தனத்த தத்ததனத் ...... தனதான
தனத்த தத்ததனத் ...... தனதான
நினைத்த தெத்தனையிற் ...... றவறாமல்
நிலைத்த புத்திதனைப் ...... பிரியாமற்
கனத்த தத்துவமுற் ...... றழியாமற்
கதித்த நித்தியசித் ...... தருள்வாயே
மனித்தர் பத்தர்தமக் ...... கெளியோனே
மதித்த முத்தமிழிற் ...... பெரியோனே
செனித்த புத்திரரிற் ...... சிறியோனே
திருத்த ணிப்பதியிற் ...... பெருமாளே.
- நினைத்தது எத்தனையில் தவறாமல்
நினைத்தது எந்த அளவும் தவறாமல் கைகூடவும், - நிலைத்த புத்திதனைப் பிரியாமல்
நிலையான ஞானத்தை விட்டு யான் பிரியாமல் இருக்கவும், - கனத்த தத்துவம் உற்றழியாமல்
பெருமை வாய்ந்த தத்துவங்களைக்* கடந்து அப்பாலான நிலையை யான் அடைந்து அழியாமல் இருக்கவும், - கதித்த நித்தியசித்தருள்வாயே
வெளிப்படுகின்ற நிரந்தரமான சித்தநிலையை நீ அருள்வாயாக. - மனித்தர் பத்தர்தமக்கு எளியோனே
மனிதர்களுக்குள் அன்புடையார்க்கு மிக எளியவனே, - மதித்த முத்தமிழில் பெரியோனே
மதிக்கப்படுகிற இயல், இசை, நாடகமாகும் முத்தமிழில் சிறந்தவனே, - செனித்த புத்திரரிற் சிறியோனே
சிவ மூர்த்தியிடம் தோன்றிய குமாரர்களுள் இளையவனே**, - திருத்தணிப்பதியிற் பெருமாளே.
திருத்தணிகைப் பதியில் எழுந்தருளியுள்ள பெருமாளே.



