தானன தனன தானன தனன
தானன தனன ...... தனதான
தோரண கனக வாசலில் முழவு
தோல்முர சதிர ...... முதிராத
தோகையர் கவரி வீசவ யிரியர்
தோள்வலி புகழ ...... மதகோப
வாரண ரதப தாகினி துரக
மாதிர நிறைய ...... அரசாகி
வாழினும் வறுமை கூரினு நினது
வார்கழ லொழிய ...... மொழியேனே
பூரண புவன காரண சவரி
பூதர புளக ...... தனபார
பூஷண நிருதர் தூஷண விபுதர்
பூபதி நகரி ...... குடியேற
ஆரண வனச ஈரிரு குடுமி
ஆரியன் வெருவ ...... மயிலேறு
மாரிய பரம ஞானமு மழகு
மாண்மையு முடைய ...... பெருமாளே.
- தோரண கனக வாசலில் முழவு தோல்முரசு அதிர
தோரணங்கள் கட்டிய அழகிய அரண்மனை வாசலில், முழவு, தோல் முரசு முதலிய வாத்தியம் ஒலிக்க, - முதிராத தோகையர் கவரி வீச
இளம்பருவப் பெண்கள் சாமரம் வீச, - வயிரியர் தோள்வலி புகழ
புகழ்ந்து பாடும் பாடகர்கள் என் புஜ பராக்ரமத்தைப் புகழ, - மதகோப வாரண ரத ப தாகினி துரக மாதிர நிறைய
மதமும் கோபமும் கொண்ட யானைகள், தேர்கள், காலாட்படைகள், குதிரைகள் திசை நிரம்பி விளங்க, - அரசாகி வாழினும் வறுமை கூரினு
நான் ஓர் அரசனாகி வாழ்ந்தாலும் சரி, வறுமை நிலை மிகுந்து பாடுபட்டாலும் சரி, - நினது வார்கழ லொழிய மொழியேனே
உனது திவ்யமான திருவடிகளைத் தவிர வேறு எதையும், வேறு யாரையும் புகழ மாட்டேன். - பூரண புவன காரண
முழு முதற் கடவுளே, உலகங்களுக்கு மூலாதார மூர்த்தியே, - சவரி பூதர புளக தனபார பூஷண
குறப்பெண் வள்ளியின் மலையைப் போன்ற பெரிய இனிய மார்பகங்களை அணிந்த மார்பனே, - நிருதர் தூஷண
அசுரர்களை நிந்தித்துக் கண்டிப்பவனே, - விபுதர் பூபதி நகரி குடியேற
தேவர்களின் தலைவனான இந்திரன் அமரலோகத்தில் மீண்டும் குடியேறும்படியும், - ஆரண வனச ஈரிரு குடுமி ஆரியன் வெருவ
வேதம் ஓதுபவனும், தாமரையில் அமர்ந்தவனும், நான்கு குடுமிகளை உடையவனும் ஆகிய பெரியோனாம் பிரமன் அச்சம் கொள்ளும்படியாகவும், - மயிலேறும் ஆரிய
மயில் மீது ஏறிவரும் பெரியவனே, - பரம ஞானமும் அழகும் ஆண்மையும் உடைய பெருமாளே.
மேலான ஞானத்தையும், அழகையும், பராக்ரமத்தையும் உடைய பெருமாளே.