தனதனந் தத்தத் தத்தன தத்தம்
தனதனந் தத்தத் தத்தன தத்தம்
தனதனந் தத்தத் தத்தன தத்தம் ...... தனதான
செறிதரும் செப்பத் துற்பல வெற்பும்
பிறிதுமங் கத்தைக் குற்றவி ருப்புஞ்
சிகரிதுண் டிக்கக் கற்றத னிச்செஞ் ...... சுடர்வேலும்
திரள்புயங் கொத்துப் பட்டவ னைத்துந்
தெளியநெஞ் சத்துப் புற்றும யக்கம்
திகழ்ப்ரபஞ் சத்தைப் புற்புத மொக்கும் ...... படிநாடும்
அறிவறிந் தத்தற் கற்றது செப்புங்
கடவுளன் பத்தர்க் கச்சம றுத்தன்
பருள்பவன் பொற்புக் கச்சியுள் நிற்கும் ...... பெருமானென்
றவிழுமன் புற்றுக் கற்றும னத்தின்
செயலொழிந் தெட்டப் பட்டத னைச்சென்
றடைதரும் பக்வத் தைத்தமி யெற்கென் ...... றருள்வாயே
குறியவன் செப்பப் பட்டஎ வர்க்கும்
பெரியவன் கற்பிக் கப்படு சுக்ரன்
குலைகுலைந் துட்கக் சத்யமி ழற்றுஞ் ...... சிறுபாலன்
குதலையின் சொற்குத் தர்க்கமு ரைக்குங்
கனகனங் கத்திற் குத்திநி ணச்செங்
குடர்பிடுங் கித்திக் குற்றமு கச்சிங் ...... கமுராரி
பொறிவிடுந் துத்திக் கட்செவி யிற்கண்
துயில்கொளுஞ் சக்ரக் கைக்கிரி சுத்தம்
புயலெனும் பொற்புப் பெற்றநி றத்தன் ...... ஜகதாதை
புனிதசங் கத்துக் கைத்தல நிர்த்தன்
பழையசந் தத்தைப் பெற்றம டப்பெண்
புகலுகொண் டற்குச் சித்திய ளிக்கும் ...... பெருமாளே.
- செறிதரும் செப்பத்து உற்பல வெற்பும்
நெருக்கமாக வளர்கிற செம்மையான செங்கழுநீர்மலர் (தினமும் மலரும் சுனையுடன்) இருக்கும் திருத்தணிகை மலையும், - பிறிதும் அங்கு அத்தைக்கு உற்ற இருப்பும்
மற்றும் அத்தணிகை மலைக்குச் சமமான மற்றத் தலங்களும், - சிகரிதுண்டிக்கக் கற்ற தனிச்செஞ் சுடர்வேலும்
கிரெளஞ்ச மலையைப் பிளக்கக் கற்றுக்கொண்ட ஒப்பற்ற செவ்வொளியுடன் கூடிய வேலும், - திரள்புயங் கொத்துப் பட்ட அனைத்தும்
திரண்ட பன்னிரு தோள்கள் கொத்தாக உள்ள எல்லாமும், - தெளியநெஞ்சத் துப்பு உற்று
தெளிவாக நெஞ்சத்திலே தரிசனம் செய்து அறிவு பெற்று, - மயக்கம் திகழ் ப்ரபஞ்சத்தைப் புற்புதம் ஒக்கும்படி நாடும்
அறிவறிந்து
மயக்கம் நிறைந்துள்ள இந்த உலகை நீர்க்குமிழிக்கு சமமானது என்று ஆராய்ந்து உணரும் அறிவை அடைந்து, - அத்தற் கற்றது செப்புங் கடவுளன்
சிவபிரானுக்கு பற்றற்ற பிரணவப் பொருளை உபதேசித்த கடவுள் நீ என்றும், - பத்தர்க்கு அச்சம் அறுத்தன்பருள்பவன்
அடியார்க்கு அச்சத்தை அகற்றி அன்பை அருள்பவன் நீ என்றும், - பொற்புக் கச்சியுள் நிற்கும் பெருமானென்று
அழகிய கச்சியில் (காஞ்சீபுரத்தில்) நின்றருளும் பெருமான் நீ என்றும், - அவிழும் அன்புற்றுக் கற்று
நெகிழ்ந்து உருகும் அன்பின் வசமாகி, திருவருள் நெறியைப் பயின்று, - மனத்தின் செயலொழிந்து
மனத்தின் செயலெல்லாம் நீங்கப் பெற்று, - எட்டப் பட்டதனைச்சென்று அடைதரும்
அந்த நிலையில் எட்டப் படுவதான பொருளைச் சென்று அடைகின்ற - பக்வத்தைத் தமியெற்கு என்றருள்வாயே
மனப் பக்குவத்தை அடியேனுக்கு என்றைக்குத் தந்தருள்வாயோ? - குறியவன் செப்பப் பட்டஎவர்க்கும் பெரியவன்
வாமன வடிவமாகிக் குறுகி, ஆனால் சொல்லப்படும் யாவரினும் பெரியவர் ஆனவரும், - கற்பிக்கப்படு சுக்ரன் குலைகுலைந்து உட்கக் சத்யமிழற்றுஞ்
சிறுபாலன்
கல்வி கற்றுக் கொடுக்கவந்த சுக்கிராச்சாரியார் உள்ளம் நடுநடுங்கி அஞ்சும்படி, உண்மையையே உரைத்த சிறு குழந்தை பிரகலாதனின் - குதலையின் சொற்குத் தர்க்கமு ரைக்குங்
மழலைச் சொல்லிற்கு எதிர்வாதம் பேசிய - கனகன் அங்கத்தில் குத்தி
ஹிரண்யனுடைய உடலைக் குத்தி, - நிணச்செங் குடர் பிடுங்கி
மாமிசம் நிறைந்த சிவந்த குடலைப் பிடுங்கி, - திக்குற்ற முகச்சிங்க முராரி
எட்டுத் திசைகளிலும் பிடறி மயிர் பறக்கும் சிங்க முகத்தை உடைய நரசிம்மரும், முரன் என்ற அரக்கனைக் கொன்ற முராரியும், - பொறிவிடுந் துத்திக் கட்செவி யிற்கண்
ஒளிவீசும் படப் பொறிகளை உடைய பாம்பு ஆதிசேஷன் மீது - துயில்கொளுஞ் சக்ரக் கைக்கிரி
துயில்பவரும், சக்ராயுதத்தைக் கையிலே தாங்கும் மலை போன்றவரும், - சுத்தம் புயலெனும் பொற்புப் பெற்றநி றத்தன்
தூய மேகம் போன்ற அழகிய நிறத்தை உடையவரும், - ஜகதாதை
உலகுக்கெல்லாம் தந்தையும், - புனிதசங்கத்துக் கைத்தல நிர்த்தன்
பாஞ்ச ஜன்யம் என்ற பரிசுத்தமான சங்கைக் கரத்திலே கொண்டவரும், (காளிங்கன் என்ற பாம்பின் தலையில்) நடனமாடியவரும், - பழையசந்தத்தைப் பெற்றமடப்பெண்
பழமையான (மோகினி) வடிவத்தைப் பெற்று இளம்பெண்ணாக வந்தவரும், - புகலுகொண் டற்குச் சித்தியளிக்கும் பெருமாளே.
புகழப் பெறும் நீல மேகம் போன்ற நிறத்தினருமாகிய திருமாலுக்கு வீடு பேற்றினைத்* தந்தருளிய பெருமாளே.



