திருப்புகழ் 309 அதி மதம் கக்க (காஞ்சீபுரம்)

தனதனந் தத்தத் தத்தன தத்தம்
தனதனந் தத்தத் தத்தன தத்தம்
தனதனந் தத்தத் தத்தன தத்தம் ...... தனதான
அதிமதங்  கக்கப்  பக்கமு  கக்குஞ் 
சரிதனந்  தைக்கச்  சிக்கென  நெக்கங் 
கணைதருஞ்  செச்சைப்  பொற்புய  னத்தன்  ......  குறவாணார் 
அடவியந்  தத்தைக்  கெய்த்துரு  கிச்சென் 
றடிபணிந்  திட்டப்  பட்டும  யற்கொண் 
டயர்பவன்  சத்திக்  கைத்தல  னித்தன்  ......  குமரேசன் 
துதிசெயும்  சுத்தப்  பத்தியர்  துக்கங் 
களைபவன்  பச்சைப்  பக்ஷிந  டத்துந் 
துணைவனென்  றர்ச்சித்  திச்சைத  ணித்துன்  ......  புகழ்பாடிச் 
சுருதியின்  கொத்துப்  பத்தியு  முற்றுந் 
துரியமுந்  தப்பித்  தத்வம  னைத்துந் 
தொலையுமந்  தத்துக்  கப்புற  நிற்கும்  ......  படிபாராய் 
கதிபொருந்  தக்கற்  பித்துந  டத்துங் 
கனல்தலம்  புக்குச்  சக்ரமெ  டுக்குங் 
கடவுளும்  பத்மத்  தச்சனு  முட்கும்  ......  படிமோதிக் 
கதிரவன்  பற்குற்  றிக்குயி  லைத்திண் 
சிறகரிந்  தெட்டுத்  திக்கர்வ  குக்குங் 
கடகமுந்  தட்டுப்  பட்டொழி  யக்கொன்  ......  றபிராமி 
பதிவ்ரதம்  பற்றப்  பெற்றம  கப்பெண் 
பரிவொழிந்  தக்கிக்  குட்படு  தக்கன் 
பரிபவம்  பட்டுக்  கெட்டொழி  யத்தன்  ......  செவிபோயப் 
பணவிபங்  கப்பட்  டப்படி  வெட்கும் 
படிமுனிந்  தற்றைக்  கொற்றம்வி  ளைக்கும் 
பரமர்வந்  திக்கக்  கச்சியில்  நிற்கும்  ......  பெருமாளே. 
  • அதி மதம் கக்கப் பக்கம் உகக் குஞ்சரி தனம் தைக்கச் சிக்கென நெக்கு அங்கு அணை தரும் செச்சைப் பொற்புயன் அத்தன்
    அதிகமான மகிழ்ச்சி வெளிப்பட, அன்புமீறிக் களி கூறும் தேவயானையின் மார்பகம் அழுத்தமாக நெஞ்சிற் பதிய, இறுகப் பிணைத்ததால் நெகிழ்ந்து உடனே அணைப்பில் கசங்கிய வெட்சி மாலை அணிந்த அழகிய திருத்தோள்களை உடையவனாகிய பெரியோன்,
  • குற வாணர் அடவி அம் தத்தைக்கு எய்த்து உருகிச் சென்று அடி பணிந்து இட்டப்பட்டு மயல் கொண்டு அயர்பவன்
    குறவர் வாழும் காட்டில் உள்ள அழகிய கிளி போன்ற வள்ளிக்கு இளைத்து, உருகிச் சென்று, அவளுடைய அடியை வணங்கி, ஆசை பூண்டு, மோகம் கொண்டு தளர்பவன்,
  • சத்திக் கைத்தலம் நித்தன் குமரேசன் துதி செயும் சுத்தப் பத்தியர் துக்கம் களைபவன்
    வேலாயுதத்தைத் திருக் கரத்தில் பூண்டவன், என்றும் உள்ளவன் ஆகிய குமரேசன், துதி செய்கின்ற பரிசுத்தமான பக்தி பூண்ட அன்பர்களுடைய துக்கத்தை நீக்குபவன்,
  • பச்சைப் பக்ஷி நடத்தும் துணைவன் என்று அர்ச்சித்து இச்சை தணித்து உன் புகழ்பாடி
    பச்சை நிறமான மயிலை வாகனமாகக் கொண்ட துணைவன் என்றெல்லாம் கூறி அர்ச்சித்து, என் ஆசையை நிறைவேற்றி, உன்னுடைய திருப்புகழைப் பாடி,
  • சுருதியின் கொத்துப் பத்தியும் முற்றும் துரியமும் தப்பித் தத்வம் அனைத்தும் தொலையும் அந்தத்துக்கு அப்புறம் நிற்கும் படி பாராய்
    வேதங்களின் கூட்ட வரிசையையும், பிற எல்லாவற்றையும், துரிய நிலையையும் (தன் மயமாய் நிற்கும் சுத்த உயர் நிலையையும்) கடந்து, தத்துவங்கள் யாவும் அழிந்து போகும் முடிவு நிலைக்கு அப்பாலே நிற்கும்படி கண்பார்த்து அருள்வாய்.
