பெண்டிரைச் சேர்வதால் வரும்
  • துக்கத் துக்கத்திற் சிக்குப்பட்டிட்டு
    கொடிய துக்கத்தில் மாட்டிக்கொண்டு
  • துக்கித்துக் கெய்த்துச் சுழலாதே
    வேதனையுற்று, இளைத்து, மனம் சுழன்று சஞ்சலப்படாமல்,
  • சுத்தச் சித்தத்துப் பத்திப் பத்தர்க்கு ஒத்து
    பரிசுத்த மனதுடன் பக்தி பூண்ட பக்தர்களுக்கு இணையாக
  • சற்று அர்ச்சிக்கப் பெறுவேனோ
    சிறிதளவேனும் உன்னைப் பூஜிக்கும் பாக்கியத்தைப் பெறுவேனோ?
  • திக்குத் திக்கற்றுப் பைத் தத்து அத்திக்குச்செல்
    எந்தத் திக்கிலும் உதவியின்றி, தனிப்பட்டு, கடைசியில் பச்சைநிற அலைகள் மோதும் கடலுக்குள்ளே போய்ச் சேர்ந்து,
  • பத்ரக் கொக்கைப் பொரும்வேலா
    இலைகளோடு கூடிய மாமரமாக மாறிய சூரனுடன் போர் செய்த வேலனே,
  • செப்பச் சொர்க்கத்துச் செம்பொன் தத்தைக்கு
    செம்மையான விண்ணுலகில் உள்ள செம்பொன் போன்ற கிளியாகிய தேவயானையை
  • செச்சைக்கொத்து ஒப்பித்து அணிவோனே
    வெட்சி மலர்க் கொத்தால் அலங்கரித்து மாலை சூட்டுபவனே,
  • கக்கு அக்கைத் தக்க அக்கக்கட்கு அக்கு அக்கி
    (பிரமன் முதலியோர் சரீரத்தினின்றும்) சுழன்ற எலும்பை தகுந்தபடி தமது அங்கங்களுக்கு ஆபரணமாக ஆக்கி, அக்கினியை
  • கண் கத்த அத்தர்க்குப் பெரியோனே
    கண்ணிலே வைத்த தலைவர் சிவபிரானுக்கு குருவான பெரியவனே,
  • கற்றைப்பொற் றெத்தப் பெற்ற
    திரளான துதிப்பாடல்களால் ஏத்தப்பெற்ற,
  • பொற் சிற்பக் கச்சிக்குள்
    அழகிய சிற்ப வேலைப்பாடுகள் அமைந்த கச்சியாகிய காஞ்சீபுரத்தில்
  • சொக்கப்பெருமாளே.
    வீற்றிருக்கும் அழகிய பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com