தத்தனத் தத்தனத் தத்தனத் தத்தனத்
தத்தனத் தத்தனத் ...... தனதான
பற்றநெட் டைப்படைத் துட்டிருட் டைத்தயிர்ப்
பத்தைமுட் டிப்படுத் ...... தயில்மாதர்
பக்கமிட் டுப்பொருட் கொட்குமிட் டப்பரப்
பற்றுகெட் டுப்பயிர்க் ...... களைபோலுங்
கற்றகட் டுக்கவிக் கொட்டமொட் டிக்கனைத்
திட்டுகத் தத்தினுற் ...... றகமாயுங்
கட்டமற் றுக்கழற் பற்றிமுத் திக்கருத்
தொக்கநொக் குக்கணித் ...... தருள்வாயே
வற்றவட் டக்கடற் கிட்டிவட் டித்துரத்
திட்டுமட் டுப்படப் ...... பொருமாயன்
மற்றுமொப் புத்தரித் தெட்டஎட் டப்புறத்
துற்றஅத் தர்க்கருட் ...... பெருவாழ்வே
செற்றமுற் றச்சினத் திட்டுநெட் டைப்பொருப்
பெட்டைமுட் டிச்செருச் ...... செயும்வேலா
சித்தர்சித் தத்துறப் பற்றிமெத் தப்புகழ்ச்
செப்புமுத் தித்தமிழ்ப் ...... பெருமாளே.
- நெட்டை பற்றப் படைத்து உள் து இருள் தைத்து அயிர்ப்பு
அ(த்)தை முட்டிப் படுத்து அயில் மாதர்
செருக்கை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு, மனம் உட்கொண்டுள்ள அஞ்ஞான இருள் நன்கு பதிந்து, சந்தேகக் கவலைகளைக் கொண்டு, முஷ்டி யுத்தத்தில் தாக்குவது போல் தாக்குகின்ற, வேல் போன்ற கண்களை உடைய விலைமாதர்கள் மீது - பக்கம் இட்டுப் பொருள் கொள் குமிட்டப் பரம் பற்று கெட்டு
நட்பு வைத்து, அவர்களுக்குப் பொருள் கொண்டு வந்து திரட்ட, பரம்பொருளின் மேல் இருக்க வேண்டிய பற்றே இல்லாது போய், - பயிர் களை போலும் கற்ற கட்டுக் கவி கொட்டம் ஒட்டிக்
கனைத்திட்டு கத் தத்தினுற்று அகம் மாயும் கட்டம் அற்று
பயிரில் இருந்து பிடுங்கி எடுக்க வேண்டிய களைகளைப் போன்ற, (நான்) கற்றுள்ளதும், (நான்) கட்டியுள்ளதுமான பாடல்களை முழக்கத்துடன் சேர்த்து, ஒரு கனைப்பு கனைத்து (அவர்கள் முன்) உரக்கக் கத்திப் பாடி, உள்ளம் சோர்ந்து குலைகின்ற துன்பம் நீங்கி, - கழல் பற்றி முத்திக் கருத்து ஒக்க நொக்குக் கணித்து
அருள்வாயே
உனது திருவடிகளைப் பற்றி முக்தி பெற வேண்டும் என்ற எண்ணம் கூடிட, என்னைக் கடைக் கண்ணால் நோக்கி அருள் புரிவாயாக. - வட்டக் கடல் வற்ற கிட்டி வட்டித் துரத்திட்டு மட்டுப் படப்
பொரு மாயன்
வட்ட வடிவமான கடல் வற்றிப் போக அணுகிச் சென்று, அசுரர்கள் சுழன்று உருண்டு ஓடும்படி துரத்தி, அவர்கள் சிறுமைப்படும்படி சண்டை செய்த திருமால், - மற்றும் ஒப்புத் தரித்து எட்ட எட்டப் புறத்து உற்ற அத்தர்க்கு
அருள் பெரு வாழ்வே
பின்னும், நமக்கு இணையானது என்று மனதில் நினைத்து எட்டி எட்டிப் பார்த்தும் (பன்றி உருவுடன் பாதாளம் வரை சென்று பார்த்தும்) (தோண்டப்பட்ட அளவுக்கும்) அப்பால் போய்க் கொண்டிருந்த திருவடிகளை உடைய தந்தையாகிய சிவபெருமானுக்கு உபதேசித்து அருளிய பெருஞ் செல்வமே, - செற்ற(ம்) முற்றச் சினத்திட்டு நெட்டைப் பொருப்பு எட்டை
முட்டிச் செரு செயும் வேலா
வெறுப்பு முதிர்ச்சி அடைய கோபித்து, நீண்டிருந்த எட்டு மலைகளில் வசித்திருந்த அசுரர்களை முட்டித் தாக்கி போர் புரிந்த வேலினை உடையவனே, - சித்தர் சித்தத்து உறப் பற்றி மெத்தப் புகழ்ச் செப்பு முத்தித்
தமிழ்ப் பெருமாளே.
சித்தர்கள் தமது மனத்தில் ஆழ்ந்து நிலைக்கும்படி நிரம்ப உனது புகழைப் பாட, முக்தியைத் தர வல்ல பெருமாளே, தமிழ்க் கடவுளாகிய பெருமாளே.