திருப்புகழ் 201 அவாமருவு (சுவாமிமலை)

தனாதன தனாதன தனாதன தனாதன
தனாதனன தானந் ...... தனதானா
அவாமரு  வினாவசு  தைகாணும  டவாரெனு 
மவார்கனலில்  வாழ்வென்  ......  றுணராதே 
அராநுக  ரவாதையு  றுதேரைக  திநாடும 
றிவாகியுள  மால்கொண்  ......  டதனாலே 
சிவாயவெ  னுநாமமொ  ருகாலுநி  னையாததி 
மிராகரனை  வாவென்  ......  றருள்வாயே 
திரோதம  லமாறும  டியார்கள  ருமாதவர் 
தியானமுறு  பாதந்  ......  தருவாயே 
உவாவினி  யகானுவி  னிலாவும  யில்வாகன 
முலாசமுட  னேறுங்  ......  கழலோனே 
உலாவுத  யபாநுச  தகோடியு  ருவானவொ 
ளிவாகுமயில்  வேலங்  ......  கையிலோனே 
துவாதச  புயாசல  ஷடாநந  வராசிவ 
சுதாஎயினர்  மானன்  ......  புடையோனே 
சுராதிப  திமாலய  னுமாலொடு  சலாமிடு 
சுவாமிமலை  வாழும்  ......  பெருமாளே. 
  • அவாமருவு இ(ன்)னா
    ஆசை ஏற்படுத்துகின்ற துன்பம் விளைவதற்கு
  • வசுதை
    மண்ணாசையும்,
  • காணுமடவாரெனும்
    விரும்பிப் பார்க்கின்ற இளம் மாதர்கள் என்ற பெண்ணாசையும் காரணமாம்.
  • அவார்கனலில் வாழ்வென்றுணராதே
    அவர்களுடன் வாழ்க்கை நெருப்பின் மேல் வாழ்வு என்றுணராமல்
  • அராநுகர வாதையுறு தேரைகதி
    பாம்பின் வாயில் அகப்பட்டு துன்பமுறு தவளையின் கதி அடைந்த
  • நாடும் அறிவாகி
    அந்நிலையிலும் இன்பத்தை நாடும் அறிவுடையவனாகி
  • உளம் மால்கொண்டு அதனாலே
    உள்ளத்தில் மயக்கம் கொண்டு அதன் காரணமாக
  • சிவாயவெனு நாமமொருகாலும் நினையாத
    சிவாய என்ற திருமந்திரத்தை ஒருபோதும் நினைக்காத
  • திமிர ஆகரனை
    அஞ்ஞான இருளுக்கு இருப்பிடமாக உள்ள அடியேனை,
  • வாவென்று அருள்வாயே
    உன் திருவடியில் சேர்ந்து இன்புற வருக என்றழைத்து அருள்வாயாக.
  • திரோத மலமாறும் அடியார்கள்
    உன்னை மறத்தல் என்ற குற்றம் இல்லாத மெய்யடியார்களாலும்,
  • அருமாதவர் தியானமுறு
    அரிய பெரிய தவ முனிவர்களாலும் தியானம் செய்யப்படும்
  • பாதந் தருவாயே
    உன் திருவடிகளைத் தந்தருள்வாயாக.
  • உவா இனிய கானுவில் நிலாவும்
    இளமைமிகுந்து, இனிய கானகத்தில் ஒளிவீசித் திரியும்
  • மயில்வாகனம்
    மயிலை வாகனமாகக் கொண்டு,
  • உலாசமுடன் ஏறுங் கழலோனே
    அதன்மீது குதூகலத்துடன் ஏறும் வீரக் கழலோனே,
  • உலா உதயபாநு சதகோடி உருவான
    வானில் உலாவும் உதய சூரியர்கள் நூறு கோடி கூடினாற்போல
  • ஒளிவாகும் அயில் வேல் அங்கையிலோனே
    ஒளிபடைத்த அழகிய கூர் வேல் திருக்கரத்துள்ளோனே,
  • துவாதச புயாசல
    பன்னிரண்டு மலைபோன்ற புயங்களை உடையவனே,
  • ஷடாநந வரா சிவசுதா
    ஆறுமுகக் கடவுளே, சிறந்தவனே, சிவனின் சேயே,
  • எயினர் மான் அன்புடையோனே
    வேடர் குலத்து மான் போன்ற வள்ளியிடம் அன்புடையவனே,
  • சுராதிபதி மால் அயனு மாலொடு
    தேவேந்திரனும், திருமாலும், பிரம்மனும் அன்போடு
  • சலாமிடு*
    வணக்கம் செய்கின்ற
  • சுவாமிமலை வாழும் பெருமாளே.
    சுவாமிமலையில் வாழ்கின்ற பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com