  • கதி பொருந்தக் கற்பித்து நடத்தும் கனல் தலம் புக்கு
    (வேள்வி இயற்ற வேண்டிய) நியதிக்குத் தக்க ஏற்பாடு செய்து (தக்ஷன்) வேள்வி நடத்திய அக்கினி குண்டங்கள் இருந்த யாக சாலையுள் நுழைந்து,
  • சக்ரம் எடுக்கும் கடவுளும் பத்ம தச்சனும் உட்கும் படி மோதிக் கதிரவன் பல் குற்றி
    சக்கரம் ஏந்தும் கடவுளாகிய திருமாலும், தாமரையில் வீற்றிருக்கும் படைத்தல் தொழில் புரியும் பிரமனும் அச்சம் உறும்படி தாக்கியும், சூரியனின் பற்களைக் குத்தியும்,
  • குயிலைத் திண் சிறகு அரிந்து எட்டுத் திக்கர் வகுக்கும் கடகமும் தட்டுப் பட்டு ஒழியக் கொன்ற
    இந்திரனாம் குயிலின் திண்ணிய சிறகை வெட்டியும், அஷ்ட திக்குப் பாலகர்களான இந்திரன், அக்கினி, யமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன் ஆகியோர் அணி வகுத்த சேனைகளும் நிலை குலைந்து அழிந்து போகும்படிக் கொன்றும்,
  • அபிராமி பதிவ்ரதம் பற்றப் பெற்ற மகப் பெண் பரிவு ஒழிந்து
    பேரழகியும், பதிவிரதத் தன்மையைக் கைப்பிடிக்கப் பெற்ற இன்பப் பெண்ணும், ஆகிய தாக்ஷாயணியின் (தன்னையும் தன் கணவன் சிவனையும் தக்ஷன் புறக்கணித்தான் என்னும்) வருத்தம் தீரவும்,
  • அக்கிக்கு உட்படு தக்கன் பரிபவம் பட்டுக் கெட்டு ஒழிய
    நெருப்பில் விழப் பெற்ற தக்ஷன் அவமானப்பட்டு கெட்டு ஒழியவும்,
  • தன் செ(வ்)வி போய் அப் பனவி பங்கப்பட்டு அப்படி வெட்கும்படி முனிந்து
    தனது அழகு போய் அந்தப் பார்ப்பனியாகிய சரஸ்வதி (மூக்கை இழந்து) பங்கம் அடைந்து வெட்கும்படியாகவும், கோபித்து
  • அற்றைக் கொற்றம் விளைக்கும் பரமர் வந்திக்கக் கச்சியில் நிற்கும் பெருமாளே.
    அன்று இறுதியில் வெற்றி பெற்ற சிவ பெருமான் வணங்க, காஞ்சீபுரத்தில் வீற்றிருக்கும் பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com