திருப்புகழ் 1153 குனகியொரு மயில் (பொதுப்பாடல்கள்)

தனதனன தனதான தானான தானான
தனதனன தனதான தானான தானான
தனதனன தனதான தானான தானான ...... தனதான
குனகியொரு  மயில்போல  வாராம  னோலீலை 
விளையவினை  நினையாம  லேயேகி  மீளாத 
கொடியமன  தநியாய  மாபாத  காபோதி  ......  யெனஆசைக் 
கொளுவஅதில்  மயலாகி  வீறோடு  போய்நீள 
மலரமளி  தனிலேறி  யாமாறு  போமாறு 
குலவிநல  மொழிகூறி  வாரேறு  பூணார  ......  முலைமூழ்கி 
மனமுருக  மதராஜ  கோலாடு  மாபூசல் 
விளையவிழி  சுழலாடி  மேலோதி  போய்மீள 
மதிவதன  மொளிவீச  நீராள  மாய்மேவி  ......  யநுராக 
வகைவகையி  லதிமோக  வாராழி  யூடான 
பொருளளவ  தளவாக  யாரோடு  மாலான 
வனிதையர்கள்  வசமாய  நாயேனு  மீடேற  ......  அருள்வாயே 
எனதுமொழி  வழுவாமல்  நீயேகு  கான்மீதி 
லெனவிரகு  குலையாத  மாதாவு  நேரோத 
இசையுமொழி  தவறாம  லேயேகி  மாமாது  ......  மிளையோனும் 
இனிமையொடு  வருமாய  மாரீச  மானாவி 
குலையவரு  கரதூஷ  ணாவீரர்  போர்மாள 
இறுகிநெடு  மரமேழு  தூளாக  வேவாலி  ......  யுயிர்சீறி 
அநுமனொடு  கவிகூட  வாராக  நீராழி 
யடைசெய்தணை  தனிலேறி  மாபாவி  யூர்மேவி 
அவுணர்கிளை  கெடநூறி  யாலால  மாகோப  ......  நிருதேசன் 
அருணமணி  திகழ்பார  வீராக  ராமோலி 
யொருபதுமொர்  கணைவீழ  வேமோது  போராளி 
அடல்மருக  குமரேச  மேலாய  வானோர்கள்  ......  பெருமாளே. 
  • குனகி ஒரு மயில் போல வாரா மனோ லீலை விளைய வினை நினையாமலே ஏகி மீளாத கொடிய மனத அநியாய மா பாத காபோதி என
    கொஞ்சிக் குலவி ஒப்பற்ற மயில் போல் வந்து, மனத்தில் காம லீலைகள் தோன்ற (அதனால்) உண்டாகும் பயன்களை யோசியாமல், அந்தத் தீய வழியிலேயே சென்று (அவ் வழியினின்றும்) திரும்பி வராமல் (காலம் கழித்து) தீய மனதுடன், நியாயம் அற்ற பெரிய பாதக நெறியில் செல்லும் குருடன் இவன் என்று சொல்லும்படி,
  • ஆசைக் கொளுவ அதில் மயலாகி வீறோடு போய் நீள மலர் அமளி தனில் ஏறி ஆமாறு போமாறு குலவி நல மொழி கூறி வார் ஏறு பூணார முலை மூழ்கி
    (மண், பெண், பொன் என்னும்) ஆசைகள் கொழுந்து விட்டு எரிய, அவற்றில் மயக்கம் கொண்டவனாய், தற்பெருமையுடன் நடந்தவனாய், நீண்ட காலம் மலர்ப் படுக்கையில் ஏறி, மேலான நிலைக்கு வரும் வழிகள் எல்லாம் கெட்டழியும்படி (வேசியர்களிடம்) கொஞ்சிப் பேசி இன்பமான பேச்சுக்களை மொழிந்து, கச்சு அணிந்துள்ளதும் முத்து மாலையைக் கொண்டதுமான மார்பகங்களில் முழுகி,
  • மனம் உருக மத ராஜ கோல் ஆடு மா பூசல் விளைய விழி சுழலாடி மேல் ஓதி போய் மீள மதிவதனம் ஒளி வீச நீராளமாய் மேவி அநுராக
