திருப்புகழ் 293 முடித்த குழலினர் (திருத்தணிகை)

தனத்த தனதன தனத்த தனதன
தனத்த தனதன ...... தனதான
முடித்த  குழலினர்  வடித்த  மொழியினர் 
முகத்தி  லிலகிய  ......  விழியாலும் 
முலைக்கி  ரிகள்மிசை  யசைத்த  துகிலினும் 
இளைத்த  இடையினு  ......  மயலாகிப் 
படுத்த  அணைதனி  லணைத்த  அவரொடு 
படிக்கு  ளநுதின  ......  முழலாதே 
பருத்த  மயில்மிசை  நினைத்த  பொழுதுன 
பதத்து  மலரிணை  ......  யருள்வாயே 
துடித்து  தசமுகன்  முடித்த  லைகள்விழ 
தொடுத்த  சரம்விடு  ......  ரகுராமன் 
துகைத்தி  வுலகையொ  ரடிக்கு  ளளவிடு 
துலக்க  அரிதிரு  ......  மருகோனே 
தடத்து  ளுறைகயல்  வயற்கு  ளெதிர்படு 
தழைத்த  கதலிக  ......  ளவைசாயத் 
தருக்கு  மெழிலுறு  திருத்த  ணிகையினில் 
தழைத்த  சரவண  ......  பெருமாளே. 
  • முடித்த குழலினர் வடித்த மொழியினர் முகத்தில் இலகிய விழியாலும்
    நன்றாக முடிந்த கூந்தலை உடையவர்கள், தேன் வடிகட்டினதென இனிக்கும் பேச்சுக்களை உடையவர்கள் ஆகிய விலைமாதர்கள் முகத்தில் விளங்கும் கண்ணாலும்,
  • முலைக் கிரிகள் மிசை அசைத்த துகிலினும் இளைத்த இடையினும் மயலாகி
    மலை போன்ற மார்பகங்கள் மீது அசைகின்ற ஆடையாலும், மெல்லிய இடையாலும் காம மயக்கம் கொண்டவனாகி,
  • படுத்த அணை தனில் அணைத்த அவரொடு படிக்குள் அநுதினம் உழலாதே
    படுத்த படுக்கையில் தழுவிய அந்த மாதர்களோடு இந்தப் பூமியில் நாள்தோறும் திரியாமல்,
  • பருத்த மயில் மிசை நினைத்த பொழுது உன பதத்து மலர் இணை அருள்வாயே
    பருமையான மயில் மேல் நினைத்த அந்தப் பொழுதிலேயே வந்து உனது பாத மலரடி இணைகளைத் தந்து அருள்வாயாக.
  • துடித்து தச முகன் முடித் தலைகள் விழ தொடுத்த சரம் விடு ரகுராமன்
    துடிதுடித்து பத்துத்தலை ராவணனுடைய கிரீடம் அணிந்த தலைகள் அறுபட்டு விழுமாறு பூட்டிய அம்பினைச் செலுத்திய ரகுராமனும்,
  • துகைத்து இவ்வுலகை ஒர் அடிக்குள் அளவிடு துலக்க அரி திரு மருகோனே
    பாதத்தால் மிதித்து இந்த உலகை ஓரடியால் அளந்து விளங்கக் காட்டியவனுமான திருமாலின் அழகிய மருகனே,
  • தடத்துள் உறை கயல் வயற்குள் எதிர் படு தழைத்த கதலிகள் அவை சாய
    குளத்தில் வாழ்கின்ற கயல் மீன்கள் வயல்களில் காணும்படி நீந்திச் செல்ல, தழைத்த வாழை மரங்கள் சாய்கின்ற
  • தருக்கும் எழில் உறு திருத்தணிகையினில் தழைத்த சரவண பெருமாளே.
    செழிப்பையும், அழகையும் கொண்ட திருத்தணிகையில் களிப்புடன் வீற்றிருக்கும் சரவணனே, பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com