திருப்புகழ் 227 பலகாதல் பெற்றிட (சுவாமிமலை)

தனதான தத்ததன தனதான தத்த
தனதான தத்ததன ...... தனதான
பலகாதல்  பெற்றிடவு  மொருநாழி  கைக்குளொரு 
பலனேபெ  றப்பரவு  ......  கயவாலே 
பலபேரை  மெச்சிவரு  தொழிலேசெ  லுத்தியுடல் 
பதறாமல்  வெட்கமறு  ......  வகைகூறி 
விலகாத  லச்சைதணி  மலையாமு  லைச்சியர்கள் 
வினையேமி  குத்தவர்கள்  ......  தொழிலாலே 
விடமேகொ  டுத்துவெகு  பொருளேப  றித்தருளும் 
விலைமாதர்  பொய்க்கலவி  ......  யினிதாமோ 
மலையேயெ  டுத்தருளு  மொருவாள  ரக்கனுடல் 
வடமேரெ  னத்தரையில்  ......  விழவேதான் 
வகையாவி  டுத்தகணை  யுடையான்ம  கிழ்ச்சிபெறு 
மருகாக  டப்பமல  ......  ரணிமார்பா 
சிலகாவி  யத்துறைக  ளுணர்வோர்ப  டித்ததமிழ் 
செவியார  வைத்தருளு  ......  முருகோனே 
சிவனார்த  மக்குரிய  வுபதேச  வித்தையருள் 
திருவேர  கத்தில்வரு  ......  பெருமாளே. 
  • பல காதல் பெற்றிடவும் ஒரு நாழிகைக்குள் ஒரு பலனே பெறப் பரவு கயவாலே
    பல பேர்களுடைய காதலைப் பெற்றிடவும் ஒரு நாழிகைப் பொழுதுக்குள் ஒரு பலனைப் பெற வேண்டியும் சூழ்ச்சி செய்யும் களவுச் செயலாலே,
  • பல பேரை மெச்சி வரு தொழிலே செலுத்தி உடல் பதறாமல் வெட்கம் அறு வகை கூறி
    பல பேர்களை மெச்சி வருகின்ற தொழில்களையே நடத்தி உடல் பதறுதல் இல்லாமல் வெட்கம் அற்றவகையில் பேசி,
  • விலகாத லச்சை தணி மலையாம் முலைச்சியர்கள் வினையே மிகுத்தவர்கள்
    இயற்கையில் நீங்காத நாணம் தணிந்த, மலை போன்ற மார்பகத்தைக் காட்டி பொது மகளிர் தங்கள் தொழிலில் மிகவும் சாமர்த்தியமாக ஈடுபடுபவர்கள்.
  • தொழிலாலே விடமே கொடுத்து வெகு பொருளே பறித்து அருளும் விலைமாதர் பொய்க் கலவி இனிதாமோ
    விஷத்தைக் (குடிக்கக்) கொடுத்து (காமுகரின்) எல்லாப் பொருளையும் அபகரிக்கும் விலை மகளிர்களின் பொய்யான கலவி இன்பம் இனிமை ஆகுமோ?
  • மலையே எடுத்து அருளும் ஒரு வாள் அரக்கன் உடல் வட மேரு எனத் தரையில் விழவேதான்
    (கயிலை) மலையை எடுத்தவனும், ஒப்பற்ற வாளை ஏந்திய அரக்கனும் ஆகிய ராவணனுடைய உடல் வடக்கே உள்ள மேருவே விழுந்தது என்னும்படி தரையில் விழவே,
  • வகையா விடுத்த கணை உடையான் மகிழ்ச்சி பெறு மருகா கடப்ப மலர் அணி மார்பா
    தக்க விதத்தில் செலுத்திய அம்பை உடையவனாகிய ராமனாகிய திருமால் மகிழும் மருகனே, கடப்ப மாலையை அணிந்த மார்பனே,
  • சில காவியத் துறைகள் உணர்வோர் படித்த தமிழ் செவியார வைத்து அருளும் முருகோனே
    சில காவிய நூல்களின் உண்மைப் பொருளை அறிந்த அறிஞர்கள் ஓதிய தமிழை செவிகுளிர ஏற்றருளும் முருகனே,
  • சிவனார் தமக்குரிய உபதேச வித்தை அருள் திருவேரகத்தில் வரும் பெருமாளே.
    சிவ பெருமானுக்கு உரிய உபதேச மூல மந்திரத்தை அருளி, சுவாமி மலையில் எழுந்தருளியிருக்கும் பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com