திருப்புகழ் 230 மருவே செறித்த (சுவாமிமலை)

தனனா தனத்த தனனா தனத்த
தனனா தனத்த ...... தனதான
மருவே  செறித்த  குழலார்  மயக்கி 
மதனா  கமத்தின்  ......  விரகாலே 
மயலே  யெழுப்பி  யிதழே  யருத்த 
மலைபோல்  முலைக்கு  ......  ளுறவாகிப் 
பெருகாத  லுற்ற  தமியேனை  நித்தல் 
பிரியாது  பட்ச  ......  மறவாதே 
பிழையே  பொறுத்து  னிருதாளி  லுற்ற 
பெருவாழ்வு  பற்ற  ......  அருள்வாயே 
குருவா  யரற்கு  முபதேசம்  வைத்த 
குகனே  குறத்தி  ......  மணவாளா 
குளிர்கா  மிகுத்த  வளர்பூக  மெத்து 
குடகா  விரிக்கு  ......  வடபாலார் 
திருவே  ரகத்தி  லுறைவா  யுமைக்கோர் 
சிறுவா  கரிக்கு  ......  மிளையோனே 
திருமால்  தனக்கு  மருகா  வரக்கர் 
சிரமே  துணித்த  ......  பெருமாளே. 
  • மருவே செறித்த
    மருக்கொழுந்து வாசனை மிகுந்த
  • குழலார் மயக்கி
    கூந்தலையுடைய பெண்கள் என்னை மயக்கி
  • மதனா கமத்தின்
    காம சாஸ்திரத்தின்
  • விரகாலே
    தந்திர வகைகளாலே
  • மயலே யெழுப்பி
    மோகத்தை மூட்டிவிட்டு,
  • இதழே யருத்த
    வாயிதழ் ஊறலை ஊட்டிவிட,
  • மலைபோல் முலைக்குள்
    மலைபோன்ற அவர்களின் மார்பகங்களில்
  • உறவாகிப் பெருகாத லுற்ற
    விருப்பங்கொண்டு மிக்க ஆசை பூண்ட
  • தமியேனை நித்தல் பிரியாது
    அடியேனை நித்தமும் பிரியாமலும்,
  • பட்ச மறவாதே
    என்னிடம் அன்பு மாறாமலும்,
  • பிழையே பொறுத்து
    என் பிழைகளைப் பொறுத்து
  • உனிருதாளி லுற்ற
    உன் இரண்டு திருவடிகளிலும் பொருந்தியுள்ள
  • பெருவாழ்வு பற்ற
    பேரின்பப் பெருவாழ்வை யான் பற்றும்படியாக
  • அருள்வாயே
    அருள் புரிவாயாக.
  • குருவா யரற்கும்
    குருமூர்த்தியாக நின்று சிவபெருமானுக்கும்
  • உபதேசம் வைத்த
    பிரணவ மந்திரத்தை உபதேசம் செய்த
  • குகனே குறத்தி மணவாளா
    குகனே, குறத்தி வள்ளியின் மணவாளனே,
  • குளிர்கா மிகுத்த
    குளிர்ந்த சோலைகளால் நிறைந்த,
  • வளர்பூக மெத்து
    வளர்ந்தோங்கிய கமுக மரங்கள் சூழ்ந்த,
  • குடகா விரிக்கு வடபாலார்
    மேற்கினின்று வரும் காவிரிக்கு வடபாலுள்ள
  • திருவேரகத்தில் உறைவாய்
    திருவேரகமாம் சுவாமிமலையில் வாழ்பவனே,
  • உமைக்கொர் சிறுவா
    உமாதேவியின் ஒப்பற்ற மகனே,
  • கரிக்கு மிளையோனே
    யானைமுகக் கணபதிக்குத் தம்பியே,
  • திருமால் தனக்கு மருகா
    திருமாலுக்கு மருமகனே,
  • அரக்கர் சிரமே துணித்த பெருமாளே.
    அரக்கரின் சிரங்களை வெட்டியெறிந்த பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com