திருப்புகழ் 1126 ஆராத காதலாகி (பொதுப்பாடல்கள்)

தானான தான தான தானன
தானான தான தான தானன
தானான தான தான தானன ...... தந்ததான
ஆராத  காத  லாகி  மாதர்த 
மாபாத  சூட  மீதி  லேவிழி 
யாலோல  னாய்வி  கார  மாகியி  ......  லஞ்சியாலே 
ஆசாப  சாசு  மூடி  மேலிட 
ஆசார  வீன  னாகி  யேமிக 
ஆபாச  னாகி  யோடி  நாளும  ......  ழிந்திடாதே 
ஈராறு  தோளு  மாறு  மாமுக 
மோடாரு  நீப  வாச  மாலையு 
மேறான  தோகை  நீல  வாசியு  ......  மன்பினாலே 
ஏனோரு  மோது  மாறு  தீதற 
நானாசு  பாடி  யாடி  நாடொறு 
மீடேறு  மாறு  ஞான  போதக  ......  மன்புறாதோ 
வாராகி  நீள்க  பாலி  மாலினி 
மாமாயி  யாயி  தேவி  யாமளை 
வாசாம  கோச  ராப  ராபரை  ......  யிங்குளாயி 
வாதாடி  மோடி  காடு  காளுமை 
மாஞால  லீலி  யால  போசனி 
மாகாளி  சூலி  வாலை  யோகினி  ......  யம்பவானி 
சூராரி  மாபு  ராரி  கோமளை 
தூளாய  பூதி  பூசு  நாரணி 
சோணாச  லாதி  லோக  நாயகி  ......  தந்தவாழ்வே 
தோளாலும்  வாளி  னாலு  மாறிடு 
தோலாத  வான  நாடு  சூறைகொள் 
சூராரி  யேவி  சாக  னேசுரர்  ......  தம்பிரானே. 
  • ஆராத காத லாகி மாதர்தம்
    அடக்க முடியாத மோகம் கொண்டு, பெண்களுடைய
  • ஆபாத சூட மீதி லே
    உள்ளங்கால் முதல் உச்சந்தலை வரையுள்ள அங்கங்களிலே
  • விழி யாலோலனாய் விகாரமாகி
    கண்கள் ஈடுபடுவதால் காமுகனாகி மன விகாரம் அடைந்து
  • இலஞ்சியாலே ஆசா பசாசு மூடி மேலிட
    குணம் கெட்டு, ஆசை என்ற பேய் என்னைக் கவர்ந்து ஆட்கொள்ள,
  • ஆசார வீனனாகியே
    நான் ஆசாரக் குறைவுபட்டவனாக,
  • மிக ஆபாசனாகி யோடி நாளும் அழிந்திடாதே
    மிகவும் அசுத்தனாக, இங்கும் அங்கும் ஓடி தினமும் கெட்டழியாமல் இருக்க,
  • ஈராறு தோளும் ஆறு மாமுகமோடு
    பன்னிரண்டு தோள்களுடனும், ஆறு திருமுகங்களுடனும்,
  • ஆரு நீப வாச மாலையும்
    நிறைந்த வாசனையுள்ள கடப்ப மலர் மாலையுடனும்,
  • ஏறான தோகை நீல வாசியும்
    ஆண் மயிலாகிய நீல நிறக் குதிரையுடனும்,
  • அன்பினாலே ஏனோரும் ஓதுமாறு தீதற
    அன்பு பூண்டு பிற மக்களும் போற்றிப் புகழுமாறு, கேடுகள் நீங்க,
  • நானாசு பாடி யாடி நாடொறும் ஈடேறு மாறு
    நான் ஆசு* கவிகளைப்பாடியும், ஆடியும், தினமும் முன்னேறுமாறு,
  • ஞான போதகம் அன்புறாதோ
    ஞானோபதேசத்தை எனக்குச் செய்ய வருவதற்கு நீ அன்பு கொள்ளக் கூடாதோ? (இதன் பின்பு சுவாமிகள் தேவியின் துதி செய்கிறார்).
  • வாராகி நீள் கபாலி மாலினி
    வாராகி, பெரிய கபாலத்தைக் கையிலே ஏந்தியவள், மாலையை அணிந்தவள்,
  • மாமாயி யாயி தேவி யாமளை
    மகமாயி, ஆயி, தேவி, சியாமள நிறத்தினள்,
  • வாசா மகோசரா பராபரை இங்கு உள் ஆயி
    வாக்குக்கு எட்டாதவள், பராத்பரை, உள்ளத்தில் தங்குகிற தாய்,
  • வாதாடி மோடி காடுகாள் உமை
    சிவனுடன் வாதாடிய காளி, துர்க்கை, வனதேவதை, உமாதேவி,
  • மாஞால லீலி ஆல போசனி
    பெரிய பூமியிலே திருவிளையாடல்கள் புரிபவள், விஷத்தை உண்டவள்,
  • மாகாளி சூலி வாலை யோகினி
    மஹா காளி, சூலத்தை ஏந்தியவள், பாலாம்பிகை, யோகினி,
  • அம்பவானி சூராரி மாபுராரி கோமளை
    அழகிய பவானி, மகிஷாசுரமர்த்தனி, பெரும் திரிபுராந்தகி, அழகி,
  • தூளாய பூதி பூசு நாரணி
    திருநீற்றை விபூதியாகப் பூசிய மேனியளான நாராயணி,
  • சோணாசலாதி லோக நாயகி தந்தவாழ்வே
    திருவண்ணாமலையின் ஆதி தேவி, உலகநாயகி பெற்ற செல்வமே,
  • தோளாலும் வாளினாலு மாறிடு
    தோள்கொண்டும் வாள்கொண்டும் போரிட்டுப் பகைமை பூண்டவனும்,
  • தோலாத வான நாடு சூறைகொள்
    தோல்வியே இல்லாதவனும், தேவருலகைச் சூறையாடினவனுமான
  • சூராரியே விசாகனே சுரர் தம்பிரானே.
    சூரனைக் கொன்றவனே, விசாகனே, தேவர்களின் பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com