திருப்புகழ் · 1337காதின்மணி ஓலை (பொதுப்பாடல்கள்)
kAdhinmaNi Olai
தானதன தானதத்த ...... தனதான
காதின்மணி ஓலையிட்டு ...... வருமானார்
காமவலை யூடுபுக்கு ...... மதிமாழ்கி
நீதிநெறி யேவிடுத்து ...... அலையாதே
நீயுன்இரு தாள்அளிக்க ...... வரவேணும்
ஆதிமக மாயிபெற்ற ...... குமரேசா
ஆறுமுக மேபடைத்த ...... குருநாதா
தீதில்அடி யார்மனத்தில் ...... உறைவோனே
தேவர்குடி வாழவைத்த ...... பெருமாளே.
பத உரை · word meanings
- காதின்மணி ஓலையிட்டு
காதில் மணி, காதோலை இவற்றை அணிந்து - காமவலை யூடுபுக்கு
காமத்தை ஊட்டுகின்ற வலையிலே நான் புகுந்து - மதிமாழ்கி
என்னுடைய (மதி) புத்தி அழிந்து - நீதி நெறியேவிடுத்து
நீதி நெறிமுறைகளை நான் அனுசரிக்காமல் - அலையாதே
நான் அலையாமல் - நீயுன் இரு தாள் அளிக்க வரவேணும்
நீ உன்னுடைய இரண்டு திருவடிகளையும் எனக்கு அளிக்க வரவேண்டும் - ஆதி மகமாயி பெற்ற குமரேசா
ஆதி மகமாயி பரமேஸ்வரி பெற்ற குமரேசனே - ஆறு முகமே படைத்த குருநாதா
ஆறு திருமுகங்களைக் கொண்டுள்ள குருநாதனே - தீது இல் அடியார் மனத்தில் உறைவோனே
குற்றம் இல்லாத அடியார்கள் மனத்தில் உறைகின்ற பெருமானே - தேவர் குடி வாழவைத்த பெருமாளே.
தேவர்களின் குலத்தை வாழவைத்த பெருமை மிக்கவரே. (உன்னுடைய இரண்டு திருவடிகளையும் எனக்கு அளிக்க நீ வரவேண்டும்.)