    மனம் உருக, மன்மதனுடைய பாணங்கள் இயற்றும் பெரிய காமப் போர் உண்டாக, கண்கள் சுழன்று, மேலே உள்ள கூந்தலை எட்டிப் பார்ப்பது போல அணுகி மீள, நிலவின் ஒளியைக் கொண்ட முகம் ஒளி வீச, வேர்வை நீர் மிகவும் பெருகி, காமப் பற்று ஊறி,
  • வகை வகையில் அதி மோக வாராழி ஊடானபொருள் அளவு அது அளவாக யாரோடு(ம்) மால் ஆன வனிதையர்கள் வசமாய நாயேனும் ஈடேற அருள்வாயே
    விதம் விதமாக, மிக்க மோகம் என்னும் பெரிய கடலிடையே கிடைக்கும் (காமுகரால் கொடுக்கப்பட்ட) பொருளின் அளவுக்குத் தக்கபடி எல்லாரிடமும் காம இச்சையைக் காட்டும் விலைமாதர்களின் வசப்பட்டு நாயினும் கீழான அடியேனும் ஈடேறும் பொருட்டு அருள் புரிவாயாக.
  • எனது மொழி வழுவாமல் நீ ஏகு கான் மீதில் என விரகு குலையாத மாதாவு(ம்) நேர் ஓத இசையும் மொழி தவறாமலே ஏகி மா மாது(ம்) இளையோனும் இனிமையொடு
    என்னுடைய பேச்சு தவறாமல் நீ காட்டுக்குப் போவாயாக என்று வஞ்சகம் குறைவு படாத மாதாவாகிய கைகேயியும் எடுத்துச் சொல்ல, சொன்ன சொல் தவறாமல் லக்ஷ்மி போன்ற சீதையும் தம்பி இலக்குமணனும் விருப்பமுடன் கூட வர காட்டுக்குப் போய்,
  • வரு மாய மாரீச மான் ஆவி குலைய வரு கர தூஷணா வீரர் போர் மாள இறுகி நெடு மரம் ஏழு தூளாகவே வாலி உயிர் சீறி
    காட்டிடை வந்த மாய மானாகிய மாரீசன் உயிர் துறக்க, போருக்கு வந்த கர, துஷணர்கள் முதலிய வீரர்கள் கொல்லப்பட, உறுதியாக இருந்த மராமரங்கள் ஏழும் ராமபாணத்தால் துளைபட, வாலியின் உயிர் மடிய,
  • அநுமனொடு கவி கூட வாராக(ம்) நீர் ஆழி அடை செய்து அணை தனில் ஏறி மா பாவி ஊர் மேவி அவுணர் கிளை கெட நூறி
    அனுமனோடு குரங்குகளும் கூடிவர கடலாகிய நீரை அணையிட்டு அடைத்து, அந்த அணை மீதில் ஏறிச் சென்று பெரிய பாதகனாகிய இராவணனுடைய ஊராகிய இலங்கைக்குப் போய் அரக்கர்களுடைய கூட்டம் எல்லாம் மாளப் பொடி செய்து,
  • ஆலால(ம்) மா கோப நிருதேசன் அருண மணி திகழ் பார வீராகரா மோலி ஒரு பதும் ஒர் கணை வீழவே மோது போராளி அடல் மருக
    ஆலகால விஷம் போல பெரிய கோபத்துடன் வந்த அரக்கர் தலைவனான இராவணனுடைய சிவந்த இரத்தினங்கள் விளங்குவதும், கனத்ததுமான மகுடங்கள் ஒரு பத்தும் ஒரே அம்பால் அற்று விழும்படி தாக்கிய போர் வீரனான திருமாலின் வலிமை நிரம்பிய மருகனே,
  • குமரேச மேலாய வானோர்கள் பெருமாளே.
    குமரேசனே, மேம்பட்ட தேவர்களின் பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com