தனதன தனதன ...... தனதான
தனதன தனதன ...... தனதான
நிறைமதி முகமெனு ...... மொளியாலே
நெறிவிழி கணையெனு ...... நிகராலே
உறவுகொள் மடவர்க ...... ளுறவாமோ
உனதிரு வடியினி ...... யருள்வாயே
மறைபயி லரிதிரு ...... மருகோனே
மருவல ரசுரர்கள் ...... குலகாலா
குறமகள் தனைமண ...... மருள்வோனே
குருமலை மருவிய ...... பெருமாளே.
- நிறைமதி முகமெனும்
பூரண சந்திரன் போன்ற முகத்தின் - ஒளியாலே
பிரகாசத்தாலும், - நெறிவிழி
வழிகாட்டியாக இருக்க வேண்டிய கண்கள் - கணையெனு நிகராலே
அம்பு போலச் செய்யும் போரினாலும், - உறவுகொள் மடவர்கள்
சொந்தம் கொண்டாடுகின்ற மாதர்களின் - உறவாமோ
உறவு ஆகுமோ? (ஆகாது என்ற படிக்கு) - உனதிரு வடியினி
உன்னிரு திருவடிகளை இனியாகிலும் - யருள்வாயே
தந்தருள்வாயாக. - மறைபயி லரிதிரு மருகோனே
வேதங்களில் சொல்லப்படும் திருமால், இலக்குமியின் மருகோனே, - மருவல ரசுரர்கள்
பகைவர்களாம் அசுரர்களின் - குலகாலா
குலத்தை அழித்த காலனே, - குறமகள் தனை
குறத்தி வள்ளியை - மண மருள்வோனே
திருமணம் செய்து அருளியவனே, - குருமலை மருவிய பெருமாளே.
குருமலை (திருவேரகம்) வீற்றிருக்கும் பெருமாளே.